பேச்சுமொழியும்
எழுத்துமொழியும்
நுழையும்முன்
தமிழ்மொழி
பழமையும் புதுமையும் மிக்க சிறந்த மொழி. இது பேச்சுமொழி, எழுத்துமொழி என்னும் இரு
கூறுகளைக் கொண்டது. இவ்விரண்டு கூறுகளும் தமிழ்மொழிக் கற்றலில் முக்கியப்பங்கு
வகிக்கின்றன. அத்தகைய பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகியவற்றின் நுட்பங்களை அறிவோம் வாரீர்!
தனது
எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்டது
மொழி. அஃது
ஒருவர் கருத்தை மற்றொருவர் அறிந்து, செயல்பட உதவுகிறது. மொழியின் மூலமாகவே
மனிதர்களின் சிந்தனை
ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. மொழி
இல்லையேல் மனித சமுதாயம் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தை எட்டியிருக்க
முடியாது.
தொடக்க
காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுக்குள் தனித்தனியான ஒலிக்
குறியீடுகளை உருவாக்கிக் கொண்டனர். இதன் காரணமாகவே மொழிகள் பல தோன்றின.
மொழியின் வடிவங்கள்
வாயினால்
பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சுமொழியாகும். இவ்வாறு பேசுவதும்
கேட்பதும் மொழியின் முதல் நிலை. கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்படுவது
எழுத்துமொழியாகும். இவ்வாறு எழுதப்படுவதும் படிக்கப்படுவதும், மொழியின் இரண்டாம்
நிலை. நேரில் காணா இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க எழுத்துமொழி உதவுகிறது.
மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கும் எழுத்துமொழியே காரணமாகின்றது. ஒலி
வடிவில் அமையும் பேச்சுமொழியானது உடனடிப் பயன்பாட்டிற்கு உரியது. வரிவடிவில்
அமையும் எழுத்து மொழியானது நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உரியது. உலகில் சில
மொழிகள் பேச்சுமொழியாக மட்டுமே உள்ளன.
சில மொழிகள் எழுத்து மொழியாக மட்டுமே உள்ளன. ஆனால் தமிழ்மொழியில் பேச்சு, எழுத்து ஆகிய இரண்டு
வடிவங்களும் பயன்பாட்டில் உள்ளன. எனவே, தமிழை
இரட்டைவழக்கு மொழி என்பர்.
தெரிந்து தெளிவோம் பேச்சு மொழிக்கும் எழுத்து
மொழிக்கும் இடையே வேறுபாடு பெரிய அளவில் இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி ( Diglossic
Language) எனப்படும். தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும்
இடையே வேறுபாடு இருந்துள்ளது. தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு
என்று கூறியுள்ளார். |
பேச்சு மொழி
மொழியின்
உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியே என்பர்.
உணர்வுகளை எளிதாக
வெளிப்படுத்துவது பேச்சுமொழியே. பேச்சுமொழி எளிமையானது; கருத்தை வெளிப்படுத்துவதை
மட்டுமே நோக்கமாகக் கொண்டது; பேசப்படும்
சொற்கள் மட்டுமன்றிப் பேசுபவரின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும்
பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.
தெரிந்து தெளிவோம் ‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே
உண்மையான மொழி; ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக்
கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது,
நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்’ - மு.வரதராசனார் |
|
பேச்சு மொழியில் பொருள்
வேறுபாடு
பேசப்படும்
சூழலைப் பொருத்துப் பேச்சுமொழியின் பொருள் வேறுபடும். எடுத்துக்காட்டாக, ’கவனி’
என்னும் சொல்
’குழந்தையை
நல்லாக் கவனிங்க’ என்று கூறும்போது ’பேணுதல்’ என்னும் பொருளைத் தருகிறது. நில், கவனி, செல் என்று கூறும்போது நின்று, கவனித்து, செல் என்னும் பாதுகாப்புப்
பொருளைத் தருகிறது. அதுபோலவே ஒலிப்பதன் ஏற்ற
இறக்கமும் பொருள் வேறுபாட்டைத் தரும். எடுத்துக்காட்டாக ’என்னால போக முடியாது’
என்னும் தொடர் ஓங்கி ஒலிக்கும் போது மறுப்பை உணர்த்துகிறது. மென்மையாக ஒலிக்கும்
போது இயலாமையை உணர்த்துகிறது.
ஒரு தொடரில்
எந்தச் சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ அதற்கேற்பப் பேச்சுமொழியில் பொருளும்
வேறுபடும். எடுத்துக்காட்டாக ’நான் பறவையைப் பார்த்தேன்’ என்னும் தொடரில் ’நான்’ என்னும் சொல்லுக்கு
அழுத்தம் கொடுத்தால், ’பறவையைப் பார்த்தது யார்?’ என்னும் வினாவுக்கு விடை
கிடைக்கும். ’பறவையை’
என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால் ’நீ எதைப் பார்த்தாய்?’ என்னும்
வினாவுக்கு விடை கிடைக்கும்.
’பார்த்தேன்’
என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால் ’நீ பறவையை என்ன செய்தாய்?’ என்னும் வினாவுக்கு விடை
கிடைக்கும்.
இவ்வாறு சொல்லை
ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடும் என்பதை,
”எடுத்தல்
படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபும் தத்தமில் சிறிது உள
வாகும்”
என்னும் நன்னூல் நூற்பா
உணர்த்துகிறது.
வட்டார மொழி
பேச்சுமொழி இடத்திற்கு
இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு
மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை ‘வட்டார மொழி’ என்பர். எடுத்துக்காட்டாக
’இருக்கிறது’ என்னும் சொல்லை ’இருக்கு’, ’இருக்குது’, ’கீது’ என்று தமிழகத்தின்
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாகச் சொல்லுவர். இத்தகைய வேறுபாடுகள் காரணமாகவே
வட்டார வழக்குகள் தோன்றுகின்றன. வட்டார வழக்கில் சொற்களின் வடிவம் மட்டுமே மாறும்.
தொடர்களில் சொற்கள் இடம் மாறுவதில்லை.
கிளைமொழி
ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்வதும் உண்டு. வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத் தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்படும். அவர்களுக்கு இடையேயான தொடர்பு குறையும் பொழுது இம்மாற்றங்கள் மிகுதியாகிப், புதிய மொழியாகப் பிரியும். அவ்வாறு உருவாகும் புதிய மொழியைக் கிளைமொழி என்பர். கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் ஆகும்.
எழுத்து மொழி
பேச்சு
மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே எழுத்து மொழியாகும். ஒரு மொழியானது நீண்ட காலம்
நிலைபெறுவதற்கு எழுத்து வடிவம் இன்றியமையாதது. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட
இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதால் தான் நம்மால் இன்றும் படிக்க முடிகிறது.
எழுத்துமொழியில் காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்பச் சொற்கள் சிதைவதில்லை. ஆனால்
வரிவடிவம் மாறுபடும். எடுத்துக்காட்டாக முற்காலத்தில் ’கா˜ல’
என்று எழுதியதை இன்று ’காலை’ என்று எழுதுகிறோம்.
பேச்சுமொழியும்
எழுத்துமொழியும்
பேச்சுமொழியை
’உலக வழக்கு’ என்றும், எழுத்துமொழியை ’இலக்கிய வழக்கு’ என்றும் கூறுவர். பேச்சுமொழிக்கும்
எழுத்துமொழிக்கும் சில வேறுபாடுகள் உண்டு. பேச்சுமொழியில் சொற்கள் பெரும்பாலும் குறுகி
ஒலிக்கும். எழுத்துமொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும். எடுத்துக்காட்டாக
’நல்லாச் சாப்ட்டான்’ என்பது பேச்சு மொழி. ’நன்றாகச் சாப்பிட்டான்’ என்பது
எழுத்துமொழி.
பேச்சுமொழியில்
உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும். எழுத்துமொழியில் உணர்ச்சிக் கூறுகள் குறைவு.
’உம்’, ’வந்து’ போன்றவற்றைச் சொற்களுக்கு இடையே பொருளின்றிப் பேசுவது உண்டு. ஆனால்
எழுத்து முறையில் இவை இடம் பெறுவதில்லை.
பேச்சுமொழியில் உடல்மொழி இணைவதால் எழுத்துமொழியை
விடப் பேச்சுமொழி எளிமையாகக் கருத்தை
உணர்த்துகிறது. உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு போன்றவற்றிற்கு எழுத்துமொழியில்
இடமில்லை.
எழுத்துமொழி சிந்தித்து எழுதப்படுவதால்
திருத்தமான மொழிநடையில் அமைகிறது. தொடர்ப்பிழைகள் ஏற்பட்டால் திருத்திக் கொள்ளவும்
வாய்ப்புண்டு. ஆனால் பேச்சு மொழியில் சிந்திப்பதற்கான நேரம் குறைவு. எனவே
பேச்சுமொழி திருத்தமான இலக்கிய நடையில் அமைவதில்லை.
பேச்சுமொழி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அமைவதால் விரைந்து
மாற்றமடைந்து வருகிறது. எழுத்துமொழி பெரும்பாலும் மாறுவதில்லை. மேலும்
பேச்சுமொழியில் பிறமொழிச் சொற்கள் மிகுதியாக இடம் பெறுகின்றன. ஆனால் எழுத்து
மொழியில் பெரும்பாலும் மொழித்தூய்மை பேணப்படுகிறது.
பேச்சு மொழியில் எழுத்துகளை மாற்றி ஒலிப்பதும்
உண்டு. ‘இ’ என்பதை ‘எ’ என்றும்
’உ’ என்பதை
’ஒ’ என்றும் மாற்றி ஒலிப்பர். எடுத்துக்காட்டாக ’இலை’ என்பதை ’எல’ என்றும் ’உலகம்’ என்பதை ’ஒலகம்’ என்றும் ஒலிப்பர். இம்மாறுபாடுகள் எழுத்துமொழியில் இல்லை.
மேடைப்பேச்சிலும்,
வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் எழுத்துமொழியாகிய இலக்கியத்தமிழே
பயன்பட்டு வந்தது. ஆனால் இக்காலத்தில் அந்நிலை பெரும்பாலும் மாறிவிட்டது.
பேச்சுத்தமிழ் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாளேடுகள் மற்றும் பருவ
இதழ்களில் இன்றும் எழுத்துத் தமிழே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மொழி
உயிர்ப்போடு வாழ்வதற்குப் பேச்சுமொழியும் காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்துமொழியும்
தேவைப்படுகின்றன. இவ்விரு வடிவங்களையும் சரியாக அறிந்து கொண்டால் தமிழ் மொழியின் நுட்பங்களைப்
புரிந்து கொள்ள முடியும். தமிழ்மொழியே தமிழருக்கு விழியாம்! தமிழ் வாழ்ந்தால்
தமிழர் வாழ்வுயரும். தமிழ்நாடு தானுயரும்.
“எளியநடை யில்தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கணநூல்
புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதிதாக
விளைந்துள்ள
எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு
------------------------------------
செந்தமிழைச்
செழுந்தமிழாய்ச் செய்வதும் வேண்டும்.”
என்பது பாவேந்தரின் ஆசை. அதன்படி
நம் செந்தமிழ்மொழி செழுந்தமிழாய் விளங்க நற்றமிழில் பேசுவோம்! நற்றமிழிலேயே
எழுதுவோம்!
கற்பவை கற்றபின்
- உனது வீட்டில்
பயன்படுத்தும் பேச்சு வழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்து வழக்குத்
தொடர்களை எழுதி வருக.
(எ.கா.)
பேச்சுமொழி : அம்மா பசிக்கிது
எனக்குச் சோறு வேணும்.
எழுத்துமொழி : அம்மா! பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும்.
- பேச்சு மொழியில் சொற்கள்
சில நேரங்களில் உகரங்கள் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ஆ என்னும்
எழுத்து இகரமாக மாறுவதும் உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களுக்கு இணையான
எழுத்து வழக்குச் சொற்களை எழுதி வருக.
(எ.கா.) சொல்லு
- சொல்; நில்லு - நில்
வந்தியா –
வந்தாயா? சாப்ட்டியா
- சாப்பிட்டாயா?
மதிப்பீடு
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மொழியின் முதல் நிலைத் திறன்கள் கேட்டல், ________ ஆகியனவாகும்.
அ) படித்தல் ஆ) பேசுதல்
இ) எழுதுதல் ஈ) வரைதல்
2. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.
அ) பேச்சு மொழி ஆ)
எழுத்து மொழி இ) குரல் மொழி ஈ) குழந்தைமொழி
3. கேட்போரால் உணரப்படுவது __________ மொழி.
அ) எழுத்து வடிவ ஆ) ஒலிவடிவ இ)
வரி வடிவ ஈ) சித்திர வடிவ
4. ‘சீக்கிரமா வாங்க’ – என்பதன் எழுத்து வழக்கு _______.
அ) விரைவா வாங்க ஆ) விரைவாக வாங்க
இ) விரைவாக வாருங்கள் ஈ)
விரைவாக வாங்கள்
எடுத்துக்காட்டுகள்
தருக.
1. பேச்சு மொழி -
_________________
2. எழுத்து மொழி - _________________
3. கிளைமொழி - _________________
4. வட்டார மொழி _ _________________
சரியா? தவறா? என
எழுதுக.
1.
மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.
2. எழுத்து மொழி காலம் கடந்து நிலைத்து நிற்கிறது.
3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச்
செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
4. எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
5. பேச்சுமொழி சிறப்பாக
அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.
ஊடகங்களை வகைப்படுத்துக
வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்
எழுத்து மொழி - பேச்சுமொழி
குறுவினா
1. மொழியின் இரு வடிவங்கள் யாவை?
2. பேச்சுமொழி என்றால் என்ன?
3. வட்டார மொழி எனப்படுவது யாது?
4. “அவர் எங்கள் இதயத்தில் இருக்கின்றார்.” என்ற
தொடரை உங்கள் வட்டார
வழக்கில் எழுதுக.
சிறுவினா
பேச்சுமொழி – எழுத்து மொழி வேறுபாடுகளை எழுதுக.
சிந்தனை வினா
இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
1.
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சு வழக்குத் தொடர்களுக்கு இணையான
எழுத்து வழக்குத் தொடர்களை எழுதி வருக.
Answer:
(எ.கா.) பேச்சுமொழி – அம்மா பசிக்கிது
எனக்குச் சோறு வேணும்.
எழுத்துமொழி – அம்மா பசிக்கின்றது. எனக்குச் சோறு வேண்டும்.
1. பேச்சுமொழி – வூட்டுக்கு போகனும்.
எழுத்துமொழி – வீட்டிற்குப் போக வேண்டும்.
2. பேச்சுமொழி – வவுறு நிறையா சாப்புடு
எழுத்துமொழி – வயிறு நிறைய சாப்பிடு.
3. பேச்சுமொழி – இன்னிக்கு காத்தால வாங்கிட்டு
வந்தே
எழுத்துமொழி – இன்றைக்குக் காலையில் வாங்கி வந்தேன்.
4. பேச்சுமொழி – தண்ணி கொண்டா
எழுத்துமொழி – தண்ணீர் கொண்டு வா.
2.
பேசும் போது சிலநேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து
ஒலிப்பது உண்டு. ‘ஆ’ என்னும் எழுத்து இகரமாக மாறுவது உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை
எழுதி அவற்றுக்கு இணையான எழுத்த வழக்குச் சொற்களையும் எழுதுக.
Answer:
(எ.கா) சொல்லு – சொல், நில்லு – நில், வந்தியா – வந்தாயா?, சாப்டியா – சாப்பிட்டாயா?
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மொழியின் முதல்நிலை பேசுதல் …………………. ஆகியனவாகும்.
அ) படித்தல்
ஆ) கேட்டல்
இ) எழுதுதல்
ஈ) வரைதல்
Answer:
ஆ) கேட்டல்
Question 2.
ஒலியின் வரிவடிவம் …………… ஆகும்.
அ) பேச்சு
ஆ) எழுத்து
இ) குரல்
ஈ) பாட்டு
Answer:
ஆ) எழுத்து
Question 3.
தமிழின் கிளைமொழிகளில் ஒன்று …………………
அ) உருது
ஆ) இந்தி
இ) தெலுங்கு
ஈ) ஆங்கிலம்
Answer:
இ) தெலுங்கு
Question 4.
பேச்சுமொழியை …………………… என்றும் கூறுவர்
அ) இலக்கிய
ஆ) உலக
இ) நூல்
ஈ) மொழி
Answer:
ஆ) உலக
சரியா தவறா என எழுதுக.
1. மொழி காலத்திற்கேற்ப மாறுகிறது.
2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து
நிற்கிறது.
3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச்
செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
4. எழுத்துமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு
அதிகம்.
5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்
தாழ்வு அவசியம்.
Answer:
1. சரி
2. சரி
3. சரி
4. தவறு
5. சரி
ஊடகங்களை வகைப்படுத்துக.
வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள்,
திரைப்படம்,
மின்னஞ்சல்
குறு வினா
Question 1.
மொழின் இருவடிவங்கள் யாவை?
Answer:
பேச்சுமொழி
எழுத்துமொழி
Question 2.
பேச்சுமொழி என்றால் என்ன?
Answer:
வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது பேச்சுமொழி ஆகும்.
Question 3.
வட்டாரமொழி எனப்படுவது யாது?
Answer:
இடத்திற்கு இடம் பேச்சுமொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல்
சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு
வடிவங்களை வட்டார மொழி என்பர்.
சிறு வினா
Question 2.
கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?
Answer:
(i) ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு
இடங்களில் வாழ்கின்றனர்.
(ii) வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத்தடைகள் போன்றவற்றின் காரணமாக
அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும்.
(iii) அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறையும்
போது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அதுவே ‘கிளைமொழி’ என்பர்.
(iv) கன்னடம்,
தெலுங்கு,
மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து
பிரிந்து சென்ற கிளைமொழி ஆகும்.
சிந்தனை வினா
Question 1.
இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம்
என்று கருதுகிறீர்கள்?
Answer:
(i) இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி
என்பர். இலக்கியங்கள் தாம் தோன்றிய காலச் சூழலைக் காட்டுவதாலும் பண்பாடு, நாகரிகம்,
சமூக வாழ்க்கை ஆகியவற்றைக் காட்டுவதாலும்
அவை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
(ii) வாழ்வோடு இணைந்த சுவை கொண்டு இலக்கியங்கள்
படைக்கப்படுவதாலும் நீதிநெறிகளை முன்வைப்பதாலும் இன்றும் இலக்கியங்கள் எழுத்து வடிவில்
இருப்பதாலும் இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்கின்றன.
0 Response to "7 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 – உரைநடை உலகம் - பேச்சுமொழியும் எழுத்துமொழியும் - வினா விடைகள் "
Post a Comment