
"சிறந்த பத்து "
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
முதுமொழிக்காஞ்சி. இந்நூலை இயற்றியவர்
மதுரைக் கூடலூர் கிழார் . நூறு பாடல்களைக் கொண்டது இந்நூல். முதுமொழி
என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. மூதுரை , முதுசொல் என்பனவும்
இப்பொருள் தருவன. முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று.
உலகியல் உண்மைகளைத் தெளிவாக பெருமக்கள் கூறுவது முதுமொழிக்காஞ்சி. அதுவே
இந்நூலுக்குப் பெயராயிற்று.
சிறந்தனவாகிய பத்துப் பொருள்களை இப்பகுதியில்
கூறப்பட்டுள்ளன. இதனால் இது சிறந்த பத்து என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. இதன்கண்
உள்ள பத்து அடிகளிலும் சிறந்தன்று என்ற ஒரு சொல் பயின்று வந்துள்ளது. அதற்குச்
'சிறந்தது' என்பது பொருள். பத்து அடிகளில் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு சிறந்த
பொருளைக் கூறி அதைவிடச் சிறந்த இன்னொரு பொருளைக் கூறி விளக்குவது இதன் சிறப்பு .
1.ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை.
கடல் சூழ்ந்த இவ்வுலத்தில் உள்ள மக்களுக்கு
எல்லாம் கல்வியைக் காட்டிலும்,
நல்லொழுக்கம் உடைமை சிறந்ததாகும்.
2.காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
ஒருவரிடம் அன்பைக் காட்டுவதை விடவும், தமது உயரிய
பண்பைக் கண்டு மதிக்கும் முறையில் உயர்ந்த செயல்களால் அவர் போற்றும்படி நாம்
நடந்து கொள்வது சிறந்ததாகும்.
3.மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை.
கல்வியில் பெரிய மேதையாய் வல்லமை பெற்று
இருப்பதைக் காட்டிலும், கற்றதை மறவாமல் இருந்து அதன்படி ஒழுகுதல் சிறந்ததாகும்.
4.வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை.
வளமான செல்வம் உடைமையை விட, உண்மையான வாழ்வு
உடைமை சிறந்ததாகும். அதாவது, கொடையைக் காட்டிலும் பொய் சொல்லாத வாய்மை சிறந்தது.
5.இளமையின் சிறந்தன்று மெய்பிணி இன்மை.
ஒருவனுக்கு இளமை இன்பத்தைவிட, நோயில்லாத வாழ்க்கையினால் உண்டாகிற இன்பமே
மிகச் சிறந்த இன்பமாகும்.
6.நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
ஒருவர் உடல் அழகு உடையவராக இருப்பதைக் காட்டிலும், பழி பாவங்களுக்கு அஞ்சும் நாணம்
உடையவராக இருப்பது சிறந்ததாகும்.
7.குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
குலன் என்பது குடிப்பிறப்பைக் குறிக்கும். கற்பு என்பது கல்வியைக் குறிக்கும். ஒருவன்
உயர்குடியில் பிறந்தவனாக இருத்தலைவிட, கல்வி உடையவனாக இருப்பதே மிகவும்
சிறந்ததாகும்.
8.கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
ஒருவர் கல்வி கற்பது சிறந்தது. கற்றவர்களைப் போற்றி
வழிபடுவது அதைவிட சிறந்ததாகும்.
9.செற்றாரைச் செறுத்தலின் தன்செய்கை சிறந்தன்று.
பகைவரை (செற்றார்) அழித்தலைவிட, அவர்களைக் காட்டிலும் நம் நிலையை
உயர்த்திக் கொள்ளுதல் சிறந்ததாகும்.
10.முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.
இளமையில் செல்வ செழிப்போடு வாழ்ந்து பின் வளம்
குன்றிப் போவதைவிட , இயல்பாக வாழ்ந்து முதுமையிலும் தன் நிலைமை குறையாமல் நிறையுடன் வாழ்தல்
சிறந்ததாகும்.
" முதுமொழிக்காஞ்சி
எடுத்துரைக்கும்
கருத்துகளைக் கடைப்பிடிப்போம் பொறுப்பாக!
நாளை
நம் வாழ்க்கை அமையும் சிறப்பாக!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 192. சிறந்த பத்து ஆ.தி.பகலன்"
Post a Comment