
கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று
புதிய வைரஸ்களாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் தோன்றிய உருமாறிய டெல்டா வகை வைரஸ் மிகவும் ஆபத்தான
ஒன்றாக உருமாறியுள்ளது. இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி புதிய
அலையை உண்டாக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் அச்சம் நிலவி வருகிறது.
மிகவும் வேகமாக பரவும் தன்மை
கொண்ட உருமாறிய டெல்டா வகை வைரஸ் ஆயிரம் மடங்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
இந்த வைரஸால் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்கத்
தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக டெல்டா வகை
வைரஸ்கள் காணப்படுகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67,485 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக
அமெரிக்காவில் நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்டா வைரஸ்தான் இதற்கு காரணம் என்று
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பதிவு
செய்யப்படும் கொரோனா தொற்றில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா
வைரஸால் ஏற்படுகிறது. இருப்பினும் தடுப்பூசி காரணமாக அதிகமான நபர்கள் மருத்துவமனைகளில்
வந்து அனுமதிக்கப்படுவது குறைந்துள்ளது என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ
ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சில இடங்களில் கொரோனா
தடுப்பூசி செலுத்தப்படுவதன் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும் என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக
கலிபோர்னியா மாகாணத்தில்தான் 39 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டும் டெல்டா வைரஸ்!"
Post a Comment