நூல்
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ‘தூது’ என்பதும் ஒன்று. இது, ‘வாயில்இலக்கியம்’, ‘சந்துஇலக்கியம்’என்னும் வேறு பெயர்களாலும்
அழைக்கப்படும். தலைவன் தலைவியர்களுள் விரகதாபத்தால் துன்புற்ற ஒருவர் மற்றொருவர்பால்
செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டைமைக்கு அறிகுறியாக ‘மாலையைவாங்கிவருமாறு’ அன்னம் முதல் வண்டு ஈறாகப்பத்தையும்
தூதுவிடுவதாக் ‘கலிவெண்பா’வால் இயற்றப்படுவது தூதின் இலக்கணம். இந்நூல் மதுரையில் கோயில்
கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன்காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்த 268 கண்ணிகளைக் கொண்டது. இந்நூலின் ஆசிரியர் யார் என அறிந்து கொள்ள இயலவில்லை.. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சிலகண்ணிகள் இப்பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ளன.
தித்திக்கும் தெள்அமுதாய்த்
தெள்அமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு
உவந்துஉரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்
கேள்
– மண்ணில்
குறம்என்றும் பள்என்றும்
கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவுஎன்று மூன்றுஇனத்தும்
உண்டோ – திறம்எல்லாம்
வந்துஎன்றும் சிந்தா மணியாய்
இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே – அந்தரமேல்
முற்றும்உணர்ந்த தேவர்களும்
முக்குணமே பெற்றார்நீ
குற்றம்இலாப் பத்துக் குணம்பெற்றாய் – மற்றொருவர்
ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல்
உண்டோநீ
நோக்கிய வண்ணங்கள் நூறுஉடையாய் – நாகுலவும்
ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ
செவிகள்உணவு
ஆன நவரசம்உண் டாயினாய் – ஏனோர்க்கு
அழியா வனப்பு ஒன்று அலது
அதிகம் உண்டோ
ஒழியா வனப்பு எட்டு உடையாய்…. (கண்ணிகள் 69 --- 76)
பொருள்
இனிக்கும் தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் மேலான வீடுபேற்றைத் தரும்கனியே! இயல் இசை நாடகம் என மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என்தமிழே! அறிவால் உண்ணப்படும்தேனே! உன்னிடம் நான் மகிழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. அதைக்கேட்பாயாக.
தமிழே! உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப்புலவர்கள் சிறப்புக் கொள்கின்றனர். நீயும் அவற்றைப் படிக்க எடுத்துக் கொடுப்பாய். அதனால் உனக்குத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகைப் பாவினங்களிலும் உறவு ஏதேனும் உண்டோ?
பாவின்திறம் அனைத்தும் கைவரப்பெற்று (அதாவதுபொருந்திநின்று) என்றுமே ‘சிந்தா’(கெடாத)மணியாய்இருக்கும்உன்னை (இசைப்பாடல்களுள்ஒருவகையான) ‘சிந்து’ என்று (அழைப்பது நின் பெருமைக்குத்தகுமோ? அவ்வாறு) கூறிய நா இற்றுவிழும் அன்றோ?
வானத்தில் வசிக்கும் முற்றுணர்ந்த தேவர்கள்கூட சத்துவம், இராசதம், தாமசம் என்னும் மூன்று குணங்களையே
பெற்றுள்ளார்கள். ஆனால், நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக்குணங்களையும்
பெற்றுள்ளாய்.
மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என ஐந்திற்கு மேல்
இல்லை. நீயோ புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசைவண்ணம் முதலாக இடைமெல்லிசை
வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய். நாவின்மீது பொருந்தும் குறைபாடுடைய
உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை. நீயோ செவிகளுக்கு விருந்தளிக்கும் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய். தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு
அழியாத அழகு ஒன்றுஅல்லாமல் அதிகம்உண்டோ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகு எட்டினைப் பெற்றுள்ளாய்.
சொற்பொருள்
முத்திக்கனி – வீடுபேறாகியகனி; குறம், பள்ளு – சிற்றிலக்கியவகைகள்; மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம் ; திறமெல்லாம் – சிறப்பெல்லாம்; சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாதமணி என்னும் இருபொருளையும் குறிக்கும் ; சிந்து – ஒருவகை இசைப்பாடல்;
முக்குணம் – மூன்றுகுணங்கள் (சத்துவம்-அமைதி மேன்மை ஆகியவற்றைச்சுட்டும்குணம்; இராசசம் போர்,தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்;தாமசம்-சோம்பல், தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும் குணம்); பத்துக்குணம் – செறிவு, சமநிலை முதலிய பத்துக்குண அணிகள்;
வண்ணங்கள் ஐந்து – வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை; வண்ணம்நூறு – குறில், அகவல், தூங்கிசைவண்ணம் முதலாக இடை மெல்லிசைவண்ணம் ஈறாகநூறு; நாக்குலவும் – நாக்கின்மீதுபொருந்தும்;
ஊனரசம் - குறைவுடையசுவை; நவரசம் – வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை ஆகிய ஒன்பது சுவை; ஏனோர் – மற்றையோர். அதாவது தமிழை அடையப் பெறாதவர்கள்; வனப்பு- அழகு. அவை அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு.
இலக்கணக்குறிப்பு
முத்திக்கனி – உருவகம்,
தெள்ளமுது – பண்புத்தொகை,
குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்,
நா – ஓரெழுத்து ஒருமொழி,
செவிகளுணவான – நான்காம் வேற்றுமைத்தொகை.
பிரித்தறிதல்:
முத்தமிழ் = மூன்று+ தமிழ்
உவந்துரைக்கும் = உவந்து + உரைக்கும்
மூன்றினத்து = மூன்று + இனத்து
சிந்தென்று = சிந்து + என்று
வனப்பொன்று = வனப்பு + ஒன்று
0 Response to "9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - தமிழ்விடுதூது "
Post a Comment