தொகாநிலைத் தொடர்கள்

Trending

Breaking News
Loading...

தொகாநிலைத் தொடர்கள்

தொகாநிலைத் தொடர்கள்


பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல்லும் பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் சேர்ந்த இரண்டு சொற்களும் தம்மிடையே உருபுகளும் காலமும் தொகாமல் (வெளிப்படையாக) வந்து தொடர் அமைந்தால் அது தொகாநிலைத் தொடர் எனப்படும்.   தொகாநிலைத் தொடர் என்பது சொற்கள், வேற்றுமை, அல்வழிப் பொருளில், உருபுகள் இருந்து மறையாமலும், உருபுகளே இல்லாமலும் தொடரும் தொடராகும். தமிழில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என சொற்கள்  நான்கு வகைப்படும். சொற்கள் தொடர்வதே தொடர் என்பதால் தொடர்கள் யாவும் இந்த நால்வகைச் சொற்களைக் கொண்டே அமையும். தொடர்களின் முதற்சொல் இந்த நான்கில் ஒன்றாகவே இருக்கும். இந்த நால்வகைச் சொற்களை நிலைமொழிகளாகக் கொண்டவை என்ற அடிப்படையில் தொகாநிலைத் தொடர்களை வகைப்படுத்தலாம்.

பெயர்ச்சொல்லை முதலில் கொண்ட விரிகள்


1.        எழுவாய்த் தொடர்

2.      விளித்தொடர்

3.      வேற்றுமைத் தொடர்

வினைச்சொல்லை முதலில் கொண்ட விரிகள்


4.      வினைமுற்றுத் தொடர்

5.      வினையெச்சத் தொடர்             

6.      பெயரெச்சத் தொடர்

இடைச்சொல்லை முதலில் கொண்ட விரி


7.       இடைச்சொல் தொடர்

உரிச்சொல்லை முதலில் கொண்ட விரி


8.      உரிச்சொல் தொடர் 

எந்தவகைச் சொல்லையும் முதலில் கொண்ட விரி


9.      அடுக்குத் தொடர்

அல்வழித் தொகாநிலைத் தொடர் என்பது, அல்வழிக்கு உரிய தொகைகளான வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை ஆகியன நீங்கலாக, தமக்கெனத் தனி உருபுகள் இல்லாத ஏனைய தொகாநிலைத் தொடர்கள் தொடரும் தொடராகும். இத்தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும். அவை, 

                       

                          தொடர்                                                         சான்று

1                     வினைமுற்றுத் தொடர்   உண்டான் முருகன்

2                    பெயரெச்சத் தொடர்            உண்ட முருகன்

3                    வினையெச்சத் தொடர்  உண்டு முருகன்

4                    எழுவாய்த் தொடர்                                  முருகன் வந்தான்

5                    விளித்தொடர்                       முருகன் வா

6                    வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்         

               குடத்தை வனைந்தான் (இரண்டாம் வேற்றுமை)

                வாளால் வெட்டினான் (மூன்றாம் வேற்றுமை)

                புலவர்க்குக் கொடுத்தான் (நான்காம் வேற்றுமை)

                மலையின் இழிந்தான் (இறங்கினான்) (ஐந்தாம் வேற்றுமை)

                முருகனது கால் (ஆறாம் வேற்றுமை)

                முருகனிடம்  உள்ளது (ஏழாம் வேற்றுமை)

7                    இடைச்சொல் தொடர்      மற்றொன்று

8                    உரிச்சொல் தொடர்                              நனி பேதையே

9                    அடுக்குத் தொடர்                                    பாம்பு பாம்பு

முற்று ஈர் எச்சம் எழுவாய் விளிப்பொருள்

ஆறு உருபு இடை உரி அடுக்கு இவை தொகா நிலை (நன்னுல் 374)

1.வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

உருபுகள் பெற்றுவரும் வேற்றுமைகள் இரண்டு முதல் ஏழு வரை மொத்தம் ஆறு. இந்த ஆறு வேற்றுமைகளின் உருபுகள் வெளிப்பட நின்று தொடரும் தொடர் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் எனப்படும்.

சான்று

பாடத்தைப் படித்தான்        -    இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

கத்தியால் குத்தினான்     -    மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

மகளுக்குக் கொடுத்தான்   -    நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

ஏணியில் இறங்கினான்  -    ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

நண்பனது வீடு                -   ஆறாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

வான்கண் நிலா             -   ஏழாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

2 வினைமுற்றுத் தொடர்

வினைமுற்று என்பது ஓர் எழுவாயின் செயல்நிலையைக் காட்டி வாக்கியத்தை முடிக்கும் சொல்லாக அமையும்.  கொண்டனர் மகிழ்ச்சி, அழைத்தனர் உற்றார்…

சான்று : கம்பன் பாடினான்.

இவ்வாக்கியத்தில் ‘பாடினான்’ என்னும் வினைக்குக் காரணமான பெயர் ‘கம்பன்’. எனவே கம்பன் என்பது இவ்வாக்கியத்தின் எழுவாய். கம்பன் செய்த செயலைக் குறிப்பிடும் வினைச்சொல் ‘பாடினான்’ என்பது. இது வினைப் பயனிலை என்றும் வினைமுற்று என்றும் அழைக்கப்படும்.

வாக்கியத்தின் இறுதியில் இடம்பெற வேண்டிய வினைமுற்று முதலில் இடம்பெற்று ஆறு வகைப் பெயரையும் கொண்டு முடியும். இது வினைமுற்றுத் தொடர் எனப்படும்.

சான்று

செய்வாள் அவள்    -   பொருட்பெயர் கொண்டு முடிந்தது

குளிர்கிறது நிலம்    -    இடப்பெயர் கொண்டு முடிந்தது

வந்தது கார்           -   காலப் பெயர் கொண்டு முடிந்தது

வணங்கியது கை    -    சினைப் பெயர் கொண்டு முடிந்தது

சிறந்தது நன்மை    -    பண்புப் பெயர் கொண்டு முடிந்தது

உயர்ந்தது வாழ்க்கை- தொழில் பெயர் கொண்டு முடிந்தது

பொதுவியல்பு ஆறையும் தோற்றிப் பொருட்பெயர்

முதல்அறு பெயர்அலது ஏற்பில முற்றே (நன்னூல் : 323)

வினைமுற்று இரு வகைப்படும்.

1) தெரிநிலை வினைமுற்று

2) குறிப்பு வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படுபொருள் என்னும் ஆறையோ அவற்றில் சில, பலவற்றையோ காட்டும். மேலே எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்ட வினைமுற்றுகள் யாவும் தெரிநிலை வினைமுற்றுகள் என்பதை அறியலாம்.

செய்பவன் கருவி நிலம்செயல் காலம்

செய்பொருள் ஆறும் தருவது வினையே      (நன்னூல் : 320)

குறிப்பு வினைமுற்று என்பது, வினைமுதல், கருவி, இடம், செயல் காலம், செயப்படுபொருள் என்னும் ஆறில் செய்பவனை மட்டும் காட்டும். இதுவும் பொருட்பெயர் முதலிய ஆறையும் கொண்டு முடியும்.

சான்று

நல்லன் அவன்  -   பொருட்பெயர் கொண்டு முடிந்தது

நல்லது நிலம்   -   இடப்பெயர் கொண்டு முடிந்தது

நல்லது கார்    -     காலப்பெயர் கொண்டு முடிந்தது

நல்லது கண்    -      சினைப்பெயர் கொண்டு முடிந்தது

நல்லது வெண்மை  -   பண்புப்பெயர் கொண்டு முடிந்தது

நல்லது பணிவு   -   தொழில்பெயர் கொண்டு முடிந்தது

பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்

வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே     (நன்னூல் : 321)

எச்சத் தொடர்

பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் தொடர் எச்சத் தொடர் ஆகும். இஃது இரு வகைப்படும்.

3. பெயரெச்சத் தொடர்

பெயரெச்சம் என்பதைப் பெயர் + எச்சம் எனப் பிரிக்கலாம். எச்சம் என்பது ‘முற்றுப்பெறாத வினைச்சொல்’ ஆகும். முடிக்கும் சொல்லாகப் பெயரைப் பெற்றுவரும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். எச்சமும் பெயரும் சேர்ந்த தொடர், பெயரெச்சத் தொடர் எனப்படும்.. அறிந்த பெற்றோர், தெரிந்த இடம்….

 பெயரெச்சம்,

- செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் வாய்பாட்டில் வரும்.

- இறந்தகாலம் (செய்த), நிகழ்காலம் (செய்கின்ற), எதிர்காலம்

  (செய்யும்) என்னும் முக்காலத்தையும் காட்டும்.

- செயலைக் காட்டும்.

- செயலுக்குரிய வினைமுதலின் பால் என்ன என்பதைக்காட்டாது

- வினைமுற்றால் அறியப்பெறும் வினைமுதல், கருவி, இடம்,

  செயப்படுபொருள் ஆகியவற்றைக் காட்டாது.

- ஆறுவகைப் பெயர்களையும் கொண்டு முடியும்.

சான்று

படித்த இளைஞன்-எச்சம் பொருட்பெயர் கொண்டு முடிந்தது.

பார்த்த ஊர்-எச்சம் இடப்பெயர் கொண்டு முடிந்தது.

கடந்த தை-எச்சம் காலப்பெயர் கொண்டு முடிந்தது.

முறிந்த கால்   -எச்சம் சினைப்பெயர் கொண்டு முடிந்தது.

சுவைத்த இனிப்பு-எச்சம் பண்புப்பெயர் கொண்டு முடிந்தது.

முடிந்த தேர்தல்-எச்சம் தொழிற்பெயர் கொண்டு முடிந்தது.

செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டில்

காலமும் செயலும் தோன்றிப் பாலொடு

செய்வது ஆதி அறு பொருள் பெயரும்

எஞ்ச நிற்பது பெயரெச்சம்மே       (நன்னூல் : 340)

4. வினையெச்சத் தொடர்

வினையைக் கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம் எனப்படும். எச்சம் வினைகொண்டு முடியும்போது அது வினையெச்சத் தொடர் ஆகிறது. வினையெச்சம்,

- தொழிலையும் காலத்தையும் காட்டும்.

- செயலுக்குரிய வினைமுதலின் பால் என்ன என்பதைக்காட்டாது

-செய்து,செய்பு,செய்யா,செய்யூ,செய்தென என்னும் இறந்தகால வாய்பாட்டில் வரும்.

- செய என்னும் நிகழ்கால வாய்பாட்டில் வரும்.

- செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு என்னும் எதிர்கால வாய்பாட்டில் வரும்.

- வினையைக் கொண்டு முடியும்.

உண்டு களித்தனர், கூடி மகிழ்ந்தனர்….

சான்று : படித்து வந்தான்.

இவற்றுள், படித்து என்பது, படித்தல் என்னும் தொழிலும், இறந்த காலமும் காட்டி, அத்தொழிலை நிகழ்த்தும் வினைமுதலின் பால் என்ன என்பதைக் காட்டாமல் வினைச்சொல்லை முடிக்கும் சொல்லாகப் பெற்று வந்துள்ளது.

தொழிலும் காலமும் தோன்றிப் பால் வினை

ஒழிய நிற்பது வினையெச் சம்மே    (நன்னூல் : 342)

5. எழுவாய்த் தொடர்

எட்டு வேற்றுமைகளில் முதல் வேற்றுமை எனப்படுவது எழுவாய் வேற்றுமை, வேற்றுமைகளுக்குரிய ஐ முதலிய உருபுகள் ஏற்காமல், திரிபில்லாத பெயராய் விளங்குவது எழுவாய் வேற்றுமையாகும். இது வினை, வினா, பெயர் ஆகியவற்றைப் பயனிலையாகப் பெற்று எழுவாய்த் தொடராக வரும். பெயர் மட்டும் தனித்து வரும்பொழுது எழுவாய் ஆகாது. பெயர் தனக்குரிய பயனிலையைக் கொண்டு முடியும் பொழுதே அது எழுவாய் என்னும் தகுதி பெறும் என்பது அறிக.

சான்று;     பாரதிதாசன் பாடினார், பாரதி வாழ்க

இத்தொடர்களில் ‘பாரதிதாசன்’ ‘பாரதி’ என்னும் எழுவாய்கள் முறையே ‘பாடினார்’, ‘வாழ்க’ என்னும் வினைமுற்றுகளைப் பயனிலையாகப் பெற்று முடிந்தன.

சான்று: காந்தி தலைவர், இவர் பெரியார்

'இத்தொடர்களில் ‘காந்தி’, ‘இவர்’ என்னும் எழுவாய்கள், முறையே ‘தலைவர்’, பெரியார்’ என்னும் பெயர்களைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தன.

சான்று:   அவன் யார்? மலர் யாது?

இத்தொடர்களில் ‘அவன்’, ‘மலர்’ என்னும் எழுவாய்கள், முறையே ‘யார்’, ‘யாது’ என்னும் வினாப்பெயர்களைப் பயனிலையாகக்கொண்டு முடிந்தன.'

மேலே காட்டிய எழுவாய்ப் பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்காமலும், தம் பெயரில் எவ்வித் திரிபும் இல்லாமலும் பயனிலைகளைப் பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

6.விளித் தொடர்

எட்டாம் வேற்றுமை, ‘விளி வேற்றுமை’ எனப்படும். இவ்விளி வேற்றுமையினுடைய உருபுகள், படர்க்கைப் பெயரின் ஈற்றில் மிகுதலும், திரிதலும், கெடுதலும், இயல்பாதலும், ஈற்றயல் எழுத்துத் திரிதலுமாம். இது ஏவல் வினையைக் கொண்டு முடியும். விளியும் ஏவல்வினையும் சேர்ந்த தொடர் விளித் தொடர் எனப்படும்.

விளி வேற்றுமையின் உருபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை, முன்னிலையில் அழைக்கப்படும் (விளிக்கப்படும்) பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட விளிக்கப்படும் பொருளே இவ்வுருபுகளின் பொருளாகும்.

சான்று

நிலவோ காய்ந்தது, மயிலே நீ தூது செல்லாயோ..

கம்பனே, கேளாய்  -கம்பன் என்பதன் ஈறு ஏகாரம் பெற்று வந்துள்ளது

மிகுதல் - தம்பீ, கேளாய்-தம்பி என்பதன் ஈறு ஈகாரமாயிற்று.            

திரிதல் - செல்வ, கேளாய்                   

செல்வன் என்பதன் ஈறு போயிற்று              

கெடுதல் - அம்மா கேளாய்                                       

இயல்பு                          

முருகா கேளாய்-முருகன் என்பதன் ஈற்று எழுத்துக் கெட்டு ஈற்றயல் எழுத்து க - கா ஆயிற்று - அயல் திரிதல்    

எட்டன் உருபே எய்துபெயர் ஈற்றின்

திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்

திரிபும் ஆம் பொருள் படர்க்கை யோரைத்

தன் முகமாகத் தான் அழைப் பதுவே       (நன்னூல் : 303)

7. இடைச் சொற்றொடர்

இடைச்சொல் என்பது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் அற்றது; பெயரையும் வினையையும்  சார்ந்து வரும் சொல்லாகும். இஃது ஒன்பது வகைப்படும்.  மற்றொன்று ,,, அம்ம வாழி,,,,அவை,

(1)  வேற்றுமை உருபுகள் - ஐ, ஆல் முதலியன

சான்று;   தேனைக் குடித்தான் (தேன்+ஐ)

(2)  விகுதி உருபுகள் - ஆன், ஆள் முதலியன

சான்று; நடந்தான் (நட+த்+த்+ஆன்)

(3)  இடைநிலை உருபுகள் - ப், வ், த் முதலியன

சான்று; நடந்தாள் - (நட+த்+த்+ஆள்)

(4)   சாரியை உருபுகள் - அன், அத்து முதலியன

சான்று;   மரத்தை (மரம்+அத்து+ஐ)

(5)  உவம உருபுகள் - போல, புரைய முதலியன

சான்று; புலி போலப் பாய்ந்தான் (போல)

(6)  தம்பொருள் உணர்த்துவன - அ (சுட்டு), ஆ (வினா) முதலியன

சான்று; அப்பொருள் - அ+பொருள் (சுட்டு)

அவனா - அவன்+ஆ (வினா)

(7)  ஒலிக் குறிப்பு முதலிய பொருள் உணர்த்துவன - ஓ ஓ, ஐயோ

        முதலியன

சான்று; ஐயோ! ஐயோ!

(8)  (செய்யுளில்) இசைநிறையாய் வருவன

சான்று;  “ஏஎ இவளொருத்தி...”

(9)  அசைநிலையாய் வருவன

சான்று;  “மற்று என்னை ஆள்க”

இசைநிறை என்பது, வேறுபொருள் உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து நிற்பது. அசைநிலை என்பது, வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும் வினைச் சொல்லோடும் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்பது. உவம உருபுகளாயும் ஒலிக்குறிப்பாயும், செய்யுளில் இசைநிறையாயும் அசைநிலையாயும் வரும் இடைச்சொற்களைத் தொடர்ந்து வரும் தொடர்கள் இடைச் சொற்றொடர் எனப்படும். இவையேயன்றி என, மற்று முதலிய இடைச்சொற்களைத் தொடர்வனவும் இடைச் சொற்றொடர் எனப்படும்.

8. உரிச் சொற்றொடர்

உரிச்சொற்கள் பெயர் அல்லது வினைச்சொற்களுக்கு அடையாய் நின்று தொடர வருவது உரிச்சொற்றொடர் எனப்படும். சாலப் பேசினர், கடி, மணம்….

- இசையும் குறிப்பும் பண்பும் ஆகிய பல்வேறுபட்ட குணங்களை உணர்த்தும் பெயராய் வரும்.

- பல சொல் ஒரு பண்பையும், ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தும்.

- பெயர், வினைகளை விட்டு நீங்காது அவற்றிற்கு அடையாய் வரும்.

- செய்யுளுக்கு உரியனவாய் வரும்.

இசை, ஓசை, குறிப்பு என்பன மனத்தினால் உணரப்படுவன.  பண்பு ஐம்பொறிகளால் உணரப்படுவது.

சான்று;

சால, உறு, தவ, நனி, கூர், கழி - மிகுதி என்னும் ஒரு குணம் குறித்தது.

கடி - காப்பு, கூர்மை, நாற்றம், அச்சம் முதலிய பல குணம் குறித்தது.

சான்று; தடக்கை - பெயர்க்கு அடையாக வந்தது.

 நனி வருந்தினான் - வினைக்கு அடையாக வந்தது.

வாரணம் பொருத மார்பு” - இதில் வாரணம் என்பது யானையைக் குறித்துச் செய்யுளில் வழங்கி வந்துள்ள சொல் ஆகும்.

பல் வகைப் பண்பும் பகர் பெய ராகி

ஒரு குணம் பல குணம் தழுவிப் பெயர் வினை

ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்   (நன்னூல் : 442)

9. அடுக்குத் தொடர்

ஒரு சொல் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், துன்பம், அசைநிலை, இசைநிறை முதலிய காரணம் பற்றி இரண்டு முதல் நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத் தொடர் எனப்படும். வந்த சொல்லே திரும்பவும் வரும்.

அசைநிலைக்கு இரண்டு முறையும், பொருள் நிலைக்கு இரண்டு அல்லது மூன்று முறையும், இசைநிறைக்கு இரண்டு, மூன்று அல்லது நான்கு முறையும் ஒரு சொல் அடுக்கி வரும். அடுக்குத் தொடரில் அடுக்கிவரும் சொல், பெயர் அல்லது வினைச் சொல் ஆகும். வா வா,,, குழந்தை குழந்தை…

சான்று;

ஏஏ யம்பல் மொழிந்தனள் யாயே”-அசைநிலை (2 முறை)

வா வா; போ போ போ-விரைவு (பொருள்நிலை - 2 /3 முறை)

வருக வருக; வாழ்க வாழ்க, வாழ்க-உவகை (பொருள்நிலை - 2 / 3 முறை)

பாம்பு பாம்பு; தீத்தீத்தீ    -அச்சம் (பொருள்நிலை - 2 / 3 முறை)

ஐயோ ஐயோ; இழப்பு இழப்பு இழப்பு-அவலம் (பொருள்நிலை - 2 / 3 முறை)

நல்குமே நல்குமே நல்குமே நாமகள்”-இசைநிறை (3 -முறை)

பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ"-இசைநிறை (4- முறை)

அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒருசொல்

இரண்டு மூன்று நான்கு எல்லை முறை அடுக்கும் (நன்னூல் : 395)

0 Response to "தொகாநிலைத் தொடர்கள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel