"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
"
ஒரு மனிதன் தன்னைப் போலவே எல்லா மனிதர்களையும் நேசிப்பது மனிதநேயம். ஒரு மனிதன் தன்னைப் போலவே
எல்லா உயிர்களையும் நேசிப்பதுதான் ஆன்மநேயம். இந்த உலகில் பிறந்த எல்லா உயிர்களும்
சமம். உயர்திணை, அஃறிணை என்ற வேறுபாடுகள் எல்லாம் இங்கு எதுவும் இல்லை. அனைத்து
உயிர்களையும் தன்னுயிர்போல் நேசிப்பதே
"ஆன்மநேய ஒருமைப்பாடு " என்கிறார் வள்ளல் பெருமான்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்கத் தயக்கும்
இந்த உலகத்தில்தான் வள்ளலார் தோன்றினார். எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டை
அறிமுகம் செய்தார். " ஆன்மநேய ஒருமைப்பாடு " என்றாலே அது வள்ளலாரைக்
குறிக்கும் ஓர் சொல்லாக மாறிவிட்டது.
" வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேருறக் கண்டுளம் துடித்தேன்
ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் " ( திருவருட்பா )
நீரில்லாமல் வெயிலில் வாடிய பயிரைக் கண்டபோது
எல்லாம் வாடினேன். பசியினால் இளைத்து உடல் மெலிந்து வீடுதோறும் இரந்தும் பசி விலகாமல் சோர்ந்த ஒன்றும் இல்லாதவர்களைக்
கண்டு உள்ளம் பதைத்தேன். நீண்ட நாள் நோயால் வருத்தப்படுகிறவர் என் முன்னால்
வரும்போது அவர்களைப் பார்த்து உள்ளம் துடித்தேன். மானம் உள்ளவர்கள்
துன்பப்பட்டாலும் மற்றவர்களிடம் போய் உதவி கேட்க மாட்டார்கள். அப்படிப்பட்ட
ஒப்பில்லாத ஏழைகளாய் உள்ள நெஞ்சம் இளைத்தவர்களைக் கண்டு நானும் இளைத்தேன் "
என்கிறார் வள்ளல் பெருமான்.
நீரில்லாமல் எப்படி பயிர்கள் வாடுகிறதோ , அது
போலவே உணவில்லாமல் உயிர்கள் பசியால் வாடுகிறது.
வாடும் பயிர்களுக்கு நீர் விட்டால் போதும் பிழைத்துக் கொள்ளும். பசியால்
வாடும் உயிர்களைக் கண்டு வெறும் கண்ணீர் விட்டால் போதுமா? அவர்கள் பசி தீருமா?
அவர்களின் பசியை நிரந்தரமாய் தீர்க்க எண்ணிய வள்ளல் பெருமான் அதற்கான பணியைத்
தொடங்கினார்.
23.05.1867 அன்று வடலூரில் " சத்திய
தருமச்சாலையை " அமைத்தார். அன்று அந்த அணையா அடுப்பில் ஒளியை ஏற்றும்போது
வள்ளலார் என்ன சொன்னார் தெரியுமா? " உலகத்தில் தருமம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது. இந்த அடுப்பு
உள்ளவரை தருமம் அணையாது " என்றார்.
அவர் சொன்னது போலவே அந்த அடுப்பு இன்றுவரை அணையாமல் உள்ளது. அந்த
அடுப்பின் ( 1867 - 2024) வயது தற்போது
157 ஆண்டுகள். இந்த உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் கதிர்கள் என்று
அணைகிறதோ, அன்றுவரை இந்த அடுப்பு அணையாது.
இது பசித்தீயை அணைப்பதற்காக வள்ளலார் பற்ற வைத்த தீ. அந்தத் தீ இன்றுவரை அணையாமல்
இருந்து கொண்டு பலகோடி மக்களின் பசித்தீயை அணைத்துக் கொண்டு வருகிறது.
" மண்ணுல கத்திலே உயிர்கள்தாம் வருந்தும்
வருத்தத்தை ஒருசிறிது எனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும்நான் சகித்திட மாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால்
இசைத்தபோது இசைத்தபோது எல்லாம்
நண்ணும்அல் வருத்தம் தவிர்க்கநல் வரந்தான்
நல்குதல் எனக்கிச்சை எந்தாய் "( திருவருட்பா)
"இந்த மண்ணுலகில் உள்ள எண்ணற்ற உயிர்கள்
படும் வேதனையைக் கண்டு துயிர் உற்றேன். அதன் துன்பங்களைக் கண்ணால் பார்க்கும்
போதும், காதால் கேட்கும் போதும் ஒரு நொடியும் நான் பொறுக்க மாட்டேன். அவற்றின்
வருத்தத்தைப் போக்கும் வரம்தனை எனக்குக் கொடு " என்று அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவரிடம் வேண்டுகிறார் இந்த உலகத்தில் இப்படி ஒரு வரத்தை வள்ளலாரைத் தவிர வேறு
யாரும் கேட்டதில்லை.
இந்தப்
பாடலில் அவருக்காக எதையும் கேட்கவில்லை . மண்ணில் வாழும் சிறிய உயிர்கள்
முதல் உயர்ந்த மனிதர்கள் வரை அனுபவிக்கும் துன்பங்களைப் போக்க வேண்டும்
என்பதுதான் அவர்கேட்ட வரம். துன்பம் என்பது சாதாரண துன்பம் இல்லை. மரணம் என்னும்
துன்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதாகும். அத்துன்பத்தைப் போக்க
வேண்டும் என்றால் இறைவனின் அருள் வேண்டும் என்று வேண்டுகிறார்.
வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை, பொதுமையை
உணர்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வாரி வழங்கினார். மரணத்தை வென்று அருள் ஆட்சியைப் பெற்றார்
வள்ளல் பெருமான். அவர் பெற்ற அருள் ஆட்சியையும்,
மரணம் இல்லாப் பெருவாழ்வையும் நாம் பெற என்ன செய்ய வேண்டும்? அவரைப் போல
எல்லா உயிர்கள் மீதும் நாம் அன்பு செலுத்த வேண்டும்.
" உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு
எல்லாம்
விலகநீ அடைந்து விலக்குக மகிழ்க " ( அருட்பெருஞ்ஜோதி அகவல்)
நாம் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும்
என்றால் உலகில் உள்ள உயிர்களுக்கு எந்த வகையிலும் துன்பம் நேராதபடி பார்த்துக்
கொள்ள வேண்டும். உலக உயிர்களுக்கு துன்பம் வருகின்றபோது அதை எந்த வழியிலாவது
தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி இடைவிடாமல்
செய்து வந்தால் நம் உடம்பில் உயிர் பிரியாமல் இருக்கும்.
மனிதன் மரணம் இல்லாப் பெருவாழ்வைக் காண இதுவே
எளிய வழியாகும். உயிர்க்கொலை செய்யாதவர் களுக்குத்தான் அருளும் கிடைக்கும். ஆயுளும் கிடைக்கும்.
" உயிர் இரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்
" என்கிறார் வள்ளலார்.
உலக உயிர்களுக்கு நீங்கள் வாழும் வரத்தைக்
கொடுத்தால், இயற்கை உங்களுக்குச்
சாகாவரத்தைக் கொடுக்கும்.
உலக
உயிர்களுக்கு நீங்கள் சாகும் வரத்தைக் கொடுத்தால், இந்த உலகில்
வாழும் வரத்தை இயற்கை உங்களுக்குக் கொடுக்காது.
" உங்கள் உள்ளத்தில் பெருகட்டும் ஈடில்லா
ஈகை!
உங்கள் உள்ளங்கையில் நீண்டிடும் ஆயுள் ரேகை!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 194. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் ஆ.தி.பகலன்"
Post a Comment