தமிழ் அறிவோம்! 195. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...
தமிழ் அறிவோம்!  195.  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே  ஆ.தி.பகலன்

  


"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே "
 

இம்ண்ணில் பிறந்து, சிறந்து, மறைந்து போனவர்களில் யாரேனும் ஒருவரை உயிர்த்தெழ வைக்கும் வரத்தை இயற்கை எனக்கு  அளித்தால்,  நான் யாரை உயிர்த்தெழ வைப்பேன் தெரியுமா? 

மணிமேகலையை அவள் கையில் வைத்திருந்த அமுதசுரபியோடு உயிர்த்தெழ வைப்பேன் .

இங்கு  அறிவுரை சொல்வதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அடுத்தவர் பசியை ஆற்றுவதற்குத்தான் இங்கு ஒருவரும் இல்லை.  

கண்ணகியைக் கொண்டாடிய அளவுக்கு இந்தச் சமூகம் ஏன் மணிமேகலையைக் கொண்டாடவில்லை?  கோவலன்கள் அதிகமாக வாழும் நாட்டில் எப்படி கொடையுள்ளம் கொண்டவர்களை எதிர்பார்க்க முடியும்?

ஓர் ஊரைப் பற்ற வைத்தவர்க்குக் கோவில் கட்டி கொண்டாடும் மக்கள்,  பசியோடு வந்த  மக்களுக்குப் பந்தி வைத்து சோறு போட்டவர்க்கு ஏன் கோவில் கட்டி கொண்டாடவில்லை. எல்லாம் அரசியல் சூழ்ச்சி. 

படமாக இருந்தாலும் சரி,  பாடமாக இருந்தாலும் சரி இங்கு வன்முறையைத் தூண்டுபவர்களுக்கே மாலையும், மரியாதையும் கிடைக்கும்.  நன்முறையில் வாழ்பவர்களைக் கனவில் கூட கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்கு

" மணிமேகலை " ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சமயச் சாக்கடையில் விழுந்தவர்கள் எல்லாம் " மணிமேகலை காப்பியம் "  ஒரு சமயக் காப்பியம் என்று சாக்குபோக்கு சொல்லி தப்பிப்பர். அரை தேக்கரண்டி அளவு கூட அறிவு இல்லாதவர்களை எல்லாம் நாம் என்ன செய்வது? பசித்தோர்க்கு எல்லாம் உணவிட்டு " உண்மையானத் தொண்டு " என்பது இதுதான் என்று உலகிற்கே பாடம் நடத்திய பச்சை தமிழச்சிதான் " மணிமேகலை " 

பசிக் கொடுமையையும், அதற்கான தீர்வையும்  அழுத்தம் திருத்தமாகச் சொன்ன ஒரே நூல் " மணிமேகலை காப்பியம் " மட்டுமே. 

" குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்

பூண்முலை மாதரோடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது " ( மணிமேகலை) 

குடிப்பிறப்பு பெருமையை அழிக்கும்.  சிறப்புகள் இல்லாமல் செய்யும். கல்வி என்னும் செல்வத்தைக் கைவிட்டுவிடும்.  செய்யத்தகாதன செய்வதற்கு நாணும் பண்பினை விளக்கிவிடும். உடல் அழகைக் கெடுத்துவிடும். பெண்ணுக்கு முன் நிற்க முடியாமல் வெளியில் நிறுத்தும். இப்படிப்பட்ட கொடுமைகளை உண்டாக்கும் பசிப்பிணி என்னும் பாவி என்று கூறிவிட்டு,  அதோடு நில்லாமல் அத்தகைய பசிப்பிணியைப் போக்கியவரின் புகழையும் அழகாக சொல்கிறார் சீத்தலைச் சாத்தனார்.  அதாவது கொடிய பசிப்பிணியைப் போக்கியவரின் புகழை " என் நாவால் முழுமையாகச் சொல்ல இயலாது " என்கிறார்.  பசியின் கொடுமையை இதைவிட சிறப்பாகச் சொல்ல இன்னொரு இலக்கியம் தேவையா? ஒருபோதும்  தேவைப்படாது. 

உலகம் உள்ளவரை பசிக்கொடுமையைப் பறைசாற்ற படைக்கப்பட்ட இலக்கியம்தான் மணிமேகலை காப்பியம். பசியின் கொடுமையையும், அது உண்டாக்கும் தீமையையும் அதனை அடியோடு தீர்ப்பதற்கான தீர்வையும் அழகாகச் சொல்லும் இலக்கியமே " மணிமேகலை காப்பியம் " . அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி மணிமேகலையின் கையில் கிடைக்கிறது. அந்த அமுதசுரபியைக் கொண்டு மணிமேகலை என்ன செய்தால் தெரியுமா? 

" காணார், கேளார், கால்முடப் பட்டோர்,

பேணா மாக்கள், பேசார், பிணியோர்,

படிவ நோன்பியர், பசிநோய் உற்றோர்,

மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும் " ( மணிமேகலை) 

இப்பாடலில் கூறப்பட்டு உள்ளவர்களுக்கும்,  வறியவர்களுக்கும் உணவளித்தாள். அவர்களின் பசிப்பிணியை அறவே நீக்கினாள். பசியில்லா நாடாக சோழநாட்டை மாற்றினாள். குற்றங்கள் குறைந்தன. அறங்கள் மலர்ந்தன. அதனால் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாறியது.

"பசி ஒழிந்தால் பாவங்கள் ஒழியும் " என்பதை எடுத்துக் காட்டுகிறது "மணிமேகலை காப்பியம் ". மணிமேகலை காட்டிய பாதையில் இந்த உலகம் பயணம்  செய்திருந்தால் இந்த உலகில் போர் ஏது? பூசல் ஏது? 

காவல் நிலையம் , நீதிமன்றம், சிறைச்சாலை, இராணுவம் இவை எதுவுமே இந்த உலகிற்குத் தேவைப்படாது. குற்றவாளிகள் இல்லாத உலகில் இவைகளுக்கு என்ன வேலை? இந்த மண்ணுலகம் பொன்னுலகமாய் மாறி இருந்திருக்கும். 

" ஆற்றுநகர்க்கு அளிப்போர் அறநிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

மண்திணி நிலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே " ( மணிமேகலை) 

தானாகத் தேடி உணவு உண்ணத் தகுந்தவர்க்கு உணவை வழங்குவது என்பது  தம் பெருமையை நிலைநாட்டுவதற்கோ அல்லது வேறு  பயன் கருதியோ செய்வதாகும்.  இஃது அறத்தை விற்பதற்கு ஒப்பான வணிகமாகும்.

தானே முயன்று உணவைத் தேட முடியாமல் துன்பப்படும் ஏழைக்கு நாம் தரும்  உணவானது அவர்களுக்கு உயிர் கொடுத்ததற்கு ஒப்பான செயலாகும். 

பொதுவாக நமக்கு உயிர் கொடுத்தவர்கள் யாரென்று கேட்டால் நம் பெற்றோரை மட்டுமே கூறுவோம். ஆனால் மணிமேகலை காப்பியம் என்ன சொல்கிறது தெரியுமா?

"உங்களுக்கு உணவிட்டவர்கள் அனைவருமே உங்களுக்கு உயிர் கொடுத்தவர்கள் ஆவர் " என்கிறது.  நம் வாழ்நாளில் நமக்கு உணவு கொடுத்தவர்கள் எல்லோருமே நமக்கு உயிர் கொடுத்தவர்கள்தான். "உணவுக்கொடை" தருபவர்கள் அனைவருமே இந்த உலகிற்கு "உயிர்க்கொடை" தருபவர்கள்தான். 

"பசித்தோர்க்கு உணவிடும் ஒவ்வொருவருமே நடமாடும் அமுதசுரபிதான்"

 "வாருங்கள்!

நாளைமுதல்

நாமும்

அமுதசுரபிகள் ஆவோம் " 

இனியாவது

மணிமேகலையைக் கொண்டாடுங்கள்!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .


0 Response to "தமிழ் அறிவோம்! 195. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel