15.06.2021 செய்திகள் *ஹரித்வார்* உத்தராகண்டில்
நடந்து முடிந்த கும்பமேளாவின் போது போலி கொரோனா சோதனை முடிவுகள் அளிக்கப்பட்டதாக
கூறப்படும் விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு அம்மாநில அரசு
உத்தரவிட்டுள்ளது. உத்தராகண்ட்
மாநிலம் ஹரித்வார், டேராடூன், தெஹ்ரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் 1 முதல் 30-ம் தேதி வரை
பிரசித்தி பெற்ற கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கங்கையில் புனித நீராடினர். *சென்னை* தமிழ்நாட்டில்
மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து
தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழக அரசு
நிர்வாக ரீதியாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. பல்வேறு
துறைகளில் அனுபவமிக்க அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு கூடுதல்
பொறுப்பு, கூடுதல் பதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி
தற்போது 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
செய்யப்பட்டிருக்கின்றனர். திருப்பூர்
ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் மனித உரிமை ஆணைய செயலாளராக
நியமிக்கப்பட்டிருக்கிறார். பதிவுத்துறை
ஐ.ஜி.யாக இருந்த பி.சங்கர் காதி கைவினைப் பொருள் ஆணைய சி.இ.ஓ.வாக நியமனம்
செய்யப்பட்டிருக்கிறார். நாமக்கல்
மாவட்ட முன்னாள் ஆட்சியர் மேக்ராஜ் நகராட்சி நிர்வாகத்துறை இணைச் செயலாளராக
நியமிக்கப்பட்டிருக்கிறார். *கன்னியாகுமரி* கன்னியாகுமரி
மாவட்டத்தில் தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இரண்டாவது
முறையாக ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 85 லட்சம் ரூபாய் செலவில் கோவில் புனரமைக்கப்பட
உள்ளதாக தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில்
பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த 2ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மேற்கூரை இடிந்து
சேதமடைந்தது. தொடர்ந்து, கோயிலை புனரமைப்பதற்கான தேவபிரசன்னம் நிகழ்ச்சி
இன்று தொடங்கிய நிலையில், அறநிலையத்துறை
அமைச்சர் சேகர்பாபு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர்
இரண்டாவது முறையாக பகவதி அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். தேவபிரசன்னம்
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமைச்சர்கள் பின்னர் சாமி தரிசனம் செய்தனர். *கொல்கத்தா* மேற்கு வங்க
மாநிலத்தில் ஜூலை1-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து
முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு
முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசின் 2வது அலையை
கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்
போராடி வருகின்றன. அதன்படி
மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில்
பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில்
மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை1-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து
முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். *புதுடெல்லி* பிரதமர் மோடி
இரண்டாவது முறையாக பதவியேற்று 2 ஆண்டு
முடிந்த நிலையில், 4 அமைச்சர்
பதவிகள் காலியாக உள்ளன. இந்நிலையில்
மத்திய அமைச்சரவையில் மாற்றம் குறித்து டெல்லியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில், ஜோதிராதித்யா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு
அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பிரச்னை
ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தலைநகர்
டெல்லியில் அரசியல் சூழலும் மாறிவருகிறது. கடந்த சில
நாட்களுக்கு முன் பிரதமர் மோடியின் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பரபரப்பாக
பேசப்பட்டு வருகிறது. இரண்டாவதாக
ஆட்சியை பிடித்த பின்னர் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 57 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். *மும்பை* அதானி குழும
நிறுவனங்களில் ரூ. 43,000 கோடி முதலீடு
செய்துள்ள 3 வெளிநாட்டு
நிதி நிறுவனங்களின் கணக்குகளை என்எஸ்டிஎல் எனப்படும் தேசிய பங்குப்பத்திர
கட்டுப்பாட்டு அமைப்பு முடங்கியுள்ளது. இதன்
எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகள் சுமார் 20% அளவுக்கு சரிவை சந்தித்தன. மொரீஷியஸ்
நாட்டில் இயங்குவதாக பதிவு செய்யப்பட்டுள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ்
இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய நிறுவனங்கள் அதானி குழுமத்தில் பெரும் முதலீடுகள்
செய்துள்ளன. அதானி குழும
நிறுவனங்களில் இவை ரூ. 43,500 கோடி அளவு பங்குகளை
தன் வசம் வைத்துள்ளன. *மும்பை* மகாராஷ்டிரா
மாநிலம் மும்பையில் பெய்துவரும் கனமழையால் கன்டிவெலி பகுதியில் உள்ள பாதாளச்
சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர்
வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த
அந்தத் தொகுதி சிவசேனா எம்எல்ஏ திலிப் லண்டே, தூர்வாரும்
பணிக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரரை வரவழைத்து, அவரைக் கட்டாயப்படுத்தி மழைநீர் தேங்கிக் கிடக்கும் சாலையில் அமர வைத்தார். பின்னர், அங்கு நின்றிருந்த இரண்டு பேரை அழைத்து, ஒப்பந்ததாரர் மீது குப்பையை அள்ளிப்போடச்
செய்தார். இவரது செயல், அங்கிருந்தவர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தச்
செய்தது. *சண்டிகர்* அரியானா
முன்னாள் முதல்வர் சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையில், அவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். அரியானா மாநில
முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய
லோக் தள கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (86), நேற்று காரில் குர்கான் - பாட்லி - ஜாஜ்ஜர் சாலையில் சென்று
கொண்டிருந்தார். அந்த காரின்
முன்பக்க இருக்கையில் டிரைவர் அருகே சவுதாலா அமர்ந்திருந்தார். அப்போது
முன்னாள் சென்ற மற்றொருகாருடன், சவுதாலா சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. *பீம்நகர்* நேபாளம்
வழியாக இந்தியாவுக்கு கடத்த முயன்ற 2.5 சீன ஆப்பிள்
பெட்டிகளை எல்லை பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்விவகாரம்
தொடர்பாக 8 பேர் கும்பலை கைது செய்துள்ளனர். இந்திய
எல்லையான நேபாளம் வழியாக, சீனா போன்ற
நாடுகளை சேர்ந்த ஊடுருவல்காரர்கள் அவ்வப்போது புகுந்து, குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்
எஸ்எஸ்பி மற்றும் பீகார் போலீசின் கூட்டு நடவடிக்கை குழு, இந்திய எல்லையான பீம்நகரில் தீவிர வாகன
தணிக்கையில் ஈடுபட்டது. விர்பூர்
மற்றும் பீம்நகரில் சாலையில் உள்ள செங்கல் ஆலைக்கு அருகே, மர்மமான முறையில் சென்ற 3 லாரிகளை கூட்டு நடவடிக்கை குழு மடக்கி
பிடித்தது. நேபாள பதிவு எண் கொண்ட அந்த லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதில் உள்ள பொருட்களை ஆய்வு செய்தனர். மூன்று லாரியிலும் பெட்டி பெட்டியாக ஆப்பிள்
பார்சல் இருந்தன. *பாட்னா* பீகாரில்
பேஸ்புக் நட்பில் நடந்த காதல் திருமணத்தில் தம்பதியருக்குள் பிரச்னை ஏற்பட்டதால்
போலீஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா
மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த ரவி ராஜ் என்பவர், பாட்னாவில் உள்ள டவுன் போலீஸ் ஸ்டேசனில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த மூன்று
மாதங்களுக்கு முன்பு தனது பேஸ்புக் காதலி புஷ்பா குமாரி என்பவரை திருமணம் செய்து
கொண்டார். இந்நிலையில், ஆராவில் உள்ள போலீஸ் குடியிருப்பில் ரவி ராஜ்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை
கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, போலீசார் கூறுகையில், ‘ரவி ராஜூம் புஷ்பா குமாரியும் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பாட்னாவில் முதல் முறையாக
சந்தித்தனர். *கோபால்கஞ்ச்* பீகாரில் கால்
மற்றும் முதுகு எலும்பு முறிவால் அவதியுறும் தாயை, தனது கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு முதுகில் சுமந்து செல்லும் பாச
மகளை பலரும் பாராட்டி வருகின்றனர். பீகார்
மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த உம்ராவதி என்ற பெண்ணின் கணவர் கடந்த சில
ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அதனால், தனது தாயுடன் உம்ராவதி வசித்து வந்தார். அவரது
தாய், கடந்த மூன்று வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல்
அவதிப்பட்டு வருகிறார். காரணம், மூன்று ஆண்டுகளுக்கு முன் தாயின் காலில் முறிவு
ஏற்பட்டதால், அவரால்
மற்றவர்களை போன்று நடக்க முடியாது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், தாயின் முதுகு எலும்பு முறிந்ததால், அவரால் நிமிர்ந்து நடக்கவோ, அமரவோ முடியவில்லை. *பாட்னா* பீகாரில்
நுரையீரல் நிபுணரின் மகனான எம்பிபிஎஸ் மாணவரிடம் மருத்துவ உதவிகேட்டு மோசடி செய்த
டுபாக்கூர் ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர். பீகார்
மாநிலம் பாட்னா பிஎம்சிஹெச் மருத்துவமனையின் நுரையீரல் துறை நிபுணர் டாக்டர்
சுனில் குமார் அகர்வாலின் மகன் ஷோபித் குமார், நேபாளத்தில்
எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். கடந்த சில
தினங்களுக்கு முன் நேபாளில் இருந்து ஷோபித் குமார் பாட்னா வந்தார். கடந்த 11ம் தேதி ஷோபிக் குமாரின் செல்போனுக்கு ஒரு
அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை ஒரு ராணுவ வீரர் என்று அறிமுகப்படுத்திக்
கொண்டார். மருத்துவ
சிகிச்சைக்காக உதவிகேட்டு, தனது ஆதார்
அட்டை எண் போன்ற ஆவணங்களை ஷோபிக் குமாரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பினார். பின்னர் சில
மணி நேரங்கள் கழித்து ஷோபித்தை அந்த நபர் (ஆதாரில் உள்ள பெயர் சதீஸ்) அழைத்தார். *திருமலை* 2 குழந்தைகள் பெற்றதை மறைத்து 4 பேரை
திருமணம் செய்து ரூ18 லட்சம்
பறித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர
மாநிலம், சித்தூர் மாவட்டம் நரபுராஜூ கண்ரிகாவை
சேர்ந்தவர் சுனில்குமார்(29). இவர் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி சத்தியநாராயணபுரத்தில்
வசித்து வந்தார். ஏடிபி நிதி
நிறுவனத்தில் பணிபுரிபவர் சுஹாசினி. இவருடன் சுனில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அது காதலாக மாறியது. அப்போது
சுஹாசினி தான் அனாதை என்று கூறி கடந்தாண்டு டிசம்பரில் சுனில்குமாரை திருமணம்
செய்து கொண்டார். சுனில்குமாரின்
குடும்பத்தினர் சுஹாசினிக்கு 3 சவரத்தில்
தங்க நகைகளை வாங்கி கொடுத்தனர். *புதுச்சேரி* புதுச்சேரியில்
அனைத்து அரசு அலுவலகங்களும் ஜூன் 16-ம் தேதி முதல்
100 பணியாளர்களுடன் இயங்க அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில்
கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை
ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. *கடலூர்* தடை
செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களை பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் எச்சரித்துள்ளார். தடை
செய்யப்பட்ட வலைகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்கும் வியாபாரிகள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். *சேலம்* *இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில்
நிருபர்களிடம் கூறியதாவது:* நாட்டில் 2வது கொரோனா
அலை மிக மோசமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. ஆனால், அதை மத்திய அரசு சரியான முறையில் கையாளவில்லை. மாநிலங்களுக்கு
தடுப்பூசி ஒதுக்குவதில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படவில்லை. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு
ேதர்வுகள் ரத்து செய்யப்பட்டது போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். *ஈரோடு* ஊரடங்கால்
வேலை இழந்தும், ஊர்திரும்ப முடியாமலும்
தவித்த தொழிலாளர்களை அரசு பள்ளியில் தற்காலிக முகாம் அமைத்து ஆதரவுக்கரம் நீட்டி
வருகிறார் இளம்பெண் ஒருவர். அடிப்படை
தேவையான உணவு, இருப்பிடம்
மட்டுமின்றி உடலையும், உள்ளத்தையும்
புத்துணர்வு ஆக்கும் மையமாகவும், தொழிற்பயிற்சி
கூடமாகவும் இந்த முகாம் மாறி இருக்கிறது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா. கொரோனாவை கட்டுப்படுத்த
ஊரடங்கு. ஊரடங்கால்
முடங்கிய தொழில்கள். இதனால்
நிர்கதியான தொழிலாளர்கள் என பொதுமுடக்கம் தொழிலாளர்களின் வாழ்க்கையை
முடக்கிவிட்டது. இதிலும்
ஊர்விட்டு ஊர்வந்து கிடைத்த வேலையை செய்து பிழைப்பு நடத்தி வந்தவர்கள் நிலை தான்
இன்னும் மோசம். இவ்வாறு ஈரோடு
நகரில் நிர்கதியான 70 பேரை
இளம்பெண் ஒருவர் தனது குழுவினருடன் இணைந்து அரசு பள்ளியில் தற்காலிக முகாம்
அமைத்து பராமரித்து வருகிறார். *பிரேசிலியா* தென் அமெரிக்க
கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47வது கோபா
அமெரிக்கா கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு
தள்ளிவைக்கப்பட்டு பிரேசிலில் நேற்று தொடங்கியது. ஜூலை 10ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடர் பிரேசிலின் 4 நகரங்களில் உள்ள 5 மைதானங்களில் நடக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஏ பிரிவில்
அர்ஜென்டினா, பொலிவியா, உருகுவே, சிலி, பராகுவே, பி பிரிவில்
பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பெரு ஆகிய
அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு
அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில்
இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை
பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். *துபாய்* ஐசிசி டெஸ்ட்
தரவரிசை பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்து மீண்டும் முதல்
இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்துக்கு
எதிரான 2 டெஸ்ட்கொண்டதொடரை 1-0 என
நியூசிலாந்து கைப்பற்றியது. முதல் டெஸ்ட்
டிராவில் முடிந்த நிலையில் பர்மிங்காமில் நடந்த 2வது டெஸ்ட்டில் 8 விக்கெட்
வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 22 ஆண்டுக்கு பின் இங்கிலாந்து மண்ணில், டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. தொடரை
வென்றதன் மூலம் நியூசிலாந்து 123புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்
பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியது. இங்கிலாந்து 3வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு பின் தங்கியது *சென்னை* அனைத்து
மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் நாளை காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார். கொரோனா
தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்தும் ஆட்சியர்களிடம் முதல்வர்
கேட்டறிவார் எனவும் கூறப்படுகிறது.
0 Response to "15.06.2021 செய்திகள்"
Post a Comment