புறநானூறு
சிற்றில்
நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு
உளனோ என வினவுதி என்மகன்
யாண்டு
உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி
சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற
வயிறோ இதுவே
தோன்றுவன்
மாதோ போர்க்களத் தானே
-காவற் பெண்டு (புறநானூறு பாடல் 86)
கவிநடை
உரை
எம்
சிறுகுடிலின் அழகிய தூணைப் பற்றி நின்று
என்
மகன் எங்கே என்று வினவும் பெண்ணே!
அவனிருக்கும்
இடம் யானறியேன்;
புலி
தங்கிச் சென்ற குகை போல
அவனைப்
பெற்ற வயிறு இங்குள்ளது;
ஒருவேளை போர்க்களத்தில் இருக்கக் கூடும்!
சொல்லும் பொருளும்
சிற்றில் – சிறு வீடு யாண்டு – எங்கே
கல் அளை – கற்குகை ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
பாடலின் பொருள்
சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் மனைக்குச் சென்று, ‘அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?’ எனக் கேட்டாள். ‘சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக்கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே?” என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் என எனக்குத் தெரியவில்லை. எனினும் புலி தங்கிச் செல்லும் குகை போல
அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என புலவர் பதிலளித்தார்.
நூல்வெளி
காவற்பெண்டு என்ற பெண்பாற்புலவர் சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக
விளங்கியவர் என்பர்.
கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும்
மிக்க இவர்,
சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக்
கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார். இப்பாடல் புறநானூற்றில்
இடம்பெற்றுள்ளது.
புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின்
வாழ்க்கைமுறை,
நாகரிகம், பண்பாடு, வீரம்,
முதலியவற்றை வெளிக்காட்டும் நூலாக விளங்குகிறது.
0 Response to "ஏழாம் வகுப்பு - இயல் 3 - கவிதைப்பேழை - புறநானூறு- காவற்பெண்டு - பாடல் 86"
Post a Comment