
ஒன்றிய அரசு
தயாரித்து அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கை மீது பல்வேறு விமர்சனங்கள்
வந்திருந்தாலும், அதன் மீது பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்து கேட்டு அதற்கு பிறகே புதிய கல்விக் கொள்கையை
அறிமுகம் செய்வோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதன் பேரில் தற்போது புதிய
கல்விக் கொள்கை நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இந்த புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை பின்பற்றி, தங்களுக்கான பாடத்திட்டங்களை தயாரிக்கும் பணியில் பல்வேறு பல்கலைக்
கழகங்களும், ஐஐடி நிர்வாகங்களும் ஈடுபட்டுள்ளன.
இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை
அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன. புதிய கல்விக் கொள்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில், புதிய
பாடத்திட்டத்தை உருவாக்கி வரும் பல்கலைக் கழகங்களை எடுத்துக் கொண்டால், மத்திய பல்கலைக் கழகங்கள், முதுநிலைப் பட்டப் படிப்பில் தொழில்
படிப்புகள் அல்லாத, முதுநிலைப்
பட்டப் படிப்புகளில் பிளஸ் 2 படித்து
முடித்த மாணவர்கள் நேரடியாகவே சேரும் வகையில் ஒரு புதிய முதுநிலைப் பட்டப்
படிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
புதுடெல்லி ஐஐடி இயக்குநர் ராம்கோபால்
ராவ் கூறுகையில், புதிய கல்விக் கொள்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை ஐஐடிகள் முன்னெடுக்க உள்ளன. அதில், செயற்கை நுண்ணறிவுப் பள்ளிகளும் ஒன்று.
இது தவிர டெல்லி ஐஐடியில் போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் காயத்தடுப்பு மையம், எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல்
துறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய
கல்விக் கொள்கையை மனதில் வைத்து, மின்
போக்குவரத்து வாகனங்கள், பொதுக்
கொள்கைள் ஆகிய தலைப்புகளில் முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் தொடங்கவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக்
கொண்டு மூன்று புதிய ஒருங்கிணைந்த படிப்புகளை ஹரியானா மத்திய பல்கலைக் கழகம்
அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, இந்த
மூன்று புதிய படிப்புகளும் இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகியவற்றில் 2021-2022ல்
அறிமுகமாக உள்ளது. அவை, பிஎஸ்சி-எம்எஸ்சி
இயற்பியல், பிஎஸ்சி-எம்எஸ்சி வேதியியல், பிஎஸ்சி-எம்எஸ்சி கணக்கு என்று இணைந்து
இருக்கும். இந்த படிப்புகளுக்கான சேர்க்கையை மத்திய பல்கலைக் கழகம் நுழைவுத்
தேர்வு மூலம் நடத்தும். இந்த படிப்புகள் புதிய கல்விக் கொள்கையை மனதில் கொண்டு
தொடங்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் முதுநிலைப்
பட்டப்படிப்புவரை நேரடியாக படிக்க முடியும். இந்த பட்டப் படிப்புகள் தனித்துவமாக
வடிவமைக்கப்படுகிறது. அதாவது மாணவர்களுக்கு வேலை
வாய்ப்புக்கானதாகவும், தற்சார்பு
உடையதாகவும் இந்த படிப்புகள் இருக்கும்.
மேற்கண்ட படிப்புகளுக்காக நடத்த இருக்கின்ற நுழைவுத் தேர்வுக்கு ஒரு மண்டல
அதிகாரியையும் மத்திய பல்கலைக் கழகம் நியமித்துள்ளது. இதையடுத்து, இந்த மூன்று படிப்புகளும் அடிப்படை
அறிவியல் இருக்கையின் கீழ் தொடங்கப்படும் என்று அந்த மண்டல அதிகாரி
தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் இந்த பல்கலையின் மற்ற இளநிலைப்
படிப்புக்கான சேர்க்கை நடக்கும் போது கிடைக்கும்.
இருப்பினும், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில்
இந்த புதிய படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் விரும்பினால் அதிலிருந்து
வெளியேறவும் வாய்ப்பு வழங்கவும் மத்திய பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி பல்கலைக் கழகத்துடன் இணைப்பு
பெற்றுள்ள 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள், வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில்
படிப்புகளை தொடங்க உள்ளன. அத்துடன் பல்வேறு கல்லூரிகள், டிப்ளமோ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளையும் இந்த தொழில்
படிப்புகளின் மூலம் விரைவில் தொடங்க உள்ளன.
0 Response to "புதிய கல்வி கொள்கையின்படி பல்கலை, ஐஐடி பாடத்திட்டம்: இந்த கல்வி ஆண்டில் அறிமுகம்"
Post a Comment