தமிழக அரசுப்பள்ளி
பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டி முதல்வருக்கு கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தரப்பில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
காலமுறை ஊதியம்:
2010ம்ஆண்டு அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது. அந்த விழாவின் போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் பல ஆண்டு காலம் ஆகியும் அந்த அறிவிப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மற்ற துறையை சார்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு அந்தந்த துறைகள் வழியாக நேரடியாக ஊதியம் வழங்கப்படுகிறது.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு பல அலுவலகங்கள் வழியே நிதி மாற்றப்பட்டு ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தொடக்க கல்வி இயக்குனரிடம் இருந்து உள்ளாட்சி இயக்குனருக்கு நிதி வழங்கப்பட்டு அங்கிருந்து கலெக்டருக்கும் அதன் பின் ஊராட்சி ஒன்றிய கமிஷனருக்கும் ஊதியம் மாற்றப்படுகிறது. இறுதியில் வட்டார கல்வி அலுவலர் வழியாக மாத ஊதியம் 500 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. துப்புரவு பணியாளர்கள் காலை 7 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் பள்ளியை சுத்தம் செய்தல், மின் மோட்டார்
இயக்கம், பள்ளி வளாகத்தை தூய்மை செய்தல், மதிய உணவுக்கு பின் மீண்டும் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை செய்து
வருகின்றனர். அதனை தொடர்ந்து தமிழக அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி துப்புரவு
பணியாளர்கள் சங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சிறப்பு காலமுறை
ஊதியம் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
0 Response to "தமிழக அரசுப்பள்ளி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் – அரசுக்கு கோரிக்கை! "
Post a Comment