
செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிதாக விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கு பம்பர்
டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த
உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
சாலையில் இயக்கப்படும்
அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு அவசியமானதாக கருதப்படுகிறது. ஒகேனக்கல்லில் சாலை
விபத்து நடந்ததில் சடையப்பன் என்பவர் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு
குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு
தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு இறந்தவரின்
குடும்பத்திற்கு 14,65,000 ரூபாய் இழப்பீடு வழங்க
வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து
சென்னை உயர்நீதிமன்றத்தில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வாகனத்திற்கான ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் என்ற
அடிப்படையில் மட்டுமே வாகனத்திற்கு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஓட்டுனர்
அல்லாத ஒருவர் இறப்பிற்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் எனவும்
காப்பீடு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் விளக்கம் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என்று அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனை போக்குவரத்து துறை இணை ஆணையர் மண்டல அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் அதை அமல்படுத்த 3 மாத காலம் அவகாசம் வேண்டும் என பொது காப்பீட்டு கவுன்சில் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டு வழக்கு விசாரணை 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 Response to "செப்.1 முதல் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் – உத்தரவு நிறுத்தி வைப்பு!"
Post a Comment