டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போதே
தேர்வர்கள் உரிய சான்றிதழ்கள் அனைத்தையும் பிடிஎஃப் வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
எழுத்துத் தேர்விற்குப் பின்னர் சான்றிதழ்
பதிவேற்றம் செய்வது தொடர்பாக தனியாக எந்த அறிவிப்பும் தேர்வாணையத்தால் அனுப்பப்படமாட்டாது
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தேர்வாணையத்தால் குரூப் 1, குரூப்
2, குரூப் 2A, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகளும்
வெளியாகி வருகின்றன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி. உமா
மகேஸ்வரி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விண்ணப்பதாரர்கள் இணைய வழியில்
விண்ணப்பம் சமர்ப்பிக்கும்பொழுதே, அவர்களால் இணையவழி விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள
தகவல்கள் / உரிமை கோரல்களுக்குஆதாரமான அனைத்துத் தேவையான சான்றிதழ்களையும் இணைய
வழிவிண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர் இணைய வழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும்பொழுதே,
அனைத்து ஆதார சான்றிதழ்களையும் ஆவணங்களையும் PDF வடிவத்தில் அதாவது (ஒன்று அல்லது
பல பக்கங்கள் கொண்ட) 200 KBக்கு மிகாமல் உள்ள ஒரு பிடிஎஃப் ஆவணமாக ஒவ்வொரு உரிமை
கோரலுக்கும் ஆதாரமாகக் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்படவேண்டிய ஆவணங்கள்/
சான்றிதழ்கள் குறித்த தகவல்கள் நேரடி நியமனங்களுக்காக தேர்வாணையத்தால் வெளியிடப்படும்
அறிவிக்கைகளில் காணப் பெறலாம். விண்ணப்பதாரர் இசேவை மையங்கள் உள்ளிட்ட அனைத்து
வழிகளிலும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் தேவையான சான்றிதழ்களை / ஆவணங்களைப்
பதிவேற்றம் செய்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள
வேண்டும். எனவே இனி வருங்காலங்களில் இதேர்வாணையத்தின் அறிவிக்கைகளின் அடிப்படையில்
விண்ணப்பிக்க விரும்பும் அனைத்துத் தேர்வர்களும் தங்களது சான்றிதழ்கள் அனைத்தையும்
மேற்குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்ய ஏதுவாக, முன்னரே ஸ்கேன் செய்து வைத்துக்
கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை விண்ணப்பதாரர்
தங்களது ஒருமுறைப் பதிவின் மூலம் சரிபார்த்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏதேனும் சான்றிதழ்கள் தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது பதிவேற்றம்
செய்யப்படாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் விண்ணப்பித்திருந்த பதவிக்கான தேர்வு அனுமதிச்
சீட்டினை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் நாளுக்கு இரண்டு நாள்கள்
முன்னர் வரை (அதாவது தேர்வு நடைபெற உள்ள தேதிக்கு 12 நாள்கள் முன்னர் வரை) சான்றிதழ்களைப்
பதிவேற்றம் செய்ய / மறு பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட
நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ, தேவையான ஆதார ஆவணங்களைப் (சரியாகவும் , தெளிவாகவும்
, படிக்கக்கூடியதாகவும்) பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரரின் இணையவழி விண்ணப்பம்
நிராகரிக்கப்படும்.
எழுத்துத் தேர்விற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும்
சான்றிதழ் சரிபார்ப்புப் பணியானது முற்றிலும் விண்ணப்பதாரரால் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது
பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்களின் அடிப்படையிலேயே அமையும்.
எழுத்துத் தேர்விற்குப் பின்னர் சான்றிதழ்
பதிவேற்றம் செய்வது தொடர்பாக தனியாக எந்த அறிவிப்பும் தேர்வாணையத்தால் அனுப்பப்படமாட்டாது.
எனவே, விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள், ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதில் அதிக அக்கறையுடனும்
எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு
கூடுதல் விளக்கம் தேவைப்படின், helpdesk@tnpscexams.in / grievance.tnpsc@tn.gov.in என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல்
முகவரிக்கு அல்லது தேர்வாணையத்தின் 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு
(Toll free Number) அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை
தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை"
Post a Comment