வெட்டுக்கிளியும்
சருகுமானும்
நுழையும்முன்
தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின்
எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம்,
ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். தமது
முன்னோர்கள் காடுகளில் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை வருங்காலத் தலைமுறையினர்
மறந்துவிடக் கூடாது என்று எண்ணினர். எனவே காடுகள், செடிகொடிகள், விலங்குகள் தொடர்பான
கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் சொல்லி வந்தனர். அத்தகைய
கதைகளுள் ஒன்றைப் படிப்போம்.
************
நடுக்காட்டில் சலசலவென ஓடும் ஓடையையுடைய
பள்ளத்தாக்கில் பெரிய மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அதன்மீது மெத்துமெத்தென்று
பச்சைப்பாசி படர்ந்திருந்தது. பூச்சி புழுக்கள், நத்தைகள் ஆகியன அந்த மரத்தை
எப்போதும் மொய்த்துக் கொண்டிருக்கும். காட்டிலுள்ள அனைத்து விலங்குகளுமே நீர்
அருந்த அந்த ஓடைக்கு வரும். தாகம் தணிந்தபின் சிறு விலங்குகள் பக்கத்திலுள்ள
அடர்ந்த குறிஞ்சிப் புதரில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.
குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில்
பளிச்சென்று பூத்திருந்த நீலப் பூவின் இதழ்களுக்கிடையே பச்சை வெட்டுக்கிளி ஒன்று
வசித்துவந்தது. அது ஒரு வாயாடி வெட்டுக்கிளி. எப்பவும் பேசிக்கொண்டே இருப்பதால்
அடிக்கடி பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளும்.
ஒரு மாலை நேரம் கூரன் என்ற சருகுமானை
வெட்டுக்கிளி பார்த்தது. சருகுமான் ஓடையைத் தாண்டுவதும் குதிப்பதுமாக இருந்தது.
சருகுமான் சிறிய பிராணி; ஒரு பெரிய, வீட்டுப்பூனை அளவு
இருக்கும்; போதாதற்குக்
கூச்சப்படும் விலங்கு வேறு. எனவே அதைப் பார்த்து வெட்டுக்கிளி பயப்படவில்லை. கூரன்
குறிஞ்சிப் புதர் அருகில் இளைப்பாற வந்தது. இதுதான் சாக்கு என்று வெட்டுக்கிளி
அதனிடம் பேசத் துவங்கியது.
“என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று!
இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்?
ஏன் இங்கும் அங்கும் வேகமாக ஓடுகிறாய்?”
“காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்பொழுது
உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக்கொண்டு
வருகிறது. நான் எங்காவது ஒளிய வேண்டும்.
எனக்குச் சோர்வாக வேறு இருக்கிறது. பல மணி நேரமாக ஓடிஓடிக் களைத்துப்
போய்விட்டேன்.”
வெட்டுக்கிளி கொஞ்சநேரம் அமைதியாக இருந்தது.
அதற்கும் பித்தக்கண்ணுவைத் தெரியும். பெரிய, மஞ்சள் கண்களையுடைய
சிறுத்தைதான் அது; மிகச் சிறந்த வேட்டை
விலங்கு.
விழுந்து கிடந்த மரத்தைப் பார்த்ததும் அதன்
அடியில் கூரன் ஒளிந்துகொண்டது. தலையை மட்டும் தூக்கி வெட்டுக்கிளியை எச்சரித்தது. ‘வெட்டுக்கிளியே! நீ
வளவளவென்று பேசக்கூடிய ஆள். பித்தக்கண்ணு
உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே. அது
என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கிவிடும்.”
வெட்டுக்கிளி தலையை ஆட்டி உறுதிமொழி
அளித்துவிட்டுக் கண்ணை மூடிக் கொண்டது. அதற்குள் கூரனைத் தேடிக்கொண்டு
பித்தக்கண்ணு ஓடைப்பக்கம் வந்து சேர்ந்தது. சத்தமில்லாமல், அடிமேல் அடி வைத்து ஓடையில்
ஆங்காங்கு இருந்த பாறைகளின் மீது ஏறி மோப்பம் பிடித்துக்கொண்டே நடந்தது.
குறிஞ்சிப் புதரின் தாழக் கிடந்த கிளையின்மீது உட்கார்ந்திருந்த வெட்டுக்கிளி அதன்
கண்ணில்பட்டதும் அதைப் பார்த்து உறுமியது.
“கூரன் இங்கு வந்தாளா? அவள் எங்குச் சென்றாள் என்று
தெரியுமா?”
வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது.
பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது
இதுதான் முதல்முறை. அது கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வாயைத் திறந்த பொழுது, கூரனுக்கு
அளித்திருந்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. எனவே உடனே வாயை மூடிக்கொண்டது. ஆனால்
பித்தக்கண்ணுவைப் பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல் தன்னை அறியாமல்
கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது.
அறிவாளியான பித்தக்கண்ணுவுக்கு வெட்டுக்கிளியின்
குதியாட்டத்திற்கான பொருள் புரியாமலா போகும்? உடனே அது கூரன் பதுங்கிக்
கிடந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. நல்ல வேளையாக முதல் நாள் இரவுதான்
அந்த மரத்தடியில் புனுகுப்பூனை ஒன்று தங்கியிருந்தது. அது தங்கிய இடம்தான் அப்படி
நாறுமே. எனவே, பித்தக்கண்ணு
என்னதான் மோப்பம் பிடித்தாலும், கூரனின் உடல்வாடை
அதன் மூக்குக்கு எட்டவில்லை. மாறாக,
புனுகுப்பூனையின் துர்நாற்றமே
எட்டியது.
கொஞ்ச நேரம் பித்தக்கண்ணு அந்த இடத்தையே சுற்றிச்
சுற்றி வந்து மோப்பம் பிடித்துப் பார்த்தது.
ஆனால் எதுவும் தட்டுப்படாததால் உறுமிக்கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேறு பக்கம் சென்றது.
ஒளிந்திருந்த இடத்திலிருந்து கூரன் வெளியே
வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக் கொடுத்ததற்காக வெட்டுக்கிளிமீது
அதற்குக் கோபமான கோபம். அதற்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. இனி
எந்தச் சூழ்நிலையிலும் அது வாக்குறுதியை மீறக்கூடாது என்பதற்காக வெட்டுக்கிளியை
மிரட்டிவிட்டுப் போனால் என்ன என்று தோன்றியது.
“முட்டாள்! பித்தக்கண்ணு முன் அப்படிக்
குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப்
பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திணித்துத் திங்காமல்
விட்டது அதிசயம்தான்” என்று கத்தியது. “இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து
உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்.”
இப்படிச் சொல்லிக்கொண்டே தனது சிறிய, கூர்மையான பாதங்களை
மண்ணின்மீது அழுத்தி எகிறிக் குதித்தது. அதனுடைய இந்தச் செயலால் குறிஞ்சிப்புதர்
அப்படியும் இப்படியும் ஆடியது. அந்த வேகத்தில் தாழக் கிடந்த கிளையில் இருந்த
வெட்டுக்கிளி கீழே விழப்போனது. அதன் மீது கோபப் பார்வையை வீசிவிட்டுக் கூரன் காட்டுக்குள்
ஓடியது.
அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே
தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால்தான்
இன்றும்கூட வெட்டுக்கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்கமுடியாமல் குதித்த
வண்ணமுள்ளன. ஆனாலும் அவை எந்தக் குறிப்பிட்ட திசையை நோக்கியும் குதிப்பதில்லை.
நூல்வெளி
மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர்
காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். அவற்றை வ. கீதா ‘யானையோடு பேசுதல்’ என்னும் தலைப்பில்
தமிழாக்கம் செய்துள்ளார். அந்நூலில் இருந்து ஒரு கதை இங்கு எடுத்துத்
தரப்பட்டுள்ளது.
கற்பவை
கற்றபின்
1.
உங்கள்
பகுதிகளில் வழங்கப்பெறும் நாடோடிக் கதை ஒன்றனை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
2.
‘வெட்டுக்கிளியும்
சருகுமானும்’, கதையை நாடகமாக
நடித்துக் காட்டுக,
மதிப்பீடு
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ , கதையைச் சுருக்கி
எழுதுக.
பெட்டிச்செய்தி
பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில்
காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் பல உள்ளன. காடர்கள் மிகச்சிறிய பழங்குடி
சமுதாயத்தினர். தங்கள் பேசும் மொழியை ‘ஆல்அலப்பு’ என்று
அழைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைமுறை பற்றிய எழுத்துக் குறிப்புகள் ஏதும்
அவர்களிடம் இல்லை.
கற்பவை கற்றபின்
Question 1.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையை
நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
காட்சி : 1
கதைமாந்தர்கள்: வெட்டுக்கிளி,
சருகுமான் என்னும் கூரன், சிறுத்தை (பித்தக்கண்ணு). மலையின் காட்சி, அருவி விழும் ஓசை, நீரோடையின் சலசல சத்தம்.
வெட்டுக்கிளி : என்ன கூரன் பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு
நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன்
இங்கும் அங்குமாக பதற்றத்துடன் வேகமாக ஓடுகிறாய்?
கூரன் (பெண் சருகுமான்) : காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன்.
இப்போதைக்குஉன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு சிறுத்தை என்னைத் துரத்திக்
கொண்டு வருகிறது. நான் எங்காவது ஒளிய வேண்டும். பல மணி நேரமாக ஓடிட்டே இருக்கேன். சோர்வாக
இருக்கிறது.
வெட்டுக்கிளி : ம்,ம்,ம்….
மஞ்சள் கண்ணுடைய சிறுத்தை தானே… ம்ம்ம்ம் ..
கூரன் : இதோ விழுந்து கிடக்கும் மரத்தின் அடியில் ஒளியலாம்.
வெட்டுக்கிளி : சரியான முடிவு தான்….
கூரன் : வெட்டுக்கிளியே! நீ வளவளவென்று பேசிக்கொண்டிருக்காதே!
நான் ஒளிந்து கொள்கிறேன். பித்தக்கண்ணு சிறுத்தை உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால்
வாயைத் திறந்து எதையும் சொல்லி விடாதே! அது என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே
வாயில் விழுங்கி விடும்.
வெட்டுக்கிளி : சரி! சரி! ஒளிந்து கொள்.
பித்தக்கண்ணு சிறுத்தை : (உறுமியவாறே…. அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு
நிற்றல் வெட்டுக்கிளியைப் பார்த்தல்)
கூரன் இங்கு வந்தாளா?
அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?
(வெட்டுக்கிளி மகிழ்ச்சியுடன் குதித்தல்.
கூரன் இருக்கும் மரத்தடிப் பக்கம் செல்லுதல்)
(சிறுத்தை முகர்தல்… பூனையின் துர்நாற்றம்
மட்டும் அடித்தல். அந்த இடத்தை விட்டு அகலுதல்)
காட்சி 2:
கதைமாந்தர்கள்: வெட்டுக்கிளி,
சருகுமான் என்னும் கூரன்.
சருகுமான் : முட்டாள் வெட்டுக்கிளியே! பித்தக்கண்ணு முன் அப்படிக்
குதியாட்டம் போடாவிட்டால் என்ன?
நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன்.
அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திங்காமல் விட்டது அதிசயம் தான்.
வெட்டுக்கிளி : மன்னிச்சுக்கோ! மன்னிச்சுக்கோ!
கூரன் : இனி இப்படிச் செய்தால் திரும்ப வந்து உன்னை என் தங்கக்
கால்களால் மிதித்து நசுக்கி விடுவேன்.
(தன் கூர்மையான பாதங்களை கூரன் மண்மீது
அழுத்துதல்)
(வெட்டுக்கிளி கிளையில் இருந்து கீழே விழப்
போதல்)
வெட்டுக்கிளி : கூரனின் கூர்ப்பாதங்கள் பட்டுவிடுமோ?
ஐயோ! ஐயோ!
சரி. சரி… குதித்துக் கொண்டே இருப்போம்.
பாடநூல் வினாக்கள்
Question 1.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச்
சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை:
காடர்கள், பழங்குடியின
மக்கள், காடுகள், செடிகொடிகள்,
விலங்குகள் தொடர்பான கதைகளைத் தங்கள்
பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் சொல்லி வந்தனர். அத்தகைய கதைகளுள் ஒன்று தான்
வெட்டுக்கிளியும் சருகுமானும்’ ஆகும். வெட்டுக்கிளியும்
சருகுமானும் :
குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி.
ஒரு மாலை நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது.
‘என்ன கூரன், பார்த்து
வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்?
ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்?’ அதற்கு சருகுமான், ‘காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன்.
இப்பொழுது உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக்கொண்டு வருகிறது.’
விழுந்து கிடந்த மரத்தைப் பார்த்ததும் அதன் அடியில் கூரன் ஒளிந்து
கொண்டது. தலையை மட்டும் தூக்கி வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம்
என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது.
வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும் :
கூரனைத் தேடிக் கொண்டு பித்தக்கண்ணும் ஓடைப் பக்கம் வந்தது. வெட்டுக்கிளி
அதன் கண்ணில் பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. ‘கூரன் இங்கு வந்தாளா?’ என்றது. வெட்டுக்கிளிக்கு உற்சாகம்
தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதான் முதல்முறை. பித்தக்கண்ணுவைப்
பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே
குதித்துக் குதித்துச் சென்றது.
அதைக்கண்ட பித்தக்கண்ணு,
கூரன் பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம்
சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின் துர்நாற்றமே எட்டியது. அதனால் உறுமிக்
கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேறு பக்கம் சென்றது.
உயிர்பிழைத்த கூரன் :
கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக் கொடுத்ததற்காக
வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம். அதற்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று
எண்ணியது. ‘இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்’
என்று கூறிக் காட்டுக்குள் ஓடியது.
முடிவுரை :
அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ
என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தான் இன்றும்கூட வெட்டுக்
கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன.
0 Response to "8 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - விரிவானம் - வெட்டுக்கிளியும் சருகுமானும் - வினா விடைகள் "
Post a Comment