"ஆளும் தமிழினம் போற்றுதும் "
வந்தாரை மட்டுமல்ல, வைதாரையும் வாழ வைக்கும் ஒரே இனம் நம் தமிழினம்.
உலகில் தோன்றிய முதல் மனித இனம் தமிழ் இனம். உலகில் முதன்முதலில் மனிதன் பேசிய மொழி தமிழ்மொழி. உலகில் மனித இனம் முதன்முதலில் தோன்றிய இடம் குமரிக்கண்டம்.
குமரி ஒருத்தி கருவுற்று குழந்தை ஈன்றெடுப்பதைப் போல, குமரிக்கண்டம் கருணையுற்று ஈன்றெடுத்தக் குழந்தைகள்தான் தமிழர்கள்.
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் தமிழ் வளர்த்ததாக "இறையனார் களவியல் உரை " முதன்முதலில் எடுத்தியம்பியது. தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் அந்தக் கால மன்னர்கள் தமிழ்ச் சங்கங்களை உருவாக்கினார்கள். இச்சங்கங்கள் மூலம் அரசர்கள் புலவர்களை ஆதரித்து பல்வேறு இலக்கியங்கள் உருவாக வழி வகுத்தார்கள். சங்கத் தமிழ் காலத்தால் அழியாத தங்கத் தமிழ் ஆனது. உலக வரலாற்றில் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட முதல் மொழி என்ற பெருமையைப் பெற்றது தமிழ் மொழி.
பழந்தமிழ்நாடு இந்நாள் உள்ள கடற்குமரித் துறைக்குத் தெற்கே பன்னூறு கல் தொலைவு பரவியிருந்தது. அது பண்டைநாளில் குமரிநாடு முதலாக நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிந்திருந்தது. அப்பகுதியில் இருந்த தென்மதுரையே பாண்டியர்களின் முதல் தலைநகரம் ஆகும். அந்நகரில்தான் பாண்டியர்கள் தலைச்சங்கத்தை நிறுவித் தமிழை வளர்த்தனர். முதல் சங்கத்தை நிறுவியவன் காய்சின வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்.
தலைச்சங்கம் இருந்த தென்மதுரை கடல்கோளால் அழிந்தபின் , கடுங்கோன் பாண்டியன் பஃறுளியாற்றுக்கும் , குமரியாற்றுக்கும் இடையே இருந்த கபாடபுரம் என்னும் நகரைத் தலைநகரம் ஆக்கினான். அந்நகரில் மீண்டும் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். இதுவே இடைச்சங்கம் எனப்படும். சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் கபாடபுரமும் கடல்கோளினால் அழிந்தது. குமரிக்கண்டம் முற்றிலும் கடலுக்குள் மூழ்கியது. தமிழர்களின் நெஞ்சமோ கவலைக்குள் மூழ்கியது. தமிழர்கள் தங்களின் நாற்றாங்காலை இழந்ததும் விளைநிலத்தின் விவரம் அறிந்தனர். ஆம். உலகம் முழுவதும் தமிழர்கள் தங்கள் குடியேற்றத்தை அமைத்துக் கொண்டனர்.
இன்றைய மதுரை மாநகரம்தான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் புகலிடம் கொடுத்தது. புது முகவரி கொடுத்தது. முடத்திருமாறன் என்னும் பாண்டிய மன்னன் இன்றைய மதுரையில் மூன்றாம் சங்கமாகிய கடைச்சங்கத்தை நிறுவினான். இப்படியாக தமிழும் தமிழர்களும் இயற்கையோடு போராடி போராடியே தங்கள் வாழ்வை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றனர். போரில் வீழ்ந்தவர்கள் உண்டு. போராட்டக் குணம் உள்ளவர்கள் வீழ்ந்ததாக வரலாறு இல்லை என்பதற்கு தமிழும் தமிழர்களுமே சான்று.
முதல் சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும் , இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் செயல்பட்டதாகவும் "இறையனார் களவியல் உரை" கூறுகிறது. இந்நூலின் கருத்துப்படி பார்த்தால் முச்சங்கங்களின் மொத்த செயல்பாட்டுக் காலம் 9950 ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது. ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளாக சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிதான் நம் தமிழ்மொழி .
"
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி
மருதன் தலைவனாக
உலகமொடு
நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை " ( புறநானூறு - 72)
மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு சங்கம் நிலவியதற்கு இது நல்ல சான்றாகும். இப்படி எத்தனையோ இலக்கியச் சான்றுகள் " சங்கம் " இருந்ததற்குச் சான்று பகிர்கின்றன. ஆனாலும் இன்றைய அறிவியல் உலகம் , அறிவு இல்லா உலகம் முச்சங்கம் இருந்ததை ஏற்க மறுக்கின்றன. அறிவியல் ஆதாரம் கேட்கின்றன.
உலகில் பெரும்பான்மை மக்கள் ஏதேதோ பெயரைச் சொல்லி இவர்தான் கடவுள் என்கிறார்கள். அந்தக் கடவுள் உலகைப் படைத்தார். இந்தக் கடவுள் உலகைப் படைத்தார் என்று கதை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளதா? கடவுள் இருப்பதை அறிவியல் முறையில் மெய்ப்பிக்க முடியுமா? இந்தக் கேள்விகளை எல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால், எல்லாக் கேள்விகளையும் தமிழர்களிடம் மட்டும் கேட்பார்கள். குமரிக்கண்டம் இருந்ததா? முச்சங்கம் இருந்ததா? என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள் . செத்தவன் கடவுளிடம் போகிறான் என்பதை நம்பும் இந்த உலகம், எம் முன்னோர்கள் செத்து கடலுக்குள் போய்விட்டார்கள் என்பதை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறது.
இந்த உலகம் அறிவாளிகள் சொல்வதை ஒருபோதும் நம்பாது. அதிகாரத்தில் இருப்பவன் சொல்வதைத்தான் நம்பும். நம் வரலாற்றை இந்த உலகம் நம்ப வேண்டுமென்றால் நாம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். நாம் இழந்த பெருமையை அடைய வேண்டுமென்றால் இந்த உலகத்தை ஆளும் அதிகாரம் நம் கையில் இருக்க வேண்டும். உலகை ஆள்வது நமக்கொன்றும் புதிதல்ல. உலகையே ஆண்ட இனம் நம் தமிழினம். மீண்டும் அரியணை ஏறுவோம். அமைதியாக இருப்பதால் நம்மை அடிமைகள் என்று எண்ணுகிறது இவ்வுலகம். நாம் எதற்காக காத்திருக்கிறோம் என்பதை காட்டுகின்ற காலம் மிக விரைவில் வரும்.
"
அடக்கம் உடையார் அறிவிலர்என்று எண்ணிக்
கடக்கக்
கருதவும் வேண்டா - மடைத்தலையில்
ஓடுமீன்
ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. " ( மூதுரை - 16)
தன்னடக்கத்துடன் இருப்பவரைப் பார்த்து " இவர் அறிவில்லாதவர்" என்று எண்ணி அவரை வெல்ல நினைக்க வேண்டாம். நீர் பாயும் மடை வாயிலில் சிறிய மீன்கள் ஓடும்போது வாட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் கொக்கு , பெரிய மீன் வந்ததும் கௌவிக்கொள்வது போன்றது வலிமை உடையவர்களின் அடக்கம் என உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையை இந்த உலகிற்கு நாம் உணர்த்தும் நேரம் வந்துவிட்டது.
"
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள
தமிழர்கள் ஒன்றாதல் கண்டே "
என்ற பாவந்தரின் கூற்றை நம்மை அழிக்க நினைக்கும் கூற்றுவர்களுக்கு உணர்த்தும் காலம் வந்துவிட்டது.
எழுத்துப்
பிழையில்லாமல்
எழுதி
வைத்துக் கொள்ளுங்கள்!
எதிர்வரும்
உலகை தமிழன்தான்
ஆளப்
போகிறான்.
இது
நடந்தே தீரும்!
இனிவரும் வரலாறு பேசட்டும்
ஆதித்
தமிழன் உலகை ஆள நினைத்தான்!
அடுத்துவந்த
தமிழன்
உலகையே ஆண்டு முடித்தான் என்று!
எழுச்சிதான்
தமிழர்களின்
அடையாளம் - இனி
எங்கும்
பரவட்டும்
தமிழர்களின்
அதிகாரம்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
0 Response to "தமிழ் அறிவோம்! 188. ஆளும் தமிழினம் போற்றுதும் ஆ.தி.பகலன்"
Post a Comment