"காக்க காக்க பனைமரம் காக்க "
"எல்லோர் உள்ளத்திலும் பூக்கின்ற பூ நட்பு "
இந்த உலகில் எல்லா உறவுகளை விடவும் உயர்வானது நட்பு
மட்டுமே. அந்த நட்பை மூன்று வகையாக
பிரித்துள்ளது நாலடியார்.
" கடையாயார் நட்பிற் கமுகனையார் ஏனை
இடையாயார்
தெங்கின் அனையர் - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே
தொன்மை உடையார்
தொடர்பு ." ( நாலடியார் - 216)
நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே பயன்தரும்
பாக்கு ( கமுகு) போன்று நாள்தோறும் உதவி
செய்தால் மட்டுமே பயன்படுபவரின் நட்பு "கடை" நட்பு ஆகும்.
எப்போதாவது
ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலும் எப்போதும் பலன் தரும் தென்னை மரம் (தெங்கு) போன்றவர் "இடை" நட்பு ஆகும்.
விதையிட்ட நாளில் ஊற்றிய நீரோடு பின்னர் தண்ணீர்
பாய்ச்சாமலேயே வளர்ந்து வாழ்நாள்
முழுவதும் பலன்தரும் பனைமரம் (
பெண்ணை) போன்றவர்கள் " தலை "
நட்பு ஆகும்.
இப்படிப்பட்ட நட்பே தொன்மை தொடர்புடைய நட்பாகும்.
பழமையான நட்புக்கு மட்டுமல்ல, பயன் தூக்கார் உதவிக்கும் " பனைமரமே "
சிறந்த சான்றாகும்.
நாங்கள்தான் தமிழை வளர்த்தோம் என்று உரிமையோடு சொல்ல
இங்கு யாருக்கும் தகுதி இல்லை. அந்தத் தகுதி பனைமரங்களுக்கு மட்டுமே உள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகளாக தன் ஓலைகளின் (
ஓலைச்சுவடிகள் ) மூலம் தமிழைப் பாதுகாத்த பெருமை பனைமரங்களுக்கு மட்டுமே உண்டு.
பனை ஓலைகள் இல்லையென்றால் ஓலைச்சுவடிகள் இல்லை. ஓலைச்சுவடிகள் இல்லையென்றால் தமிழே
இல்லை. தமிழைக் காத்த பெருமை என்றென்றும் பனைமரங்களுக்கு மட்டுமே உண்டு. காலம்
காலமாக தமிழ் மக்களைக் காத்து நிற்பது பனை மரங்கள்தான். அதனால்தான் தமிழ்நாட்டின்
மாநில மரமாக பனைமரம் உள்ளது.
" பனைமரமே! பனைமரமே!
ஏன் வளர்ந்தாய் பனைமரமே?
நான் வளர்ந்த காரணத்தை
நண்பர்களே
கேளுங்கள்!
படுக்கப்பாய் நானாவேன்,
பாய்முடையத் தோப்பாவேன்,
வெட்ட நல்ல விறகாவேன்,
வீடுகட்ட உதவிடுவேன்,
பசித்து வருவோர்க்குப்
பனம்பழமும் நான்தருவேன்,
பாலர் பெரியோர்க்குப்
பனம்பதநீர் நான்தருவேன்,
சித்திரைக் கோடையிலே
சிறந்த நல்ல நுங்காவேன்,
காளையர்க்கும் கன்னியர்க்கும்
களைதீர்க்கும் விசிறியாவேன்!
பனைவெல்லம் நான்தருவேன்
பனங்காய் வண்டியும் நானாவேன் "
பனைமரத்தின் பெருமையை அழகாகப் பேசுகிறது இந்த
நாட்டுப்புற பாடல் .
பனையை நாம் மரம் என்று சொன்னாலும் அது புல் வகையைச்
சார்ந்தது. "கரும்புல்" என்று
பனையைப் போற்றுகின்றன தமிழ்
இலக்கியங்கள் பணம் இல்லாதவனையும்
பணக்காரன் ஆக்கும் மரம் " பனைமரம் " . முதலீடு செய்யாமலே ஒருவன் முதலாளி
ஆக முடியுமென்றால் பனைமரங்களை வளர்த்தால் அது முடியும். " பனை இருந்தாலும் ஆயிரம் பொன் .
வீழ்ந்தாலும் ஆயிரம் பொன் " என்றால் அது மிகையல்ல.
பனைமரத்தில் 801 பயன்பாட்டுப் பொருட்கள் இருப்பதாக
" தாலவிலாசம் " என்ற நூல் கூறுகிறது. பனைமரத்தின் பெருமையைக் கூற
எழுதப்பட்ட நூலே " தாலவிலாசம் " ஆகும்.
ஆண், பெண் என்று வகைப்படுத்தப் பட்டிருக்கும் பனையில்
வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தை மட்டை, உச்சிப் பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளை-
பீலி, பனங்காய் , பச்சை மட்டை, சாரை ஓலை, குருத்தோலை என 12 உறுப்புகள் உள்ளன. இந்த
உறுப்புகள் ஒவ்வொன்றும் பல்வேறு பயன்களைத் தருகின்றன. பனைமரத்தில் 34 வகைகள்
இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. தற்போது
தாளிப்பனை, கூந்தல் பனை, நாட்டுப்பனை ஆகிய மூன்று வகைகள் மட்டுமே உள்ளன. முன்பு தமிழகத்தில் 50 கோடி பனைமரங்கள்
இருந்தன. தற்போது 4 கோடி பனைமரங்கள்தான் தமிழ்நாட்டில் உள்ளன.
பனைமரம் ஒரு வறண்ட நிலப்பயிர். தான் வளரும் உயரத்தின்
அளவைவிட மூன்று மடங்கு வேரை மண்ணில் செங்குத்தாக பாய்ச்சும் தன்மை கொண்டது
பனைமரம். இதன் வேர் நீரைத்தேடி ஆழமாகச் செல்லும். . ஆயிரம் அடிக்கும் கீழே சென்று தண்ணீரை உறிஞ்சி
வைத்துக் கொள்ளும். ஆழத்தில் நீர்மட்டம் குறையாமல் நீரைச் சேமித்து வைக்கும் தன்மையுடையது. இதனால்
நிலத்தடி நீர்மட்டம் உயருமே தவிர ஒருபோதும் குறையாது. மண்ணரிப்பைத் தடை செய்யும். அடி நிலத்தைப்
பாதுகாக்கும் அரணாக அமையும். ஏரிகளின் கரைப்பகுதி உடையாதபடி இருக்க , கரைப்பகுதி
முழுவதும் பனைமரங்களை நடுவது பண்டைய கால வழக்கம்.
புயல்காலங்களில்
தென்னை எல்லாம் மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஆனால் பனைமரங்கள் காற்றின் வேகத்தைச்
சமாளித்துக் கம்பீரமாய் நின்றன.
பனைமரங்கள் சிறந்த காற்றுத் தடுப்பான்.
ஆம், புயலைத் தாங்கும் வல்லமை பெற்றது.
" இயற்கை இடிதாங்கி ",
தமிழினத்தின் குடிதாங்கி " பனைமரங்கள்தான். அந்தக் காலத்தில் ஊரைச்
சுற்றி பனைமரங்கள் நட்டு வைப்பார்கள். ஏன் தெரியுமா? எவ்வளவு இடி விழுந்தாலும் அதை
தன்மீது வாங்கிக் கொள்ளும். மக்களை
இன்னலில் இருந்து தாங்கிக் கொள்ளும். காற்றைச் சுத்திகரிக்கும். மக்கள் மாசின்றி
வாழ வழி வகுக்கும்.
"ஒரு கிணற்றைச் சுற்றி பத்து பனைமரம் இருந்தால் கடைசிவரை அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாது.
வற்ற விடாது. அந்த பனைமரம் கழுத்து
முறிந்து சாகிறதென்றால் உன் நாடு பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை நீ
புரிந்துகொள் " என்கிறார் இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வார்.
"இரும்பனம் புடையல் ஈகை வாங்கல் " என்ற
பதிற்றுப்பத்து பாடலால் சேரன் செங்குட்டுவன் பனம்பூ மாலை அணிந்தவன் என்பதை
அறியலாம். சேரர்கள் சூடிய மாலை பனம்பூவாகும். சேரர்களின் காவல் மரம் பனைமரம்.
சேரர்களின் காசுகளில்கூட பனைமரம்தான் பொறிக்கப்பட்டிருக்கும்.
தாலி என்ற சொல் தாலிகம் என்ற சொல்லின் அடியாகப்
பிறந்தது. "தாலிகம் " என்பது பனையைக் குறிக்கும். பனை ஓலையில்
இன்னாருக்கும் ( மணமகன்) , இன்னாருக்கும் ( மணமகள்) இந்த நாளில் திருமணம் என்று
எழுதி அதை சுருட்டி மணமகள் கழுத்தில் மணமகன் அணிவித்ததால் அதற்கு "தாலி
" என்று பெயர் வந்தது. பெண்ணுக்கு தாலியாகவும், மண்ணுக்கு வேலியாகவும்
இருந்தது பனைமரங்கள்தான்.
தற்சார்பை உறுதிப்படுத்தும் மரம். பல்லுயிர்ச் சூழலைப்
பாதுகாக்கும் மரம். தாய்த்தமிழைக் காத்த மரம். தண்ணீரைச் சேமிக்கும் மரம்.
வறட்சி வந்தாலும் வாழ வைக்கும். பஞ்சம் வந்தாலும்
பசிபோக்கும். பனை செழித்தால் நம் பண்பாடு
செழிக்கும்.
விதைபோட்டு நட்டது இல்லை. வேலி கட்டி வளர்த்தது இல்லை.
தண்ணீர் ஊற்றி பார்த்தது இல்லை. களை எடுத்த செய்தி இல்லை. ஆனாலும் வான் உயர
வளர்ந்து வையத்தை வாழவைக்கும். உச்சி முதல் அடிவரை நமக்குப் பயன்படும் .தன்னை
வளர்ப்பவர்களுக்குப் பல தலைமுறைகள் கடந்தும்
பலன்தரும். அதுதான் பனைமரம்.
நம் மொழிகாத்த நம் இனம்காத்த பனையை நம் இன்னுயிர் தந்து
காக்க வேண்டாமா?
பனைவிதைகளைச் சேகரித்து ஆறு,குளம், குட்டை, ஏரி
போன்றவற்றின் கரையோரங்களில் ஊன்றி நடுவோம். நம் வாழ்நாளில் ஆயிரம் பனை
விதைகளையாவது நடுவோம். அதுவே நாம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததற்கான பெருமையைத்
தரும்.
" தமிழா!
அடுத்த தலைமுறைக்கு பணம்காசு சேர்த்து வைக்க வேண்டாம்!
பனைமரங்களைச் சேர்த்து வைப்போம்!
தாய்த்தமிழையே பாதுகாத்த பனைமரம்
நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
(அலைப்பேசி
- 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 189 . காக்க காக்க பனைமரம் காக்க ஆ.தி.பகலன்"
Post a Comment