"பேரன்பு கொள் "
கடலுக்கும் பெருங்கடலுக்கும் உள்ள வேறுபாடுதான் ,
அன்புக்கும் பேரன்புக்கும் உள்ள வேறுபாடு ஆகும். அளவிட முடியாத, மிகவும் ஆழமான
அன்பையே " பேரன்பு " என்பர்.
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. ( குறள் - 72)
"அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே
உரிமையாகக் கொண்டு வாழ்வார். அன்பு உடையவர் தம் உடமையை மட்டுமல்ல, தன் உயிரையும்
பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்"
என்று அன்புக்கு இலக்கணம் வகுத்தார் வள்ளுவர்.
" அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே " ( திருமந்திரம் - 270)
அன்பு வேறு, சிவம் வேறு. இரண்டும் ஒன்றல்ல. வேறு வேறு
என்று சொல்பவர்கள் அறிவில்லாத மூடர்கள். அன்பே சிவம் என்பதை அறியாது
இருக்கிறார்கள். அன்புதான் சிவம் என்பதை எல்லோரும் அறிந்து விட்டால், பிறகு அவர்களே அன்புருவான சிவமாய்
வாழ்ந்திருப்பார்கள்.
"அன்பே கடவுள் " என்பதை உலகிற்கு உறுதிபடக் கூறுகிறார்
திருமூலர்.
எல்லா உயிர்களுக்கும் நன்மை பயக்கும் உணர்வு நிலையே
" சிவம் " என்பர். அதாவது " கடவுள் நிலை
" . எல்லா உயிர்கள்மீதும் அன்பு
காட்டும் கருணை உள்ளமே " கடவுள்
நிலையை " அடையும்.
பெருஞ்சித்திரனார் என்னும் புலவர், ஒருமுறை குமண வள்ளலைச் சந்திக்கச் சென்றார். தன் குடும்பத்தின் வறுமை நிலையை குமண
வள்ளலிடம் எடுத்துக் கூறினார். அமைதியாக் கேட்டுக் கொண்டிருந்த குமணன், பெருஞ்சித்திரனாரிடன் ஒரு யானையைக் கொடுத்தான்.
பெருஞ்சித்திரனாருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் வயிற்றுக்கே உணவில்லை. இந்த
யானைக்கு எப்படி உணவளிப்பது என்ற கவலையோடு யானையைப் பிடித்துக் கொண்டு புறப்பட
தயாரானான்.
"நில்லுங்கள் புலவரே, பரிசைக் கொண்டு
போவதற்குத்தான் யானையைக் கொடுத்தேனே தவிர,
தங்களுக்குப் பரிசு இன்னும் தரவில்லை. கொஞ்சம் பொறுங்கள். இதோ பரிசு
வருகிறது" என்றார் குமண வள்ளல்.
வியப்போடு திரும்பிப் பார்த்தார் பெருஞ்சித்திரனார் .மூட்டை
மூட்டையாகப் பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து யானை மீது ஏற்றினார்கள். குமணனின்
கொடைத்தன்மையை எண்ணி வியந்தார் பெருஞ்சித்திரனார்.
அவ்வளவு செல்வங்களையும் பெருஞ்சித்திரனார் என்ன செய்தார்
தெரியுமா?
" நின்நயந்து உறைநர்க்கும், நீநயந்து உறைநர்க்கும்,
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்,
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்,
இன்னோர்க்கு என்னாது, என்னோடு சூழாது ,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே " ( புறநானூறு - 163 )
" என் மனைவியே,
பழங்கள் தொங்கும் மரங்கள் நிறைந்த முதிரமலை தலைவனும், செவ்விய
வேலையுடையவனும் ஆகிய குமணன் கொடுத்த இந்தச் செல்வத்தை , உன்னை விரும்பி
வாழ்பவர்க்கும், நீ விரும்பி வாழ்பவர்க்கும், பல வகைகளிலுல் சிறந்த கற்புடைய உன் சுற்றத்தார்க்கும், மூத்தோர்களுக்கும்,
நமக்கும், நம் சுற்றத்தாரின் கொடிய பசியைப் நீக்குவதற்காக கடன் கொடுத்தோர்க்கும் ,
இன்னார்க்கு என்று கணக்குப் பார்க்காமல் என்னையும் கலந்து ஆலோசிக்காமல் ,
இப்பொருளை வைத்து நாம் நன்றாக வாழலாம் என்று எண்ணாமல் எல்லோர்க்கும் வழங்குவாயாக " என்று தன்
மனைவியிடம் வேண்டுகிறார் பெருஞ்சித்திரனார்.
வறுமையின் கொடுமையைக் கண்டவர்கள் அளவு கடந்த செல்வத்தைக்
கண்டதும் ஆடம்பரமாய் வாழ எண்ணுவது வழக்கம். அதையெல்லாம் செய்யாமல்
" யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வைகம் " என்ற
உயர்ந்த நோக்கத்தோடு தனக்கு கிடைத்த செல்வங்களை எல்லாம், தான் வறுமையுற்ற காலத்தில் உதவியவர்களுக்கு
வாரி வழங்கும் இந்த வள்ளல் தன்மையை என்னவென்று சொல்வது? ஒட்டுமொத்த தமிழ்ச்
சமூகத்தின் உள்ளத்தையே உணர்த்தி நிற்கிறது பெருஞ்சித்திரனாரின் உள்ளம்.
தன்னைப் போல எல்லோரையும் நேசிப்பது அன்பு.
தனக்குக் கிடைத்தது எல்லோர்க்கும் கிடைக்க வேண்டும்
என்று நினைப்பதே " பேரன்பு "
" பேரன்பைப் புரிந்து கொள்ள
கல்வி நிலையம் செல்ல வேண்டாம்!
காக்கைகளிடம் செல்லுங்கள்!
பேரன்பை
காசு வாங்காமல் கற்றுத்தரும் கல்விமான்கள் இங்கு
காக்கைகள் மட்டுமே!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
(அலைப்பேசி
- 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 191. பேரன்பு கொள் ஆ.தி.பகலன்"
Post a Comment