தமிழ் அறிவோம்! 193. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 193. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  193. உடம்பார் அழியில் உயிரார் அழிவர்  ஆ.தி.பகலன்

 


"உடம்பார் அழியில் உயிரார் அழிவர் "
 

" சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் " என்ற பழமொழி உணர்த்தும் கருத்து என்ன? "உடல்நலம் நன்றாக இருந்தால்தான் நீண்டநாள் வாழ முடியும். சாதனைகள் பல படைக்க முடியும்" என்பதையே இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது. இன்றைய காலகட்டத்தில் உடல்நலனில் அக்கறை கொள்வோர் மிகச்சிலரே. இளமையில் உடலைக் காக்க தவறுவதும் , முதுமையில் உயிரைக் காக்க போராடுவதும் நம் மக்களின் வழக்கமாகிவிட்டது. " உடல்நலமாக இருந்தால்தான் உள்ளம் நலமாக இருக்கும் , உள்ளம் நலமாக இருந்தால்தான் நற்சிந்தனைகள் தோன்றும். நற்சிந்தனைகள் தோன்றினால்தான் நல்ல செயல்களைச் செய்ய முடியும். வாழ்வை நன்முறையில் வாழ முடியும். ஆக , மனித வாழ்வின் அடிப்படையே உடல்நலனில்தான் இருக்கிறது. 

" உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே " ( திருமந்திரம் - 724 ) 

"உயிர்களின் உடல் அழிந்துவிட்டால் அதனுள் இருக்கும் உயிரும் நீங்கிவிடும். உறுதியான உடல் வலிமை இல்லையென்றால்,  உண்மையான ஞானத்தை அடைய உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது.  உடலை உறுதியாக வைத்திருக்கும் வழியை அறிந்து கொண்டு அதன்மூலம் உடலை வளர்த்து அதனுள் இருக்கும் உயிரையும் வளர்தேன் " என்கிறார் திருமூலர். 

உடலை வளர்க்க வேண்டுமென்றால் மூச்சு முட்ட உண்ண வேண்டும் என்பதில்லை. மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிக அளவு உணவு உண்டால் அதிகநாள் உயிர் வாழலாம் என்று எண்ணுகிறார்கள். சத்தில்லாத உணவை அளவுக்கு அதிகமாக உண்டு, அதிகமான நோய்களை தங்களுக்குத் தாங்களே வரவைத்துக் கொள்கிறார்கள். எதை உண்ண வேண்டும், எவ்வளவு உண்ண வேண்டும் என்ற தெளிவு மக்களிடம் இல்லை. நோய் வருவதற்கான காரணங்களையும் அதை தீர்ப்பதற்கான வழிகளையும் நாம் அறிய வேண்டும். அதை அறிந்து கொண்டால் நோயில்லாமல் வாழலாம். 

" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று. ( குறள் - 941) 

"வாதம் ( காற்று) , பித்தம் ( நெருப்பு) , கபம் ( நீர்)  ஆகிய மூன்றும் அளவு மிகுந்தாலும், அளவு குறைந்தாலும் நோயை உண்டாக்கும்   என்று மருத்துவ நூலோர் கூறுவர் " என்கிறார் வள்ளுவர்.  

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து  நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர். 

வாதம் ( காற்று)  - 1 மாத்திரை அளவு.

பித்தம் ( நெருப்பு) - 1/2 மாத்திரை அளவு.

கபம் ( நீர்) - 1/4 மாத்திரை அளவு. 

இது நாடியின் அளவுகளாகும். இதன்படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என்று பொருளாகும். இந்த நாடி அளவு கூடவோ, குறையவோ அல்லாமல் சமன்படுத்த  சில மருந்துகள் உண்டு. அதை சித்தர் பாடல் மூலம் காண்போம். 

" காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு

மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில்

கோலை ஊன்றி  குறுகி நடப்பவனும்

கோலை வீசி குலாவி நடப்பானே " 

சித்தர்கள் இதுபோன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கூறியுள்ளனர்.

சுக்கு வாதத்தையும் , இஞ்சி பித்தத்தையும்,  கடுக்காய் கபத்தையும் சமன்செய்யும் மருந்துகளாகும்.   

சித்த மருத்துவத்தின் அடிப்படையே  ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிழ்தமும் நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்கச் சொல்கிறார்கள். நஞ்சு நீக்கும் முறையை சுத்தி முறை என்பர்.

சுக்குக்கு புற நஞ்சு.

கடுக்காய்க்கு அக நஞ்சு என்பர்.

அதாவது, சுக்கின் மேலே உள்ள தோல் பகுதியும் , கடுக்காயின் உள்ளே உள்ள கொட்டையும்  நஞ்சு ஆகும். அவற்றை நீக்கிய பின்னரே அதை பயன்படுத்த வேண்டும். 

காலையில் இஞ்சி : 

காலையில் வெறும் வயிற்றோடு இருக்கும் போது  இஞ்சிச்சாறு மூன்று தேக்கரண்டி எடுத்து அதில் அதே அளவு தேன் கலந்து சாப்பிடவும்.

இது பித்தத்தைச் சமன் செய்யும். 

கடும்பகல் சுக்கு : 

மதிய உணவுக்கு முன் சுக்குத்தூள் அரை தேக்கரண்டி அளவு எடுத்து அதை வெந்நீரில் கலந்து சாப்பிடவும். 

இது வாயுவைச் சமன் செய்யும். 

மாலையில் கடுக்காய் : 

இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு தேக்கரண்டி அளவு கடுக்காய் தூள் எடுத்து அதை வெந்நீரில் கலந்து சாப்பிடவும். இது கபத்தைச் சமன் செய்யும். 

" கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் "

" ஒரு கடுக்காய் பத்து தாய்க்குச் சமம் "

போன்ற பழமொழிகள் கடுக்காயின் பெருமையைப் பேசுகின்றன. 

இதன்படி ஒரு மண்டலம் ( 48 நாள்கள்)  உண்டால் நம் உடலானது இளமை மிடுக்குடனும்  புத்துணர்ச்சியுடனும் இருக்கும் .

கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவன் கூட கோலை தூக்கி எறிந்துவிட்டு குலாவி ( மகிழ்ச்சியுடன்)  நடந்து செல்வான். 

" பணம் வெச்சுக்கோ

பல மாடிவீடு வெச்சுக்கோ

பொன் வெச்சுக்கோ

பொருள் வெச்சுக்கோ

ஒன்றை மட்டும் ஞாபகம் வெச்சிக்கோ

உசுரு மட்டும் போனா

எல்லாம் போகும் வீணா!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

0 Response to "தமிழ் அறிவோம்! 193. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel