தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியம் பலவற்றைப் பேசியுள்ளது. நம் முன்னோர்கள் அறிவியல் கருத்துகளை எவ்வாறு பதிவு செய்துள்ளனர் என்பது குறித்து அறிய வேண்டியது தமிழர்களின் கடமை.இந்தியமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியம் மட்டுமே செவ்விலக்கியமாகவும், நிகழ்கால இலக்கியமாகவும் ஒரே நேரத்தில் இலங்கும் சிறப்பு வாய்ந்ததது .
அது சமஸ்கிருதச் செவ்வியல் இலக்கியம் அளவு தொன்மை வாய்ந்தது
என கமில் சுவெலபில் உரைத்துள்ளமையை நாம் காணுகின்றோம். சரளா ராசகோபாலன் பின்வருமாறு கூறியுள்ளார். சங்க இலக்கியங்களில் தனிப்பாடல்களாக 2381 பாடல்கள் கிடைத்துள்ளன. இவற்றுள் 1862 பாடல்கள் அகத்திணைப் பாடல்களாகும் . ஒட்டுமொத்தமாகச் சங்கப்பாடல்களைப் பாடிய 472 புலவர்களில் அகத்திணையில் மட்டும் பாடிய புலவர்கள் 378 பேர்கள்,இந்த 378 பேர்களில் 23 பேர் பெண்பாற் புலவர்கள் ஆவர். ஆக இத்தகு தொன்மை வாய்ந்த இலக்கியம் நம் தமிழர்களின் எண்ணங்கள் ,பழக்கவழக்கங்கள் ,நம்பிக்கைகள், வரலாறு, வீரம், விருந்தோம்பல் எனப் பலவற்றை எடுத்தியம்பி உள்ளது.
அறிவியல்
அறிவு அற்றம்
காக்கும் கருவி என திருவள்ளுவர் கூறியுள்ளார். அறிவின் நுட்பமான மலர்ச்சியே அறிவியலாகும். தமிழ் இலக்கியத்தில் விண்ணியலறிவு, பொறியியல் அறிவு கனிமவியல் அறிவு, மண்ணியல் அறிவு, அணுவியல் அறிவு, நீரியல் அறிவு, மருத்துவ அறிவு, அறுவை மருத்துவம், சித்த மருத்துவம் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ள அறிவியல் சார்ந்த கருத்துகளை முன் வைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
உயிரியல் அறிவு
பழந்தமிழர்கள் உயிரியல் சார்ந்த அறிவியல் அறிவைப் பெற்றிருந்தனர். குறுந்தொகையில் உயிரியல் பற்றிய சிந்தனையை
தாய்இல் முட்டைபோல, உட்கிடந்து
சாயின் அல்லது, பிறதுவென் உடைத்தே
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம், காதலர் கையற விடினே (குறு-பா-152)
மேற்சொன்ன வழி அறிகின்றோம்.
தன் தலைவனின் அரவணைப்பை இழந்தால் காதலும் அழிந்து போகும் என ஒரு தலைவி ஏங்குவதைச் சொல்கிறது இப்பாடல். இதில் ஓர்
உயிரியல் கருத்து இடம் பெறுகிறது. அதாவது தாயால்
காக்கப்படாத யாமை பார்ப்பு போலத் தானும் இறந்துபடப் போவதாகத் தலைவி உரைக்கிறாள். இதன்மூலம் ஆமையின்
இனப்பெருக்கம் குறித்த செய்தி கிடைக்கிறது.
ஆமை நீர்நிலையை அடுத்த மணற்பாங்கான பகுதியில் முட்டையிடும். ஆயின் அடை
காக்காது. வெயில் சூடுபட்டு அதிலிருந்தே குஞ்சு வெளிப்படும். பின் வந்து
தன்
குஞ்சுகளைப் பேணி வளர்க்கும்.
ஐங்குறுநூற்றுப் பாடலிலும்,
தீம்பெரும் பொய்கை யாமை யிளம் பார்ப்புத்
தாய்முக நோக்கி வளர்ந்தசி னாஅங்கு (பா.44)
மேற்சொன்ன கருத்தை நிறுவுகிறது.
வானியல் அறிவு
நம் பண்டைத்
தமிழர்
கதிரவனை
நாள்மீன் என்றும் கோள்களை (கிரகங்கள்) கோள்மீன் எனவும் குறித்தனர். வானை உற்றுநோக்கி ஆய்ந்து அறிவியல் நுட்பங்களை இலக்கியங்களில் பதிவு செய்தனர். தமிழர் புவி
மையக்
கொள்கையைக் கடந்து ஞாயிறு மையக் கொள்கை அறிந்த செய்தியினை
வாள்நிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளும்
தோற்றத்து (242-243)
என வரும் சிறுபாணாற்றுப்படை பாடலின் வழி அறிய முடிகிறது.
நிலநடுக்கோட்டருகே வாழ்ந்த மனிதன் மட்டுமே சூரியன் வடக்கு நோக்கி
நகர்ந்த உத்ராயணத்தையும் ,தெற்கு நோக்கி நகர்ந்த தட்சினாயத்தையும் துல்லியமாக அறிந்திருந்தான். திராவிட இனம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் வாழ்ந்ததால் சற்றும்
பிசகின்றி இவ்வயனங்களை அறிந்து கணித்தும் இருந்ததை வலனேர்பு ( Right Acention) தென்னேர்பு (
Left Ascension ) ஞாயிற்றின்
வடக்கு நோக்கிய செலவு, தெற்கு நோக்கிய செலவு
எனக் குறிப்பிட்டுள்ளனர்.ஒரு நேர்க்கோலை செங்குத்தாக நிறுத்தி அதன் நிழனினுடைய நீளத்தைக் கொண்டு நேரத்தைத்
துல்லியமாக கணித்துள்ளனர். இதனை நாழிகைக் கோல் , ஞாயிற்றுக் கடிகை என்று நெடுநல் வாடை ( 73-78 ) குறிப்பிட்டுள்ளது.
நிலவும் பன்னிரெண்டு ராசிகளையும் மேற்கிலிருந்து கிழக்காகக் கிடக்கிறது. இங்கு 360 டிகிரி 27 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டு (27X131/3=360) ஒவ்வொரு பாகமும்
அதிலுள்ள மிக ஒளி பொருந்திய விண்மீனால் குறிக்கப்பட்டுள்ளது. (அசுவினி… பரணி)
இப்பிரிவுகளை நெடுநல்வாடை அழகாகப் பேசியுள்ளது.
திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணுர்பு திழிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரணமி சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி… (நெடு-160)
அரசர்கள் தம்
மாளிகையின் மேற்கூரையில் இன்று நாம் கோளரங்குகளின் உட்கூரையின் மீது காட்சிகளைப் காண்பது போல, ராசி மண்டலங்களையும் 27, விண்மீன் கூட்டங்களையும், அதனூடே நிலவு சஞ்சரிப்பதையும் ஓவியங்களாக வரைந்து வைத்தனர். இக்காட்சியை 159-163 பாடலடிகள் தெரிவிக்கின்றன .
சூரியன் கார்த்திகை மார்கழியில் தென்முனையை அணுகுகிறான் . அருகேயுள்ள வெள்ளியும் தெற்கு நோக்கிச் செல்வதாகத் தோன்றும். வடகிழக்குப் பருவமழை முடிந்துவிட்ட காலம் இது.
கார்த்திகைக்குப் பிறகு மழையில்லை
கர்ணனுக்குப் பிறகு யுத்தம் இல்லை
என்ற
கருத்தைப் பட்டினப்பாலை ( 1-6 ) கூறுகிறது.
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தனி உணவின்
புல தேம்பிப் புயல்மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி.
காற்று
காற்று எத்திசையிலிருந்து வருகிறது என்பது ஒரு முக்கியமான வானிலைத் தகவலாகும். நற்றிணை ஒவ்வொரு
திசையிலிருந்து வரும் காற்றுக்கும் பெயரிட்டுக் குறிப்பிட்டுள்ளது.
கொண்டல் – கீழ்க்காற்று பா – 74-8, 89-1
கோடை – மேல் காற்று
பா
–297, 162-10, 299-3,549
வாடை , வாந்தை – வடதிசையிலிருந்து வரும் காற்று பா – 5-8,196, 109-6, 152-6,280
வளி – பொதுப் பெயர் பா 56-2
கால் – மழையுடன் சேர்ந்தே வீசும் காற்று பா – 2-9
ஊதை – பொதுவாக வாடையை
ஊதை
என்பர் பா – 15-3,26
மழை
வானிலையாளர்கள் மழையைக்
குறிக்கப் பயன்டுத்தும் பெரும்பாலான சொற்களை நற்றிணைப் பாடல் அவதானித்துள்ளதை உணர்கிறோம்.
இடி மழை
: தழங்கு குரல் ஏறோடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் (நற்-7-5, 6 )
2. படுமழை
உருமின்
உரற்று குரல் (நற்-129-8)
மாலைநேர மழை: ஆர்கலி நல்
ஏறு
திரிதரும்
கார் செய் மாலை
வரூம் போழ்தே மால (நற்-37-10)
விடியற்காலையில் பெய்யும் மழை: 1. கார் எதிர்ந்தன்றால் காலை (நற்-115-7)
2. நாள்
மழை
தலை
இய
(நற்-17-1)
நடு இரவில் மழை: நள்ளென் யாமத்து மழை (நற்-22-11)
எரி நட்சத்திரம்: வானத்திலிருந்து ஓர் எரிகொள்ளி வீழ்ந்த செய்தினை கூடலூர்கிழார்.
கனைஎரி பரப்பக் கால் எதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே
(புறம் – 229)
என்ற பாடலின்வழி எரிநட்சத்திரச் செய்தியை நாம் அறிகின்றோம்.
சூரியன்
செவ்வியல் இலக்கியத்தில் சூரியன் உதிப்பதும் மறைவதும் பற்றிய வருணனைகள் கீழைக்கரை மக்களின் அனுபவமாகவே பாடப்பட்டுள்ளன.
முந்நீர் மீமீசைப் பலர் தொழத் தோன்றி
(நற்
-283 -6 )
என சூரியன் உதிப்பதையும்,
சுடர்கெழு மண்டிலம் மழுங்க ஞாயிறு
குடகடல் சேரும் படகூர் மாலையும்
(அகம்
– 378)
எனக் காவட்டனாரின் பாடலின் வழி சூரியன் மேலைக்கடலில் மறைவதையும் பாடியுள்ள அறிவியல் சார்ந்த கருத்தை நாம் காண்கிறோம்.
திங்கள் - நிலவு
திங்கள் என்பது
நிலவினைக் குறிக்கும். இது பூமியின் துணைக்கோளாகும். திங்களின் தண்மையும், வெண்மையும் அழகும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உள்ளம் களி கொள்ளச் செய்யும்.
முகிழ்
நிலாத்
திகழ்தரும் மூவாத் திங்கள் (அகம் – 54)
எனத் தலைவி
தன்
மகனை
இளம்பிறையோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். தலைவியின் நெற்றி
பிறைநுதல் என அகநானூறு பாடல் 57,179,192,306 போன்றவற்றில் நெற்றிக்கு உவமையாக சந்திரனை வைத்துப் பாடியுள்ளனர்.
விண்மீன்கள்
வானில் தோன்றும் மற்றொரு அழகுப்பொருள் விண்மீன்கள். விண்ணில் மின்னுவதால் விண்மீன்கள் எனப்பட்டன. தொலைநோக்கி இல்லாத
அக்காலத்தே சங்கப்புலவர்கள் ஒருசில விண்மீன்களைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளனர். அகநானூற்றில் உவமையாகவே விண்மீன்கள் கையாளப்பட்டுள்ளன.
யாமம் கொள்பவர் நாட்டிய நளிசுடர்
வாகை மீனின் விளங்கித் தோன்றும் – (அகம் – 114 – 10-11)
என்ற பாடலடிகள் மூலம் இரவில் காவல் புரிவோர் மதிலில் ஏற்றி வைத்த விளக்குகள் போல வானத்தே தோன்றும் விண்மீன்கள் இருந்ததைப் பதிவு செய்துள்ளனர்.
மருத்துவம்
சங்க இலக்கியங்களில் மருத்துவம் பற்றிக் குறிப்பிடுகையில் மகப்பேறு மருத்துவம், அறுவை மருத்துவம், நம்பிக்கை மருத்துவம் போன்றவை காணப்படுகின்றன. கருவுற்றபோது பெண்கள்
விரும்பும் சுவை (குறுந்-287, ஐங்-51,
பிறர்
மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு
வயவுறு
மகளிர் வேட்டு உணின் அல்லது
பகைவர்
உண்ணா அரு மண்ணினையே ( புறம் -20 ,13-15 )
கருவுயிர்த்த பின்
செய்யப்பட்ட மருத்துவம்
புனிறு
நாறு செவிலியோடு புதல்வன் துஞ்ச
ஐயவி
அணிந்த நெய்யாட்டு ஈரணில்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச் (நற்-40,6-8
),355,370,பரி.6) போரில் புண்பட்ட வீரர்களுக்குச் செய்யப்பட்ட மருத்துவம் (பதிற்-38,42 புறம் – 82) போன்றவையும், உயிர் வாழ்வதற்கும் உடலின் வளர்ச்சிக்கும் உணவு அவசியம், உடல் உறுப்பின் ஊனங்கள் (புறம்-28) ஆகியவை மருத்துவம் சார்ந்த செய்திகளாக இடம் பெற்றுள்ளன.
இவ்வாறாக சங்க
இலக்கியத்தை மாறுபட்ட கோணத்தில் பார்த்து நம் பண்டைத் தமிழர்களின் பல்துறை சார்ந்த அறிவினை பகிர்தல் வேண்டும். இப்போக்கு நம்
இளம்
தலைமுறையினருக்கு தொன்மை, அறிவியல் சிந்தனை போன்றவற்றை பறைசாற்றுவதாக அமைதல் நலம்.
பயன்பட்ட நூல்கள்
1)
புறநானூறு, மூலமும் உரையும், NCBH பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு - 2004 ,
2)
பத்துப்பாட்டு, முதல் மற்றும் இரண்டு தொகுதி, மூலமும் உரையும், NCBH பதிப்பகம் , சென்னை, முதல் பதிப்பு , 2004
3)
நற்றிணை, மூலமும் உரையும், NCBH பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு 2004 .
4)
அகநானூறு , மூலமும் உரையும், NCBH பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு, 2004.
5)
குறுந்தொகை, மூலமும் உரையும், NCBH பதிப்பகம் சென்னை , முதல் பதிப்பு, 2004
6)
தமிழ் இலக்கிய வரலாறு ,மு.வ, சாகித்திய அகாடமி , 22ஆம் பதிப்பு , 2006
7)
செவ்வியல் நோக்கில் செம்மொழி இலக்கியங்கள், ப.ஆ.இராம.குருமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு , 2008
8)
சங்க இலக்கியச் சிந்தனைகள், தொகுதி -2, ப.ஆ. இராம.குருமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு, 2009
9)
சங்க இலக்கியக் கட்டுரைகள், ப.ஆ.இராம.குருமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு, 2007.
தமிழோடு
மயிலம் இளமுருகு
கைபேசி – 7010694695
அருமையான பதிவு ஐயா.வாழ்த்துகள்
ReplyDelete