பழங்காலத்
தமிழர்களின் வீடுகள்தோறும் திண்ணைகள் இருந்தன. பயணம் மேற்கொள்ளும் வழிப்போக்கர்கள்
சற்று அமர்ந்து தலைசாய்ந்து ஓய்வெடுக்கும் வடிவமைப்பில் கட்டப்பட்டு இருந்தன.
தங்கள் வீட்டுத் திண்ணைகளில் ஓய்வெடுப்போருக்கு மகிழ்வுடன் உணவும், நீரும் கொடுத்து உதவும்
நற்பண்புகளைப் பெற்றிருந்தவர் நம் முன்னோர். மன்னனைப் போற்றியும் மக்களைப்
போற்றியும் தோன்றிய இலக்கியங்களும் காப்பியங்களும் இத்தகு வாழ்க்கை
நிகழ்வுகளையும்கூடக் காட்சிப்படுத்த மறக்கவில்லை. அத்தகைய பாடல் ஒன்று விருந்தோம்பும்
ஒழுக்கங்களை வரிசைப்படுத்திக் காட்டுகிறது.
விருந்தோம்பும் முறை
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல்
நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல்
முன் மகிழ்வன செப்பல்
பொருந்து
மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில்
பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல்
இவ்வொன்பான்
ஒழுக்கமும்
வழிபடும் பண்பே
-
-அதிவீரராம
பாண்டியன்
சொல்லும்
பொருளும்
செப்பல் – சொல்லுதல்;
அருகுற – அருகில்;
பரிந்து – அன்புடன்;
முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல்
சொற்கள்
பாடலின் பொருள்
விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல்; நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்; (இவற்றைச் செய்யும்போது) முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்; 'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்றல்; அவர் எதிரில் நிற்றல்; அவர்முன் மனம் மகிழும்படிப் பேசுதல்; அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல்; அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல்; அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.
இலக்கணக்குறிப்பு
நன்மொழி
– பண்புத்தொகை
வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – தொழிற்பெயர்கள்.
பகுபத உறுப்பிலக்கணம்
உரைத்த – உரை + த் + த் + அ
உரை – பகுதி
த் – சந்தி
த் – இறந்த காலஇடைநிலை
அ – பெயரெச்ச விகுதி.
வருக – வா(வரு) + க
வா – பகுதி
வரு எனக் குறுகியது விகாரம்
க – வியங்கோள் வினைமுற்று விகுதி
நூல்வெளி
காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம். இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது. ‘இல்லொழுக்கங் கூறிய’ பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
முத்துக் குளிக்கும் கொற்கை
நகரத்தின் அரசன் அதிவீரராம பாண்டியன். மன்னராகவும் தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த
அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூலே காசிக்காண்டம். இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை
என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது. சீவலமாறன்
என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. நைடதம், லிங்கபுராணம், வாயு ஸம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் ஆகியனவும் இவர்
இயற்றிய நூல்கள்.
0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3- கவிதைப்பேழை - காசிக்காண்டம் - அதிவீரராம பாண்டியன்"
Post a Comment