10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - கவிதைப்பேழை - பரிபாடல் - கீராந்தையார்

Trending

Breaking News
Loading...

10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - கவிதைப்பேழை - பரிபாடல் - கீராந்தையார்

10  ஆம்  வகுப்பு - தமிழ் - இயல்  4 - கவிதைப்பேழை -  பரிபாடல் - கீராந்தையார்


நுழையும் முன் :

இலக்கியங்கள் தாம் தோன்றிய சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு மட்டுமல்லாமல் அக்காலகட்டத்தில் நிலவிய அறிவியல் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் தாங்கி அமைகின்றன. அறிவியல் செழுமை அடைந்திருக்கும் இக்காலத்தின் தொடக்க விதைகளைப் பண்டைய இலக்கியங்களில் நாம் பார்க்கமுடிகிறது. மேனாட்டு அறிவியல் சிந்தனையின் சாயல், துளியும் இல்லாமல் படைக்கப்பட்ட தமிழர் இலக்கியங்களில் துளிர்த்திருக்கும் அறிவியல் கருத்துகள் இன்றளவும் அவற்றோடு ஒத்துப் போவதைக் காண்கையில் பெருவியப்பு மேலிடுகிறது. இன்றைய அறிவியல் கூறுகிற புவித்தோற்றத்தைக் காட்டும் பரிபாடல் வியப்பிலும் வியப்பே!

பரிபாடல்

 

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி,

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்

செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு

தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று

உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்…

-           

- கீராந்தையார்

 

பாடல் பொருள் :


ஒன்றுமில்லாத டத்தில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு -பரமாணு பேரொலியுடன் தோன்றியது. உருவம் அறிய இயலாத வளி முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழி தோன்றியது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. பிறகு நெருப்புப் பந்துபோலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்து ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. மீண்டும் மீண்டும்  சிறப்புடன் வெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் என்னும் உள்ளீடு தோன்றியது. அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய பூமியில் ஊழிக்காலம் கடந்தது.

பரிபாடலில் பெருவெடிப்புக் கொள்கை

இன்றைய அறிவியல் அறிஞர்கள், பல நூறுகோடி ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட ‘பெருவெடிப்பின்’ போது (BIG BANG) இந்தப் பிரபஞ்சம் உருவானது என்கின்றனர். பெருவெடிப்பின்போது அண்டவெளியில் பரந்திருந்த நுண்துகள்கள் ஒன்றிணைந்து பல கோடி ஆண்டுகளுக்குப்பின் குளிர்ந்து, கோள்களாக உருவாயின.

இதே கருத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கீராந்தையார் தமது பரிபாடலில் அழிந்த உலகங்கள் வானத்தில் மீண்டும் கருவாகி வளர்ந்தன. நீரால் குளிர்ந்து நிலம் உண்டாகியது என்கின்றார். இத்தகைய கருத்துகள் பழந்தமிழரின் வானியல் அறிவிற்கு மிகச்சிறந்த சான்றுகளாகும்.

 

சொல்லும் பொருளும்

 

விசும்பு – வானம், ஊழ் – முறை, தண்பெயல் – குளிர்ந்த மழை, ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த, பீடு – சிறப்பு, ஈண்டி – செறிந்து திரண்டு


இலக்கணக் குறிப்பு

 

ஊழ்ஊழ் – அடுக்குத் தொடர், கருவளர் – வினைத்தொகை, செந்தீ – பண்புத்தொகை

வாரா ஒன்றன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


பகுபத உறுப்பிலக்கணம்

கிளர்ந்த – கிளர் + த் (ந்) + த் + அ

                             கிளர் – பகுதி, த் – சந்தி, த்(ந்) – ந் ஆனது விகாரம்

                             த் – இறந்தகால இடைநிலை,  அ – பெயரெச்ச விகுதி

 

நூல்வெளி


நம் தமிழிலக்கிய மரபில் தனிச் சிறப்புடன் திகழ்வது சங்க இலக்கியமாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூகம் போன்றவற்றைச் சங்க இலக்கியங்கள் மூலமே நாம் அறிந்துகொள்கிறோம்.

இப்பாடல் இடம்பெற்ற நூல் பரிபாடல் ஆகும். இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்

இந்நூல் “ஓங்கு பரிபாடல்” எனும் புகழுடையது ஆகும். இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூலாகும். உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக்  கூறியுள்ளனர். இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன. இப்பாடலை எழுதியவர் கீராந்தையார்.

0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - கவிதைப்பேழை - பரிபாடல் - கீராந்தையார்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel