தமிழ் அறிவோம்! 147. எது அமிழ்தம்? ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 147. எது அமிழ்தம்? ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 147. எது அமிழ்தம்?   ஆ.தி.பகலன்

 


எது அமிழ்தம்?
 

அன்னைத் தமிழும்,  அன்னையின் கையால் உண்ணும் உணவுமே இந்த உலகில் உண்மையான அமிழ்தம் ஆகும்.  அதைத்தவிர வேறு அமிழ்தம் இந்த உலகில் இருக்கிறதா?  என்பதை இப்பாடல்வழி காண்போம். 

" ஒப்புடன் முகம் மலர்ந்தே

உபசரித்து உண்மை பேசி

உப்பிலாக் கூழ் இட்டாலும்

உண்பதே அமிர்தம் ஆகும்

முப்பழமொடு பால் அன்னம்

முகம் கடுத்து இடுவாராயின்

கப்பிய பசியி னோடு

கடும்பசி ஆகும் தானே " ( விவேக சிந்தாமணி - 04) 

முழுமனத்தோடும் , மலர்ந்த முகத்தோடும், உண்மையான சொற்களைப் பேசி, பாசத்தோடு பணிவிடை செய்து   உப்பில்லாதக் கூழைக் கொடுத்தாலும் அதை உண்பதே அமிழ்தம் ஆகும்.  அதுவே உண்பவர் உடலுக்கு நலம் செய்யும். 

உள்ளத்தில் உண்மை அன்பு இல்லாமல் , கடுகடுப்பான முகத்தை வைத்துக் கொண்டு,  முப்பழம் ( முக்கனி)  என்று சொல்லக் கூடிய மா, பலா, வாழை என்னும் பழ வகைகளோடு பால் சோற்றையே கொடுத்தாலும் அது பசியைப் போக்காது. ஏற்கனவே இருந்த பசியைக் கடும்பசியாக்கும் . பகட்டான உணவு  ஒருபோதும் பசியைப்  போக்காது.

 அன்பு கலந்த விருந்தோம்பலே பசியைப் போக்கும். 

விருந்தோம்பலுக்கு முக்கனி தேவையில்லை.

நல்ல மனம்,  மலர்ந்த முகம்,  இன்சொல் ஆகிய மூன்றும் போதும்.  இம்மூன்றும் உள்ளவர்கள் கொடுக்கும் உணவு கூழோ, கஞ்சியோ அதுவும் அமிழ்தம் ஆகும். 

"அன்போடு  குழைத்துக் கொடுக்கும்  கூழும் அமிழ்தம் ஆகும் "

விருந்தினர்களுக்கு விருந்தளிக்க அறுசுவை வேண்டாம்.  அன்பென்ற ஒரு சுவை போதும்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை ,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! 147. எது அமிழ்தம்? ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel