"சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் "
தமிழ் நாட்டில் யாராவது " சாகும்போது
தமிழ்படித்துச் சாகவேண்டும் " என்று சொன்னால், கேட்பவர்கள் அனைவரும் என்ன
சொல்வார்கள் தெரியுமா?
"தமிழ் படித்தால் வாழவா முடியும்? சாகத்தானே
முடியும். அதனால் , சாகும்போதும் தமிழ்படிப்பதும், தமிழ் படித்துவிட்டு சாவதும்
இரண்டுமே ஒன்றுதான் " என்று ஏளனத்தோடு சொல்வார்கள். தமிழ் நாட்டில் தமிழ்
படித்தவர்களின் இன்றைய நிலை இதுதான் .
"சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பலிலும் தமிழ்மணந்து வேகவேண்டும் "
என்று தன் தமிழ்ப்பற்றை மிக அழகாக எடுத்துக்
காட்டியுள்ளார் ஈழத்துக் கவிஞரான க.சச்சிதானந்தன் அவர்கள். காலத்தை வென்ற
இக்கவிதையைத் தமிழர்கள் அனைவரும் தங்கள் இதயத்தில் பொறிக்க வேண்டும்.
" சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதை
தொழுது படித்திடடி பாப்பா "
தமிழின் சிறப்பறிந்து தமிழ் படிக்குமாறு பாப்பாவுக்கு
சொல்வது போல் இந்தப் பாருக்கே சொல்லியிருக்கிறார் மகாகவி பாரதி.
இப்படி அறிவுடைய சான்றோர்கள் எல்லாம் வாழும்போதும் தமிழ்
படிக்க வேண்டும். சாகும்போதும் தமிழ் படிக்க வேண்டும் என்று
வலியுறுத்துகிறார்கள். ஆனால், இன்றோ
தமிழ் படிப்பதையும், தமிழ் வழியில் படிப்பதையும் ஒரு சாபக்கேடாக
நினைக்கிறார்கள்.
'ஆங்கிலவழிக் கல்வி ' என்ற பெயரில் கல்வியை விற்று காசு
வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்வழிக் கல்வியோ மாணவர்கள் சேர்க்கை இன்றி காற்று
வாங்கிக் கொண்டு இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோது கூட இவ்வளவு ஆங்கில மோகம் நம்மிடையே இல்லை. இன்று
பெற்றோர் அனைவரும் ஆங்கிலவழிப்
பள்ளிகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் .
காரணம் என்ன தெரியுமா?
ஆங்கிலேயர்களின்
அடிவருடிகளிடமும்,
வந்தேறிகளின் வால் பிடித்துக் கொண்டு
இருப்பவர்களிடமும்தான் ஆட்சியும், அதிகாரமும் இருக்கிறது. அவர்களுக்கு தமிழைப்
பற்றியோ, தமிழர்களைப் பற்றியோ என்ன கவலை?
தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சியைப் பிடிப்பார்கள்.
"தமிழ்தான் எங்கள் உயிர் " என்று சொல்லி அழகாக
நடிப்பார்கள்.
"தமிழ் படித்தவர்களுக்கு வேலை கொடு " என்று கேட்டால் ஆயுதம் எடுத்து அடிப்பார்கள்.
தமிழ்நாட்டில் தமிழைக் காக்க என்னதான் செய்ய வேண்டும்?
தமிழ் உணர்வுள்ளவர்களிடம் ஆட்சி அதிகாரம் இருக்க
வேண்டும்.
அது நடக்காது.
தமிழ் நாட்டில் ஆட்சி மொழி தமிழ் என்பதால், பள்ளிக் கல்வி முழுவதும் தமிழ் வழியில்தான்
பயில வேண்டும் என்று அரசாணை வெளியிட வேண்டும். அதுவும் நடக்காது.
தற்போது "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
" ( TNPSC) நடத்தும் தேர்வில்
வெற்றிபெறுபவர்களில் 20 விழுக்காடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு
வழங்கப்படுகிறது. அதை தலைகீழாக மாற்றுவோம். இனி தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 80
விழுக்காடும் , மற்ற மொழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடும் வேலை வாய்ப்பில்
இட ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடுவோம். அதுபோதும். அதன்பின் பாருங்கள் தமிழ் படித்தவர்கள் நிலை
தாறுமாறாக உயரும்.
இந்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருபவனே தமிழ்
உணர்வுள்ள ஆட்சியாளன். இது எப்போது நடக்கும் என்பதைக் காலம்தான் பதில் சொல்ல
வேண்டும்.
ஆங்கில வழியில் படித்த ஆங்கிலேயர்களின் வழித்தோன்றல்
எல்லாம் உச்சிக் குடுமியைப் பிடித்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் செல்வார்கள்.
வழக்கு தொடுப்பார்கள். "இது சமூக
நீதிக்கு எதிரானது " என்பார்கள். தாய்மொழியில் கல்வி கற்று தன் தாய்நாட்டில்
அரசு வேலை கேட்பது சமூக நீதிக்கு எதிரானதா?
எதற்காக நீங்கள் எல்லாம் ஆங்கில வழியில் கல்வி கற்க
விரும்புகிறீர்கள்? உலகம் முழுவதும்
ஆங்கிலம் பேசப்படுகிறது. ஆங்கிலம் கற்றால் உலகம் முழுவதும் வேலை கிடைக்கும்
என்பதற்காகத்தானே? அதைத்தான் நாங்களும்
சொல்கிறோம். அயல்நாட்டில் ஆனை பிடிக்க போகிறவர்களுக்கு உள்ளூரில் ஓணான் பிடிக்கிற
வேலை எதற்கு? அந்த ஓணானை எல்லாம் நாங்களே
பிடித்துக் கொள்கிறோம். நீங்கள் வெளியே ( வெளிநாடு) செல்லுங்கள்.
ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு அயவ்நாட்டில் வேலை!
இதுதான் சட்டம்!
என் "கனவு மெய்ப்பட வேண்டும் "
தமிழா படி!
தமிழைப் படி!!
வையம் உன்னை வாழ்த்தும்படி
நாளை உன் வாழ்க்கை உயரும்
நல்லபடி!
நான் ( இளங்கலை)
தமிழ் படித்தபோது
" நீ தமிழ் படித்தால் நன்றாக வாழ மாட்டாய். தமிழ்
உன்னை வாழவிடாது. உன்னை கொன்றுவிடும் " என்று என்னை எல்லோரும்
எச்சரித்தார்கள்.
நான் தன்னம்பிக்கையுடன் சொன்னேன்
" தமிழ் என்னை வாழ வைக்கும்.
தமிழ் என்னை ஒருபோதும் சாக விடாது.
ஏனென்றால்,
என் தமிழ் சுத்த சைவம்.
அது யாரையும் கொல்லாது!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 155. " சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் ஆ.தி.பகலன்"
Post a Comment