தமிழ் அறிவோம்! 154. கொல்லாமை ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 154. கொல்லாமை ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 154.   கொல்லாமை    ஆ.தி.பகலன்

 


"கொல்லாமை "
 

நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது என் வகுப்பில் நடந்த நிகழ்வு. 

தமிழ் பாடவேளையில் தமிழாசிரியர் 'திருக்குறள்'  நடத்திக் கொண்டிருந்தார். 

" தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை. ( குறள் - 327) 

"தன் உயிரையே இழக்கின்ற நிலை ஏற்பட்டாலும், அதைக் காப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக் கூடாது.  தன் உயிரைக் கொடுத்தாவது பிற உயிர்களைக் காக்க வேண்டுமே தவிர,   தன் உயிர் காக்க எவ்வுயிரையும் கொல்லக் கூடாது. அதுவே அறம் "  என்று மிக அழகாக விளக்கம் தந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார் என் தமிழாசிரியர். அப்போது உள்ளே வந்த உயிரியல் ஆசிரியர் ஓர் அறிவிப்பு ஒன்றைக் கூறினார்.

 " நாளை உயிரியல் செய்முறைத் தேர்வு உள்ளது. அதற்காக ஆளுக்கொரு எலி, தவளை பிடித்து வரவேண்டும். இரண்டில் ஒன்றையாவது கொண்டு வரவும். இல்லையேல் பள்ளிக்கு வரவேண்டாம் " என்று அதிரடியாக அறிவித்துவிட்டு சென்றார். அவர் சென்றதும் ,  மற்ற மாணவர்களிடம் நான் கிண்டலாக கேட்டேன். ஆய்வு என்ற பெயரில் எண்ணற்ற உயிர்களைக் கொல்கிறாரே இவர் உயிரியல் ஆசிரியரா?  இல்லை உயிரை எடுக்கின்ற ஆசிரியரா?

"தான் வாழ்வதற்காக  எந்த உயிரையும் கொல்லக் கூடாது" என்கிறது தமிழ். மனித சமுதாயம் வாழ ஆய்வுக்காகவும்,  மருந்து கண்டறிந்து அதைச் சோதிப்பதற்காகவும் எண்ணற்ற உயிர்களைக் கொல்கிறது அறிவியல் உலகம். அறிவுள்ளவன் அடுத்த உயிரைக் கொல்ல மாட்டான். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத துறைக்கு அறிவியல் என்று பெயர் வைத்தது யார்? என்றெல்லாம் என் கேள்வியும், சிந்தனையும் நீண்டது. நான் சிந்தித்தது போலவே சில ஆண்டுகள் கழித்து அரசும் சிந்தத்தது. உயிரியல் செய்முறைத் தேர்வுகளுக்கு உயிர்களைக் ( எலி, தவளை) கொல்வதற்கு தடை விதித்தது. 

இன்றும் ஒன்றை நான் சிந்தித்து வைத்திருக்கிறேன். அதை அரசு நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

மது பானக்கடைகளில்

 " மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு " என்பதைக் கட்டாயமாக எழுதி வைக்க சட்டம் இயற்றியது போல எல்லா இறைச்சிக்கடைளில் , அசைவ உணவகங்களிலும் இந்தத் திருக்குறளையும் விளக்கத்தையும் கட்டாயம்  எழுத வைக்க சட்டம் இயற்ற வேண்டும்.

" தினல்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். ( குறள் - 256) 

புலால் ( இறைச்சி) தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லாது இருப்பாரானால் , விலையின் பொருட்டு கடைகளில்  ஊன் ( இறைச்சி ) விற்பவர் இல்லாமல் போவர்.

எங்கெங்கோ திருக்குறளை எழுதி வைக்கும் அரசு, இறைச்சி விற்பனை செய்யும் இடங்களில் இந்தக் குறளையும் அதன் பொருளையும் எழுதி வைத்தால், ஏதோ அறிவுள்ள சில மனித உயிர்கள் படித்து உணர்ந்து மற்ற உயிர்களைக் கொன்று தின்னாமல் இருப்பார்கள் . அதனால்,  எண்ணற்ற உயிர்கள் பிழைக்கும் என்பதே என் எண்ணம். 

"உலகில் உள்ள எல்லா மதங்களும் ஏதோ ஒரு பெயரைச் சொல்லி இவர்தான் கடவுள்.  இவரைப் போற்றுங்கள். புகழுங்கள் அப்படி புகழ்ந்தால் உங்கள் பாவங்கள் போக்கப்படும். உங்கள் துன்பங்கள் நீக்கப்படும். நீங்கள் ஆனந்தமாய் வாழலாம் " என்று கதை அளந்து கொண்டிருக்கின்றன . ஆனால்,  உலகப் பொதுமறையான திருக்குறள் மட்டுமே,  " நீங்கள் மற்ற உயிர்களைக் கொல்லாமல் இருந்தால் போதும். நீங்களும் கடவுள் ஆகலாம் " என்கிறது. அதுதான் தமிழின் சிறப்பு. தமிழ் மறையின் சிறப்பு. 

" கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா  உயிரும் தொழும். ( குறள் - 260) 

எவ்வுயிரையும் கொல்லாமலும், புலால் ( இறைச்சி) உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை , எல்லா உயிர்களும் கடவுளாய் நினைத்துக் கைகூப்பி வணங்கும்.  ஆம். உயிர்களைக் கொல்லாதவனே இங்கு உண்மையானக் கடவுள். 

இன்று உலகில் கடவுளின் பெயரால்,  மதத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்கிறார்கள் இந்தெந்த உயிர்களைக் கொன்று தின்னலாம் என்று பட்டியல் போட்டுத் தருபவன் கடவுள் இல்லை. காட்டுமிராண்டி. இந்ந மனித சமுதாயம்

 " அறிவு இல்லாமை" என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதைப் போக்கவே   " கொல்லாமை " என்ற அதிகாரத்தை அமைத்தார் திருவள்ளுவர்.

 

"ஒருபோதும் செய்யாதே

உயிர்க்கொலை!

செய்தால்

ஒருநாளும் உயராது

உனது நிலை!"

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை.

சதுரங்கப்பட்டினம்

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! 154. கொல்லாமை ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel