"நவமணிகள் "
'நவமணிகள் ' என்றாலே நம் நினைவுக்கு வருவது முத்து, பவளம்,
வைரம் வைடூரியம் போன்றவைதான். அவை எல்லாம் உடலுக்கு அழகு சேர்க்கும் நவமணிகள்.
உயிருக்கு அழகு சேர்க்கும் நவமணிகளைப் பற்றி இங்குக் காண்போம்.
" ஆற்றுதல் என்பதுஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை
அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
செறிவெனப் படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ஓடாது உயிர்வௌவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல் " ( கலித்தொகை - 133)
1. இல்வாழ்க்கை என்பது வறியவர்களுக்கு உதவி செய்து வாழ்தல்.
2. பாதுகாப்பது என்பது அன்புடையோரைப் பிரியாமல் வாழ்தல்.
3.பண்பு எனப்படுவது சான்றோர் வழி அறிந்து ஒழுகுதல்.
4. அன்பு எனப்படுவது சுற்றத்தினரை அரவணைத்து வாழ்தல்.
5. அறிவு எனப்படுவது அறிவற்றவர்கள் சொல்லும் பயனற்றச்
சொற்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளுதல் .
6. நெருக்கம் ( செறிவு)
எனப்படுவது கொடுத்த வாக்கைக் காத்து நிற்றல்.
7. மறை ( நிறைவு)
எனப்படுவது மறைக்கப்பட வேண்டியவற்றை எல்லாம் பிறர் அறியாமல் காத்தல்.
8. நீதிமுறைமை
எனப்படுவது தங்களுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று பாராமல் சரியான நீதி
வழங்குதல்.
9.பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல்.
இந்த ஒன்பது அறக்கருத்துகளைக் கடைபிடித்து வாழ்வதுதான் மனித சமுதாயத்தின் தலையாயக் கடமையாகும். ஆதலால், இந்த நவமணிகளை நாம் அணிந்து கொண்டால் நம் உயிர் மட்டுமல்ல, இந்த உலகமே அழகு பெறும்.
இனி நம் வாழ்க்கையில்
நவமணிகள் என்றாலே நினைவுக்கு
வரவேண்டியது கலித்தொகை காட்டும் இந்த நவமணிகளே (ஒன்பது அறக்கருத்துகளே ).
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 153. நவமணிகள் ஆ.தி.பகலன்"
Post a Comment