தமிழ் அறிவோம்! 152. சொர்க்கத்துக்குச் செல்லும் வழி ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 152. சொர்க்கத்துக்குச் செல்லும் வழி ஆ.தி.பகலன்

  தமிழ் அறிவோம்!    152. சொர்க்கத்துக்குச்  செல்லும் வழி   ஆ.தி.பகலன்

 


"சொர்க்கத்துக்குச்  செல்லும் வழி "
 

அந்த ஊருக்கு புதிதாக வந்த பெரியவர் ஒருவர் கையில் தான் செல்ல வேண்டிய முகவரியை வைத்துக் கொண்டு வழி தெரியாமல் தேடி அலைந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த சிறுவனிடம்," தம்பி!  இந்த ஊரில் அஞ்சல் நிலையம் எங்கே இருக்கிறது? என்று கேட்டார். " நானும் அந்த வழியேதான் செல்கிறேன். வாருங்கள் அழைத்துச் செல்கிறேன் " என்றான் அந்த சிறுவன். 

இருவரும் சேர்ந்து "அஞ்சல் நிலையம் " நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.  அஞ்சல் நிலையத்தில் உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கிறதா?  என்று கேட்டான் அந்த சிறுவன். அஞ்சல் நிலையத்தில் எனக்கு எந்த வேலையில் இல்லை. அதற்கு எதிரே உள்ள திடலில் மாலையில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில்   சொற்பொழிவு  ஆற்றவே நான் வந்தேன் " என்றார் அப்பெரியவர்.

"என்ன தலைப்பில்  சொற்பொழிவு ஆற்றப் போகிறீர்கள் " எனக் கேட்டான் சிறுவன். 

" சொர்க்கத்துக்குச் செல்லும் வழி " என்ற தலைப்பில் சமயச் சொற்பொழிவு ஆற்றப்போகிறேன்.  என் சொற்பொழிவைக் கேட்டால் சொர்க்கத்துக்குச் செல்லும் வழியை அறியலாம். அதனால்,  நீயும் வந்து என் சொற்பொழிவைக் கேள். நாளை நீயும் சொர்க்கத்துக்குச் செல்வாய் " என்றார் அப்பெரியவர். 

இதைக்கேட்ட அச்சிறுவன் நக்கலாகச் சிரித்தான்.  " என்ன பெரியவரே!  இங்கே இருக்கிற அஞ்சல் நிலையத்துக்கே உமக்கு நான்தான் வழி சொன்னேன். நீங்கள் எனக்கு சொர்க்கத்துக்குச் செல்லும் வழியைச் சொல்வீர்களா? நன்றாக  கதை அளக்கிறீர்கள். உண்மையிலேயே நீங்கள் நல்ல  சொற்பொழிவாளர்தான் " என்று கிண்டலடித்தான் . சிறுவனின் கேள்விக்கணைகள் பெரியவரின் இதயத்தைப் பதம் பார்த்தது. 

இப்படித்தான் நாட்டில் பலபேர்

" சொர்க்கத்துக்கு வழி சொல்கிறேன் " என்று சொல்லி நாட்டை ஒரு வழி செய்து கொண்டு இருக்கிறார்கள்.  உண்மையிலேயே சொர்க்கத்துக்குச் செல்ல யாரால்தான்  வழி சொல்ல முடியும்?  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழர்கள்  அதற்கான வழியைக் கண்டறிந்து சொல்லிவிட்டார்கள். அந்த வழியைப் பின்பற்றினாலே  நாம் அனைவருமே சொர்க்கத்துக்குச் செல்லலாம். 

" குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து

உளம்தொட்டு உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப்

பாகுபடும் கிணற்றோடு என்றுஇவ்வைம் பாற்படுத்தான்

ஏகும் சுவர்க்கம் இனிது. ( சிறுபஞ்சமூலம் - 65 ) 

1..பொது மக்கள் பயன்பாட்டிற்காக  குளம் அமைத்தல்.

2. மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல்.

3. மக்கள் செல்வதற்கான பாதை அமைத்துத் தருதல்.

4. மக்கள் உழுது உண்ண தரிசு நிலங்களை எல்லாம்,  உள்ள விருப்பத்தோடு வயலாக்கித் தருதல்.

5. வளமுள்ள பாகு போன்ற நீர் ஊறும் கிணறுகளை வெட்டித் தருதல். 

இப்படிப்பட்ட ஐந்து அறச்செயல்களைச் செய்பவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்,

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to " தமிழ் அறிவோம்! 152. சொர்க்கத்துக்குச் செல்லும் வழி ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel