"மூவகை மக்கள் "
இந்த உலகில் உள்ளன்போடு உதவி செய்பவர்களின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இந்தக் காலத்தில் உதவி செய்பவர்களை இருவகையாக
பிரிக்கலாம் .
விருப்பத்தோடு ( உள்ளன்போடு ) உதவி செய்பவர்கள் .
விளம்பரத்திற்காக உதவி செய்பவர்கள். இங்கு பலர் செய்யும் உதவி, விளம்பரம் தேடிக் கொள்வதற்கே
பயன்படுகிறது.
500 ரூபாய்க்கு
செய்த உதவியை, 5000 ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்கிறார்கள்.
" வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியக் கூடாது " என்பார்கள். அதுதான் நம் தமிழ் மரபு. அந்த மரபு எல்லாம் இப்போது மலையேறி விட்டது.
ஔவையார் காலத்தில் உதவி செய்பவர்களில் மூன்று வகையினர் இருந்திருக்கிறார்கள். அதை ஔவையார் பாடல்வழி காண்போம்.
" சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வர்சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே - நல்ல
குலமாலை வேல்கண்ணாய்! கூறுஉவமை நாடின்
பலாமாவைப் பாதிரியைப் பார். " ( ஔவையார் தனிப்பாடல்கள் - 30)
மாலை அணிந்த வேலைப் போன்ற கண்களை உடையவளே!
1 . பெரியோர் தாம் செய்ய இருக்கும் உதவியை மற்றவர்க்குச் சொல்லாமலே செய்வர்.
பூக்காமலே காய்க்கும் பலாமரத்தை இவர்களுக்கு உவமையாகக் கூறலாம்.
2. சிறியோர் தாம் செய்ய இருக்கும் உதவியை மற்றவர்க்குச்
சொல்லி விட்டு செய்வர். பூத்த பின்னர் காய்க்கும் மாமரத்தை இவர்களுக்கு
உவமையாகக் கூறலாம்.
3. உதவி செய்வதாகச் சொல்லியும் பின் அதைச் செய்யாமல் இருப்பவர்கள் கீழ்மக்கள் ஆவர். பூத்தும் காய்க்காத பாதிரி மரத்தையே இவர்களுக்கு உவமையாகக் கூற வேண்டும்.
மூவகை மக்களுக்கும்
பொருந்தக்கூடிய உவமையை மிக
அழகாகப் சொல்லியிருக்கிறார் ஔவையார்.
உலக உண்மைகளை அழகான உவமைகள் மூலம் உணர்த்துவதில் ஔவையார்க்கு நிகர் இங்கு யாரும் இல்லை.
உதவி செய்வதில் வகைப்படுத்தப்பட்ட மூவகை மக்கள் ஔவையார் காலத்தில் மட்டுமல்ல,
எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள். இந்த மூவகை மக்களில் என்றும் நாம் முதல்வகை
மக்களாக இருப்போம்.
" அள்ளி அள்ளி கொடுக்கட்டும்
உன் இரு கை!
உலகோர் உள்ளத்தில் கிடைக்கும்
உனக்கென்று ஓர் இருக்கை!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 151. மூவகை மக்கள் ஆ.தி.பகலன்"
Post a Comment