"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே "
தமிழர்கள்
தங்கள் குடிப்பெருமையை எடுத்துரைக்க " கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே "
என்ற பாடலைத்தான் பாடுவார்கள். அப்படி அவர்கள் பாட ஆரம்பித்தாலே , கேட்பவர்கள்
மனக்கலக்கம் அடைகிறார்கள். காரணம், " தமிழர்கள் எப்போது பார்த்தாலும் கல்லு,
மண்ணு என்று கதைசொல்லி நம்மை எல்லாம்
ஏமாற்றுகிறார்கள் " என்று அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில், தமிழர்கள் கதை
சொல்லவில்லை. தங்கள் இனம் உருவான வரலாற்றைத்தான் சொல்கிறார்கள்.
தங்களுக்கென்று வரலாறு இல்லாதவர்கள்தான் வரலாற்றை எப்போதும் நம்ப மறுப்பார்கள். 'வரலாறு '
என்றாலே அது வெறும் கட்டுக்கதை என்று சொல்லி காலத்தை ஓட்டுவார்கள்.
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே " என்பது
கதையல்ல. தமிழர்களின் வரலாறு. அந்த
வரலாற்றை இலக்கியச் சான்றோடு இங்குக் காண்போம்.
சேர மரபில் தோன்றிய ஐயனாரிதனார் இயற்றிய நூலே "
புறப்பொருள் வெண்பாமாலை " . இந்நூலின் இரண்டாவது படலத்தின் பதின்மூன்றாவது
சூத்திரம் " குடிநிலை " பற்றிக்
கூறுகிறது. தான் பிறந்த குடியின் நிலையை, புகழைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதே
"குடிநிலை" எனப்படும்.
" பொய்அகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்குஒலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி. " (புறப்பொருள் வெண்பாமாலை சூத்திர விளக்க பாடல் - 35)
இந்த உலகம்
தோன்றிய காலத்தில், புவி முழுவதும் கடல்
நீரால் சூழப்பட்டிருந்தது. ஆரவாரித்து ஒலி
எழுப்பிய கடல் நீர் நாளடைவில் விலகிச் செல்ல
செல்ல கல் (மலை தோன்றியது. ஆனால், மண் (வயல்) தோன்றவில்லை. அந்த மண்
தோன்றாத காலத்திற்கு முன்பே வாளொடு தோன்றிய மூத்த (உலகில்
முதன்முதலில் தோன்றிய) குடி தமிழ்க்குடி . அதனால் பொய் சொல்வோரின் பொய் நீங்கிப் போக, நம் தமிழ்க்குடி ஒவ்வொரு நாளும் புகழ் பெருகிச்
சிறப்படைவதில் என்ன வியப்பு இருக்கின்றது? தகுதி உள்ளவர்களுக்குத் தன்னிகரற்ற புகழ் கிடைப்பதில் தவறேதும் இல்லையே? என்னும்
கருத்தையே வெளிப்படுத்துகிறது இப்பாடல். தமிழர்களின் பெருமையை
இவ்வளவு அழகாக எடுத்தியம்ப வேறு யாரால்
முடியும்?
இப்பாடலை அறிவியல் கண்ணோட்டத்துடன் கொஞ்சம் ஆய்வு
செய்வோம். புவி எப்படி தோன்றியது?
பெருவெடிப்புக் (Big - Bang Theory) கொள்கையின்படி
சூரியனிடம் இருந்த வந்த சிறு துகளே இந்தப்
புவி ஆகும். முதன்முதலில் நெருப்புப்
பிழம்பாக இருந்தது. தொடர்ந்து பெய்த கனமழையினால் புவி முழுவதும் நீரால்
மூடப்பட்டது. சிலகாலம் கழித்து வெள்ளம் வடியத் தொடங்கியது. வெள்ளம் வடிய வடிய உயரமான மலைகள் தோன்றியது . இந்தப் புவி இருநிலமாய் ( மலை,
கடல்) ஆனது. கடலும் மலையுமாய் இருந்த இந்தப் புவியானது கடல் அரிப்பாலும்,
காற்றாலும், கன மழையாலும் , அருவி நீராலும், மரவேர்களாலும் மலையாய் இருந்த
குறிஞ்சி நிலம் மெல்ல மெல்ல மண்ணாக மாறியது. அதன் பின்புதான் முல்லையும( காடு),
மருதமும் (வயல்) தோன்றியது. உலக வரலாற்றில் ஆதிமனிதன் காட்டு வாசியாகவே
அறியப்படுகிறான். ஆதியில் தோன்றிய மனித நாகரிகம் எல்லாம் ஆற்றங்கரை நாகரிகமாகவே அறியப்படுகின்றன.
ஆனால்,
தமிழர்கள் மட்டுமே மலையில் தோன்றி இருக்கிறார்கள். அதனால்தான் மலைக்க
வைக்கும் சாதனைகளை இன்றுவரை செய்து வருகிறார்கள் . இதைச் சுட்டிக்காட்டவே
"கல்தோன்றி (மலை - குறிஞ்சி) மண்
தோன்றாக் (வயல் - மருதம்) காலத்தே
தோன்றியவர்கள் தமிழர்கள் " என்கிறது இப்பாடல் . மற்ற நாடுகளில்
தோன்றிய மனித சமூகம் எல்லாம் கூர்மையான
கற்களையே ஆயுதங்களாகப் பயன்படுத்தின. ஆனால், தமிழர்கள்தான் உலகில் முதன்முதலில்
உலோகப் பயன்பாட்டைக் கண்டறிந்து வாளைப் பயன்படுத்தினார்கள். பண்டையக்கால போர்
ஆயுதங்களில் இரண்டு வகை உண்டு.
1. கைவிடு படை (வேல், வில்)
2. கைவிடாப் படை (வாள்)
வேலையும், வில்லையும் கொண்டு எதிரியை மறைந்திருந்து கூட
தாக்க முடியும். ஆனால், எதிரியை நேருக்கு
நேர் தாக்க வாளால் மட்டுமே முடியும்.
ஆயுதம் எடுக்கும்போது கூட ஆறாம் அறிவோடுதான் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். "உலோகப் பயன்பாட்டைக் கண்டறிந்த முதல்
அறிவாளிகள் தமிழர்கள் " என்ற பொருளில்தான் "வாளொடு தோன்றிய மூத்த குடி
" என்ற சொற்றொடர் பாடலில் வந்துள்ளது.
குறிஞ்சி நிலத் தலைவன் , "கல்தோன்றி மண் தோன்றும்
முன்பே தன்குடி (தமிழ்க்குடி) தோன்றியது என்பதை உலகின் தோற்றத்துடன் ஒப்பிட்டுக்
கூறுவதாகவே இப்பாடல் அமைந்துள்ளது.
" கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே " என்று
சொல்லி தமிழர்கள் கதை அளக்கவில்லை. தங்கள் லரலாற்றை அறிவியல் ஆதாரத்துடன் சொல்லி
இருக்கிறார்கள் என்பதை இனியாவது உணருங்கள்.
உலகிற்கு உணர்த்துங்கள்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 150. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே ஆ.தி.பகலன்"
Post a Comment