" பயனில்லா ஏழு "
நம்முடனே இருந்து நமக்கு எந்தவித பயனையும் தரவில்லை என்றால், அவை இருந்தும் பயனில்லை தானே? அப்படி மனித சமுதாயத்திற்கு பயனில்லாத ஏழினைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது விவேக சிந்தாமணி.
" ஆபத்துக்கு உதவாப் பிள்ளை,
அரும்பசிக்கு உதவா அன்னம்,
தாபத்தைத் தீராத் தண்ணீர்,
தரித்திரம் அறியாப் பெண்டிர்,
கோபத்தை அடக்கா வேந்தன்,
குருமொழி கொள்ளாச் சீடன்,
பாபத்தைத் தீராத் தீர்த்தம்,
பயனில்லை ஏழும் தானே " ( விவேக சிந்தாமணி - 01)
1. தன்னை ஈன்ற பெற்றோர்க்கு மிகுந்த துன்பங்கள் நேர்ந்த
காலத்தில் அத்துன்பங்களை நீக்கி உதவ
வேண்டும். அப்படி ஆபத்துக் காலத்தில் உதவாத பிள்ளை இருந்தும் அவன் இல்லாதவனாகவே
கருதப்படுவான்.
2. சிறுகுடலைப் பெருங்குடல் விழுங்குவதைப் போல
ஒருவனுக்குப் பசி ஏற்படுகிறது. அப்பசியைப் போக்க அன்னம் ( சோறு) உதவ வேண்டும். பசி
நேரத்தில் கிடைக்காத சோறு பயனற்றது ஆகிவிடும். பசி உணர்வு அடங்கிப்போன பிறகு அந்த
உணவால் பயனில்லை.
3. கடலில் பயணம் செய்யும் போது நா வறண்டு தாகம்
ஏற்படுகிறது. அந்தத் தாகத்தைப் போக்க கடல் நீரைக் குடிக்க முடியுமா? முடியாது.
தண்ணீர் என்று இருந்தால் , அது தாகத்தைத் தணிப்பதற்குப் பயன்பட வேண்டும். அப்படி
பயன்படாத நீரால் பயனில்லை.
4. தரித்திரம் என்ற சொல் வறுமையைக் குறிக்கும். கணவனின்
வறுமை நிலையை அறிந்து குடும்பத்தைச் சிக்கனமாக நடத்த வேண்டும். ஆடம்பரமாக வாழ
வேண்டும் என்று மனைவி எண்ணினால் அது
குடும்பத்தைச் சீரழித்துவிடும்.
5. அரசன் கோபத்தை அடக்கி, அறிவைப் பெருக்கிக் கொள்ள
வேண்டும். தீராக் கோபம் போராய் முடியும். அரசனின் கோபமே போரையும் நாட்டுக்கு
அழிவையும் ஏற்படுத்தும்.
6. தன் ஆசிரியர் தனக்குக் கற்பித்தக் கல்வியை மாணவன்
எப்போதும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி நடக்க வேண்டும். அப்படி
நடக்காத மாணவனால் ஒரு பயனும் இல்லை.
7. புனித நீர் ( தீர்த்தம்) என்றால் அதில் மூழ்குவோரின் பாவத்தைப் போக்க
வேண்டும்.
" ஆடுவார் பாவம் தீர்த்து,
அஞ்சனம் அலம்பி
ஓடும் மா காவிரி " என்கிறார் சுந்தரர்.
கங்கையோ , காவிரியோ அது மக்களின் பாவத்தைப் ( வறுமையை) போக்க வேண்டும். வறுமையைப் போக்கி வளத்தைக் கொடுப்பதே உண்மையான புனித நீர். அப்படி இல்லையேல் அதனால் ஒரு பயனும் இல்லை.
விவேக சிந்தாமணியைப் போலவே, ஔவையாரும் "பயனில்லா ஆறு " என்று ஒரு பட்டியல் போட்டுள்ளார். அதையும் இங்குக் காண்போம்.
" மாடுஇல்லான் வாழ்வும் மதிஇல்லான் வாணிபம்நல்
நாடுஇல்லான் செங்கோல் நடாத்துவதும் - கூடும்
குருஇல்லா வித்தை குணம்இல்லாப் பெண்டு
விருந்துஇல்லான் வீடும் விழல்." ( ஔவையார் தனிப்பாடல் - 58)
செல்வம் ( மாடு) அற்றவனின் வாழ்வும், அறிவு அற்றவன் செய்யும் வாணிகமும், நல்ல
நாட்டைப் பெறாதவன் செங்கோல் ஆட்சியை நடத்துவதும், அறிவு கூடுவதற்குக் காரணமான
ஆசிரியனைப் பெறாத கல்வியும், நற்பண்பு இல்லாத மனைவியும், விருந்தினரை விருந்தோம்பல்
செய்யாத இல்லறமும் பயனற்றவையாகும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 149. பயனில்லா ஏழு ஆ.தி.பகலன்"
Post a Comment