தமிழ் அறிவோம்! 148. மணக்கொடை ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 148. மணக்கொடை ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  148. மணக்கொடை    ஆ.தி.பகலன்

 


"மணக்கொடை "
 

'வரதட்சணை ' என்ற வடமொழிச் சொல்லே தமிழில் " மணக்கொடை " என்று வழங்கப்படுகிறது. 

இன்று தங்கம் விலை ஏறினாலே பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கு இரத்த அழுத்தமும் ஏறிவிடுகிறது. தங்கள் மகளை மணமுடிக்க வேண்டி , மணக்கொடைக்காக தங்கம் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதை நினைத்து நினைத்து அவர்களுக்கு மன அழுத்தமும் அதிகமாகி விடுகிறது. 

ஆனால்,  அந்தக் காலத்தில் இந்தக் கவலையெல்லாம் பெண் வீட்டார்க்கு இல்லை . பொன்னைக் கொடுத்து பெண்ணை எடு " என்பதுதான் பழந்தமிழர் மரபு.  ஆம் , நம் தமிழ்ச் சமுதாய வழக்கப்படி ஆண் வீட்டார்தான் பெண் வீட்டார்க்கு மணக்கொடை தரவேண்டும் . பெண் வீட்டார் மனநிறைவு அடையும் அளவுக்கு ஆண் வீட்டார் மணக்கொடை தரவேண்டும் . அப்போதுதான் பெண்  தருவர். 

அந்தக் காலத்தில் எல்லாம் பெண் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல . ஏறுதழுவுதல் , இளவட்டக்கல் தூக்குதல் உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் ஆண்கள்  வெற்றி பெற்றால்தான் பெண் கொடுப்பார்கள். இந்த நிலையெல்லாம் பிற்காலத்தில் அடியோடு மாறியது. எப்போது  தெரியுமா?  நம் நாட்டில் வந்தேறிகள் வந்து குடியேறிய பின்புதான். அவர்களின் ஆணாதிக்கச் சிந்தனைகளை எல்லாம் நம்மிடையே புகுத்திவிட்டார்கள். அதன் விளைவாகவே பெண்களின்  மணவாழ்வுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. 

சங்க காலத்தில் பொன்னைக் கொடுத்து பெண்ணை எடுத்த நிகழ்வை இப்பாடல் வழிக் காண்போம். 

தலைவனின் உறவினர்கள் தலைவியின் வீட்டிற்கு வந்து அவளுடைய பெற்றோர்களிடம் பெண் கேட்கின்றனர்.  தம்முடைய சுற்றத்தார் திருமணத்திற்கு சம்மதிப்பார்களோ அல்லது மறுப்பார்களோ  என்று தலைவி மனக்கலக்கத்தோடு இருக்கிறாள் . அப்போது , தோழி " தலைவன் சார்பாக வந்துள்ள பெரியோர்களும் உன் சுற்றத்தாரும் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆகவே,  உன் திருமணத்திற்குத் தடை எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.  நீ கவலையை விடு " என்று தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. 

" அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ

தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்

நன்றுநன்று என்னும் மாக்களோடு

இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே " (குறுந்தொகை - 146) 

ஊர் மக்களின் அவையில் முன்பு பலமுறை தலைவனின் பரிசுப் பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டன. காரணம்,  அவை தலைவிக்கு நிகரான பரிசுப் பொருளாக இல்லை. ஆனால் இன்றோ மிகுதியான பரிசுப் பொருட்களுடன் தலைவன் வந்திருக்கிறான்.  அதைப்பற்றி தலைவியிடம் தோழி கூறுகிறாள்.

"தலைவி ! இன்றோ தலைப்பாகை அணிந்து கையில் தண்டுடன் இருக்கும் முதியவர்கள் மூலமாகத் தலைவன் (போதும் போதுமென்று சொல்லத்தக்க அளவு பரிசுப் பொருட்களைக்  கொண்டுவந்து அவைமுன் வைத்துள்ளான்)

மணம் பேசச் செய்துள்ளான். அவையில் இருந்த தலைவியின் உறவினரும் கண்டு  " நன்று நன்று " என்று கூறி மகிழ்ந்தனர். 

"நம்முடைய ஊரில் முன்பெல்லாம்  பரிசுத் தொகை போதவில்லை என்பதற்காகப் பிரித்துவிடப்பட்ட தலைவன் தலைவியரைச் (போதிய  பரிசுத்தொகை கிடைத்தவுடன்)  சேர்த்து வைப்போர் இருந்தனர்தானே? " என்று தோழி கூறுகிறாள். 

ஆண் வீட்டார் கொடுக்கும் பரிசுப்பொருட்களால்  (மணக்கொடை) பெண் வீட்டார்க்கு மனநிறைவு ஏற்பட்டால் மட்டுமே பெண் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளதை இப்பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம். 

இன்றையச் சூழலில் " வீட்டுமனை விற்பனைக்கு " என்பதுபோல,  "மணமகன் விற்பனைக்கு " என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள் . 

யாரையும் யாருக்கும் விற்பனை செய்ய வேண்டாம். யாரும் யாருக்கும் மணக்கொடை தர வேண்டாம். அவரவர் உரிமைகளையும்,  அவரவர்க்கு உரிய பொருளையும் (பொன்னோ,  நிலமோ) கொடுத்தாலே போதும்.  ஆணும் பெண்ணும் சமம்.  அதுபோலவே , பெற்றோர் ஈட்டிய சொத்தும் சமம்.  அதை சரியாகப் பிரித்துக் கொடுத்துவிட்டால் போதும்.

அதன்பின் மணக்கொடை என்ற ஒன்று இல்லாமல் போய்விடும். 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்,

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! 148. மணக்கொடை ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel