"மனைவியைப் போற்றுதும் "
இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்துமே சார்பெழுத்துகள் போன்றவைதான். பிற உயிர்களைச் சார்ந்துதான் தன் வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளன. மனிதனும் இதற்கு விதிவிலக்கு அல்ல. குடும்பத்தை, உறவுகளை, நட்பை, சமூகத்தைச் சார்ந்துதான் அவன் வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. ஒரு மனிதனின் வெற்றிக்கும், தோல்விக்கும், பெருமைக்கும், சிறுமைக்கும் அவன் சார்ந்திருக்கும் மனிதர்களும் காரணமாக இருக்கின்றனர். ஒரு மனிதன் எந்தெந்த உறவுகளை இழக்கும்போது, என்னென்ன இழப்புகளைச் சந்திக்கிறான் என்பதை ஔவையார் பாடல்வழி அறிவோம்.
" தாயோடு அறுசுவைபோம் ; தந்தையொடு கல்விபோம் ;
சேயோடு தான்பெற்ற செல்வம்போம்; - ஆயவாழ்வு
உற்றார் உடன்போம்; உடன்பிறப்பால் தோள்வலிபோம் ;
பொன்தாலி யோடுஎவையும் போம்.( ஔவையார் தனிப்பாடல் திரட்டு -64 )
1. தாயோடு அறுசுவை போம்.
ஒரு மனிதனுக்கு அமிழ்தம் என்பது எதுவென்றால் அவன் அன்னையின் கையால் கிடைக்கும் உணவுதான். அன்புடன் உணவை ஊட்டும் தாய் மறைந்ததும் அறுசுவையுடன் கூடிய உணவு கிடைப்பது இல்லையாகும் . பலவிதமான விருந்தினை ஒருவன் உண்டாலும் " எங்கள் அம்மா செய்ததுபோல் வருமா? என்று சொல்வது எல்லோர்க்கும் வழக்கம். அன்னை இல்லையேல் அறுசுவை உணவு இல்லை.
2. தந்தையோடு கல்வி போம்.
தந்தை இறந்த பின்னர் பிள்ளைகளுக்கு கல்விப் பயிற்சி இல்லையாகும். " தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை " என்பார்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவர் தந்தையை விட வேறு யாராக இருக்க முடியும்? தன் அனுபவ பாடங்களை எல்லாம் தன் பிள்ளைகளுக்கு புரிய வேண்டிய விதத்தில் சொல்லி புரிய வைப்பவர் தந்தை மட்டுமே.
3.சேயோடு தான்பெற்ற செல்வம் போம்.
தன் பிள்ளைகள் போன பின்பு ஒருவன் பெற்ற செல்வமும் போய்விடும். ஒருவன் பெறத்தக்க செல்வம் எதுவென்றால் அது மக்கட்செல்வமே. அதைவிட பெரிய செல்வம் வேறு எதுவும் இல்லை. அந்த செல்வமே போன பின்பு மற்ற செல்வங்கள் இருந்து என்ன பயன்?
4.ஆயவாழ்வு உற்றாருடன் போம்.
நல்ல வாழ்க்கை என்பது உறவினர்களுடன் கூடி வாழ்வதுதான். அந்த உறவினர்கள் நம்மைவிட்டு போன பின்பு சிறப்பான வாழ்க்கை என்பது இங்கு எதுவும் இல்லை.
5.உடன்பிறப்பால் தோள்வலி போம்.
உடன்பிறந்தவர் இல்லாத போது பக்கத் துணையாலே வருகின்ற தோள் வலிமை இல்லையாகும். ஒருவனுக்கு உண்மையான வலிமையே உடன்பிறப்புகள்தான். அந்த உடன்பிறப்புகள் போன பின்பு அவன் வலிமையற்றவனாய் ஆகிவிடுகிறான்.
6.பொன்தாலியோடு எவையும் போம்.
பொன்னால் ஆன தாலி அணிந்த மனைவி இறந்தால், ஒருவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா நன்மைகளும் போய்விடும். மனைவி என்பவள் ஒருவனுக்கு அனைத்துமாகி நிற்கிறாள். தாயாக, தந்தையாக, , உடன்பிறப்பாக , தோழியாக , சுற்றமாக, சூழ்ந்து நிற்கும் உலகமாக எல்லாமாகி நிற்கிறாள்.
மனைவி என்பவள் ஒருவனுக்கு தாயைப் போல அன்பு காட்டி, அறுசுவை ஊட்டி, தந்தையைப் போல அறிவுரை கூறி, வாழும் காலம் எல்லாம் நல்ல வழியைக்காட்டி, குழந்தையைப்போல் கொஞ்சிப் பேசி, மனக்கவலைகளுக்கு மருந்தாகி, உறவுகளைப் போல வாழ்க்கைக்கு வளம் சேர்த்து துவண்டு விழும் போதெல்லாம் பலம் சேர்த்து, உடன்பிறப்பைப் போல வலிமை கூட்டி, நம்பிக்கை ஊட்டி வாழ்கிறாள்.
அப்படிப்பட்ட மனைவியை ஒருவன் இழந்துவிட்டால், "அடியற்ற மரமாய் , அச்சாணியற்ற தேராய் " இருப்பான்.
ஒரு மனிதனுக்கு மனவலிமையை விட பன்மடங்கு வலிமையானது மனைவியால் கிடைக்கும் வலிமை .
ஒரு மனிதனுக்கு வலிமையாக மட்டுமல்ல, வரமாகவும் இருப்பவள் மனைவி மட்டுமே.
இத்தனை சிறப்புகளையும் கொண்ட மனைவியை ஒருவன் வாழும் நாளெல்லாம் கொண்டாட வேண்டும்.
இல்லாள் - இல் + ஆள்.
இல்லத்தை ஆள்பவள் என்று பொருள்.
இதற்கு நிகராக ஆண்களை ( கணவனை) குறிக்க சொல் இல்லை. அப்படி குறிக்க வேண்டும் என்றால் " இல்லான் " என்றுதான் சொல்ல வேண்டும். இல்லாளை இழந்தவனை " இல்லான் " என்று சொல்லலாம். ஆம், ஒன்றும் இல்லாதவன் என்று அவனைக் குறிப்பதற்கு " இல்லான் " என்று அவனைச் சுட்டுவது சரியாக இருக்கும்.
மனவலிமைதான் ஒருவனுக்கு பலம் என்றால், முதலில் மனைவியைப் போற்றுங்கள். மனம் என்றாலே அது மனைவி தானே. மனம் முழுவதும் நிரம்பியிருப்பவள் மனைவி தானே. அப்படியென்றால் ஒருவனுக்கு உண்மையான மனவலிமை மனைவி மட்டுமே.
மனைவியைப் போற்றுங்கள்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 166. மனைவியைப் போற்றுதும் ஆ.தி.பகலன்"
Post a Comment