"இதுவும் கடந்து போகும் "
சிதம்பரத்தில் உள்ள ஒரு
நண்பரைச் சந்திக்கச் சென்றபோது நடந்த நிகழ்வு இது.
செல்வ செழிப்பில்
வாழ்பவர்கள் வசிக்கும்
குடியிருப்பு பகுதி வழியே சென்று கொண்டிருந்தேன் . அந்த வீதியில்
கலைநயத்துடன் கட்டப்பட்டிருந்த ஓர் அழகிய வீட்டைப் பார்த்தேன். வீட்டின் நுழைவு வாயில் இரண்டு கதவுகளால்
மூடப்பட்டிருந்தது. முதல் கதவில் ஏதோ ஒரு சொற்றொடர் எழுதப்பட்டிருந்தது. அது என்னவென்று
அறிய அருகில் சென்று பார்த்தேன்.
" விதைத்தேன், அறுவடை செய்கிறேன் "
என்று எழுதி இருந்தது.
அதாவது, " நான் வாழ்வில் பல
துன்பங்களைக் கடந்து, கடினமாக உழைத்து
இந்த நிலையை அடைந்திருக்கிறேன். இது என் உழைப்புக்குக் கிடைத்த ஊதியம். என் உழைப்புக்குக் கிடைத்த பயனை இப்போது நான் அனுபவித்து வருகிறேன் " என்று
வீட்டின் உரிமையாளர் நம்மைப் பார்த்து
சொல்வதாக அந்தச் சொற்றொடர் இருந்தது.
இரண்டாவது கதவைப் பார்த்தேன். அதிலும் ஒரு
சொற்றொடர் இருந்தது.
" இதுவும் கடந்து போகும் "
" என்னுடைய
இந்த செல்வநிலை வாழ்க்கை,
நிலையானது அல்ல. இன்று என்னிடம்
இருக்கும் செல்வம் நாளை இல்லாமல்
போகலாம் . செல்வம் நிலையற்றது. வாழ்க்கை நிலையற்றது. ஓரு நொடியில் எல்லாம் மாறிப்
போகும். நாளையே இந்தச் செல்வநிலையை இழந்து
வறுமை நிலையை நான் அடையலாம் . எந்த நிலை
வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் பெற வேண்டும் " என்று
வீட்டின் உரிமையாளர் நம்மைப் பார்த்துச் சொல்வதாக அந்தச் சொற்றொடர் இருந்தது.
அறிவுச் செல்வம் இருப்பவர்களிடம் பொருட்செல்வம்
இருக்காது. பொருட்செல்வம் இருப்பவர்களிடம்
அறிவுச் செல்வம் இருக்காது என்பார்கள்.
அந்த இரண்டு செல்வத்தையும் பெற்ற மகா ஞானிதான் இந்த வீட்டில்
குடியிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். அந்த மகாஞானியை உள்ளன்போடு நினைத்து
வீட்டின் வெளியே இருந்து கைகூப்பி வணங்கிவிட்டு சென்றேன் .
வாழ்க்கையை இதைவிட சிறப்பாக யார் உணர்ந்து வைத்திருக்க முடியும்?
இனி யாராவது
புது வீடு கட்டினால் , அந்தப் புது வீட்டின் நுழைவு வாயில் கதவுகளில் இந்த இரு சொற்றொடர்களை எழுதி
வையுங்கள். நல்ல செய்திகளை நாளைய தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்.
" முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும்
முடிவில்ஒரு
பிடிசாம்பலாய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும்இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம்உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே
"
( பட்டினத்தார் பாடல் )
"மணிமுடி தரித்து பகை அரசர்களை எல்லாம் வென்று மண்ணுலகையே கட்டி ஆண்ட அரசனும் சரி,
ஒன்றும் இல்லாத ஆண்டியும் சரி வாழ்க்கை முடிந்து போனால், கட்டை மீது வைத்து உடலை எரித்த பின்பு முடிவில் ஒரு கைப்பிடி சாம்பல் மட்டுமே மிஞ்சும்.
இந்த உண்மை தெரிந்திருந்தும் இந்த நிலையில்லாத
வாழ்க்கையை விட்டுவிட்டு , இறைவன் மீதும்,
இயற்கையின் மீதும் பற்று கொண்டு இயற்கையின் வழியில் சென்று இம்மானுடப்
பிறப்பை மேன்மை பெறச்செய்ய வேண்டும் என்று நினைப்பார் இல்லையே? என்று
வருந்துகிறார் பட்டினத்தார்.
"மாற்றம் ஒன்றே இங்கு மாறாதது " என்பார்கள்.
அது முற்றிலும் உண்மை.
உங்களைச் சுற்றி நடக்கும் எந்தவொரு நிகழ்வையும் ,
உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் அதை கடந்து கொண்டுதான்
இருக்கிறீர்கள். இன்பமோ, துன்பமோ, நன்மையோ, தீமையோ எதுவும் இங்கு நிரந்தரம்
இல்லை. எல்லாம் மாறும் . இதுதான் நடக்கும். இதுதான் நிலைக்கும். இதுதான் கிடைக்க
வேண்டும் என்ற மனநிலைக்கு எப்போதும் நாம் வரக்கூடாது. அப்படி வந்தால் மனநிறைவு
என்பது நம் வாழ்க்கையில் எப்போதும் கிடைக்காது.
"இதுவும் கடந்து போகும் " என்ற உண்மையை
உணர்ந்து கொண்டவர்கள் மட்டுமே, தாங்கள் நினைத்ததை எல்லாம் அடைவார்கள். மாற்றத்தை
ஏற்றுக் கொள்பவர்கள் ஒருபோதும் ஏமாற்றத்தை அடைய மாட்டார்கள்.
இதுவே உண்மை.
" இதுவும் கடந்து போகும் "
கால வெள்ளத்தில்
உங்கள் கவலைகள் யாவும் கரைந்து போகும்!
நம்பிக்கையுடன் இருங்கள்.
நாளை
நல்ல நிலையில் இருப்பீர்கள்
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! 165. இதுவும் கடந்து போகும் ஆ.தி.பகலன்"
Post a Comment