தமிழ் அறிவோம்! 164. வஞ்சியார் கோ ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 164. வஞ்சியார் கோ ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!   164.  வஞ்சியார் கோ  ஆ.தி.பகலன்

   


"வஞ்சியார் கோ "
 

குறிப்பிட்ட காலத்தில் திரும்ப வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. ஒருவேளை அவன் தன்னை ஏமாற்றிவிட்டானோ என்று கலங்குகிறாள் தலைவி. தன் மனக்கவலையை எல்லாம் தோழியிடம் சொல்லி புலம்புகிறாள் தலைவி. 

" வஞ்சியேன் என்றுஅவன்தன் ஊர்உரைத்தான் யானும்அவன்

வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான்

வஞ்சியேன் வஞ்சியேன் என்றுஉரைத்தும்  வஞ்சித்தான்

வஞ்சியாய் வஞ்சியார் கோ. ( யாப்பருங்கலக் காரிகை) 

வஞ்சிக்கொடி போன்ற என் தோழியே! 

என் உள்ளம் கவர்ந்த தலைவனை நான் முதன் முறையாக பார்த்தபோது " வஞ்சியேன் " என்றான். " நான் சேர நாட்டின் தலைநகரான வஞ்சி நகரைச் சேர்ந்தவன் என்ற பொருளில்தான் அவன் சொல்லி இருக்கிறான். " வஞ்சியேன் " என்பதை  " வஞ்சிக்க மாட்டேன் " என்ற பொருளில் அவன் சொல்வதாக தவறாக நான்  புரிந்து கொண்டேன். 

அவன் என்னை ஏமாற்றமாட்டான் என்ற நம்பிக்கையில் அவனை விரும்பி ஏற்றுக் கொண்டேன். அவனையே திருமணம் செய்து கொள்வதாக வாக்கும் கொடுத்துவிட்டேன்.  

வஞ்சி நகரைச் சார்ந்த என் தலைவன் " வஞ்சியேன், வஞ்சியேன் " என பலமுறை சொன்னான். ஆனால், திரும்ப வருவதாகச் சொன்ன காலம் கடந்த பின்பும் இன்னும் அவன் இங்கே வரவில்லை. வாக்கு தவறிவிட்டானோ? என்னை வஞ்சித்துவிட்டானோ?  என்கிறாள் தலைவி. 

"வஞ்சியாய்"  என்ற சொல்லில் வருகின்ற வஞ்சி என்பது பெண்ணைக் குறிக்கும் சொல். அதாவது இங்கு தோழியைக் குறித்தது. " வஞ்சியேன் "  என்ற சொல் தலைவன் வஞ்சி மாநகரைச் சேர்ந்தவன் என்ற பொருளையும் , வஞ்சிக்க மாட்டேன் என்ற பொருளையும் தருகிறது. "வஞ்சியான் " என்ற சொல்லும் வஞ்சி நகரைச் சேர்ந்தவன் என்ற பொருளையும்,  வஞ்சிக்க மாட்டான் என்ற பொருளையுமே தருகிறது. " வஞ்சியேன் " என்ற சொல்லும் மேற்கண்ட இரு  பொருளையே தருகிறது. இவ்வாறு ஒரே சொல் பிரிவுபடாமல் நின்று பல பொருளைத் தருமானால் அது "செம்மொழி சிலேடை"   எனப்படும். . 

தலைவன் வஞ்சி நகரைச் சேர்ந்தவன் எனத் தன் ஊரைச் சொன்னான். அவன் வஞ்சியேன் என்றதால் வஞ்சிக்க மாட்டான் எனப் பொருள் கொண்டு தலைவி தலைவனுக்கு உடன்பட்டாள். ஆனால்,  வஞ்சி நகரைச் சேர்ந்த ( வஞ்சியார் கோ)  தலைவன், வஞ்சிக்க மாட்டேன், வஞ்சிக்க மாட்டேன் என்று சொல்லி  சொல்லியே வஞ்சித்து விட்டான். அதாவது,  வருகிறேன் என்று சொல்லி வராமல் ஏமாற்றிவிட்டான் என்று வஞ்சியாகிய  தோழியிடம் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள் தலைவி.  இதுதான்  கதை.  தெளிவாக புரிந்து விட்டதா? 

தமிழின் இனிமையே இனிமை!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)


0 Response to "தமிழ் அறிவோம்! 164. வஞ்சியார் கோ ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel