"வள்ளுவர் சமயம் "
இந்த உலகில்
எத்தனையோ மதங்கள் ( சமயங்கள்)
உண்டு. இந்த உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓர் நெறியில் வாழ வேண்டும் என்பதற்காக தனியொரு மனிதனால்
உருவாக்கப்பட்ட சமயம்தான்
" வள்ளுவர் சமயம் " .
இந்த சமயம் உருவானது தமிழ்நாட்டில் அன்று . இந்தச் சமயத்தை உருவாக்கியவர் தமிழரும் அல்லர் .
திருவள்ளுவரைக் கடவுளாகவும், திருக்குறளை மறை நூலாகவும் ஏற்றுக்கொண்டு, தற்போது 1 இலட்சம் மக்களுக்கு மேல் பின்பற்றும் " வள்ளுவர் சமயத்தை" உருவாக்கியவர் கேரளம் மாநிலத்தில் உள்ள மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த சிவானந்தர்.
மிகவும் ஏழ்மைமிக்கக் குடும்பத்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவர்தான் சிவானந்தர். இவர் குடும்பமே கிறித்தவ சமயத்தை பின்பற்றிய போதிலும் இவர் மட்டும் எந்தவித சமயப்பற்றும் இல்லாமல் இருந்தார் . 1974 ஆம் ஆண்டு பூப்பாறை என்ற ஊரில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் சிவானந்தர். அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வேலை செய்து வந்தார்கள். அங்கே தமிழர் ஒருவர் தேநீர் கடை நடத்தி வந்தார். அந்தக் கடையில் பெரிய படம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில் "உலகத்தைத் திருத்திய உத்தமர்கள் " என்ற தலைப்பிற்குக் கீழே இயேசு, திருவள்ளுவர், புத்தர் படங்கள் இருந்தன. இயேசுவையும் , புத்தரையும் ஏற்கனவே சிவானந்தருக்குத் தெரியும். தாடி மீசையோடு உட்கார்ந்திருந்த திருவள்ளுவரை அதுவரை அவர் பார்த்ததில்லை. அவர் யாரென்று கடைக்காரரிடம் கேட்டார். " அவர் பெயர் திருவள்ளுவர். அவர் எங்கள் தமிழ்நாட்டில் பெரிய புலவர். அவர் எழுதிய திருக்குறள் புகழ்பெற்ற நூல் " என்றார் கடைக்காரர்.
திருக்குறள் புத்தகத்தைத் தேடி ஆறு மாதமாக கடை கடையாக அலைந்தார். "வெண்ணிக்குளம் கோபால குழுவினர் " மலையாளத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகம் அவருக்குக் கிடைத்தது. அந்தத் திருக்குறள் புத்தகத்தைப் பலமுறை படித்தார். அவர் வாழ்வில் எதையெல்லாம் தேடினாரோ அவை எல்லாம் திருக்குறளில் இருப்பதை அறிந்தார். அந்த நேரத்திலேயே " திருவள்ளுவர்தான் தன் ஞான குரு, வழிகாட்டி " என முடிவு செய்தார். நாள்தோறும் திருக்குறளைப் படிக்க ஆரம்பித்தார் . திருவள்ளுவர் படத்தை வணங்கத் தொடங்கினார்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் திருவள்ளுவரைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் பரப்புரை செய்தார் சிவானந்தர். முதலில் அவர் குடிப்பதையும், ,புலால் ( அசைவம்) உண்பதையும் ஒதுக்கினார். அவரைப் பின்பற்றி மற்றவர்களும் மாறத் தொடங்கினார்கள் . வள்ளுவர் சமயத்தை ஏற்றுக் கொண்டவர்கள் புலால் உண்ணக் கூடாது. மது, புகையிலை பயன்படுத்தக் கூடாது. பொய், களவு செய்யக் கூடாது என்று வலியுறுத்தினார். அதை அனைத்தையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
1979 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் நாளில், கேரளம் மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சேனாபதி என்ற ஊரில் திருவள்ளுவருக்காக முதன்முதலில் கோவில் கட்டினார். திருவள்ளுவரை " பகவான் ஆதி திருவள்ளுவர் " என்றும், கோவிலை " பகவான் ஆதி திருவள்ளுவர் ஞான மடம் " என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள். கேரளத்தின் எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட ஊர்களில் திருவள்ளுவருக்கு " ஞான மடம் " அமைத்து திருவள்ளுவரை கடவுளாக வழிபடுகிறார்கள்.
திருவள்ளுவரை நாடி வந்த அனைவரும் ஒடுக்கப்பட்ட மக்கள். எப்போதும் சாராயம், கள்ளு, அசைவ உணவு என்று வாழ்ந்தவர்கள், வள்ளுவர் சமயத்தை ஏற்றுக் கொண்டபின் அனைவரும் சைவ உணவுக்கு மாறிவிட்டார்கள். பல்லாயிரம் இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்கிறார்கள். "வள்ளுவர் சமயம் " மிகப்பெரிய சமூக மாற்றம் ஏற்படுத்தியது. இதனால் " ஞான மடங்களின் எண்ணிக்கையும் , ஞான மடத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தது. இதை மற்ற சமயவாதிகளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மாற்று சமயத்தவர்களால் மடங்கள் உடைக்கப்பட்டன. மலையாள ஆர்வலர் பலர் " தமிழ்நாட்டுக் கவிக்குக் கேரளாவில் கோவிலா? " என்று கொதித்தனர். " இன்றைக்கு நீங்கள் வணங்கும் கடவுள் எல்லாம் இந்த மண்ணில் பிறந்தவர்களா? எங்கெங்கோ இருந்து வந்தவர்களை எல்லாம் கடவுளாக ஏற்றுக் கொண்ட நீங்கள் எங்களைக் குறை சொல்லாதீர்கள் " என்று பதலடி தந்தார் சிவானந்தர்.
ஓவ்வொரு ஞான மடத்துக்கும் ஒரு மடபதி ( வழிகாட்டி ) உண்டு. அவரே மடத்தை வழிநடத்துவார். சிவப்பு வேட்டி, பச்சை மேலங்கி இதுவே மடபதியின் சீருடை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திங்கள் 10 ஆம் நாளில் ஞான மடங்களின் ஆண்டு விழா பண்பாட்டு எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. அதிகாலையில் செண்டை மேளங்கள் முழங்க கொடியேற்றப்படும். பச்சை நிறக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம். இதுதான் வள்ளுவர் சமயத்தின் கொடி. வள்ளுவரையும், திருக்குறளையும் போற்றி 300க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி தொகுத்துள்ளார்கள்.
எல்லா விழாக்களிலும் இதைத்தான் பாடுவார்கள்.
ஞான மடத்தில் நடைபெறும் திருமணங்களில் தாலி இல்லை.
மோதிரம் மாற்றுவதும் இல்லை. மடத்தில் இருக்கும் திருமணப் பதிவேட்டில் பதிவு
செய்வர். பெற்றோரும், மடபதியும் வாழ்த்த,
இல்லறவியல் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்கள் ஓதப்படும். திருவள்ளுவரை
சாட்சியாக வைத்து திருமணத்தை நடத்துவர்.
இறந்தவர்களை அடக்கம் செய்ய தனி இடுகாடு உண்டு .ஞான மடத்தில் உடலை வைத்து நிலையாமை பற்றிய குறள்களை ஓதி, இறப்புப் பதிவேட்டில் பதிவு செய்தபின் புதைக்கிறார்கள். திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் இந்த உலகில் வேறு யாரும் தராத அங்கீகாரத்தைக் கொடுத்து வருகிறது கேரளம்.
தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சமயம்
" வள்ளுவர்
சமயம் "
வையம் எங்கும் பரவட்டும்
" வள்ளுவர் சமயம் "
அப்படி வையம்
எங்கும் பரவினால் தமிழர்க்கென்று
தனி நாடுகள் பல அமையும்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to " தமிழ் அறிவோம்! 163. வள்ளுவர் சமயம் ஆ.தி.பகலன்"
Post a Comment