தமிழ் அறிவோம்! 162. எல்லார்க்கும் பெய்யும் மழை ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 162. எல்லார்க்கும் பெய்யும் மழை ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!   162.  எல்லார்க்கும் பெய்யும் மழை ஆ.தி.பகலன்

 


"எல்லார்க்கும் பெய்யும் மழை "
 

"ஊரில் எங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால்தான் மழையே பெய்கிறது " என்று சிலர் கூறுவதை அடிக்கடி நாம் கேட்டிருப்போம்.  மழை பெய்வதற்கும், நல்ல மனிதர்கள் இருப்பதற்கும் தொடர்பு உண்டா? என்றால் உண்டு என்கிறார் ஔவையார். 

" நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை. ( மூதுரை - 10) 

உழவர்கள் தங்கள் நெற்பயிர் செழித்து வளர்வதற்காகத் தண்ணீர் இறைத்து ஊற்றுகிறார்கள்.  நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் வாய்க்கால் வழியே  சென்று பக்கத்தில் உள்ள புல்லின் மீதும் கசிகிறது. அந்த புல்லையும் நன்கு வளரச் செய்கிறது. 

அதுபோல, பழமை வாய்ந்த இந்த உலகில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காக அவர் பொருட்டு  பெய்யும் மழையால் மற்றவர்களும் அதில் பலன் அடைவார்கள்.

நல்லோர் இருப்பதாலே நாட்டில் நல்ல மழை பெய்கிறது என்பதை இதன்மூலம் அறியலாம். 

ஒர் ஊரில் ஆயிரம் பேர் வசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 999 பேர் கெட்டவர்கள். ஒரே ஒரு நல்லவர்தான் இருக்கிறார். அப்போது மழை என்ன நினைக்கிறது என்றால் ஒருவரைத் தவிர எல்லோரும் கெட்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் ஏன் இந்த ஊருக்கு நாம்  பெய்ய வேண்டும்? பெய்யாமல் இருப்போம் என்று நினைக்குமாம். 

 உடனே அந்த ஊரில் இருக்கும் ஒரே ஒரு நல்லவன்  மழையைப் பார்த்து, " நான் என்ன தவறு செய்தேன்?  நான் கடைசிவரை நல்லவனாகத்தானே இருக்கிறேன். அதுதான் நான் செய்த குற்றமா? எல்லோரும் கெட்டவர்களாக இருக்கிறார்கள்.  அவர்களைப் போல இல்லாமல் நான்  நேர்மையாக வாழ்வதற்கு

நீ எனக்கு கொடுக்கும் தண்டனையா இது?  மற்றவர்கள் செய்த குற்றங்களுக்காக நானும் துன்பத்தை அனுபவிக்க வேண்டுமா?  என்றெல்லாம் கேள்வி கேட்டானாம். 

பதிலற்று நின்றது மழை. அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தது மழை.  இந்த உலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு  எல்லோர்க்கும் பெய்ய வேண்டும். அதுவே அறம். புல்லுக்கு போகிறதே என்று நினைத்துக் கொண்டு செல்லும் நீரை ,  வாய்க்கால் வழிமறித்தால் பயிர் எப்படி செழிக்கும்.  பயிர் இன்றி உலக உயிர்கள் எப்படி பிழைக்கும்.  ஆகவே,  நல்வர்களை மட்டுமே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். கெட்டவர்களை நினைத்து நல்லவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தால் , இந்த உலகில் ஒரு நல்லவர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். 

நல்லதே நினைப்போம்!

நல்லதையே செய்வோம்!

நல்லதே நடக்கும்!

எல்லோர்க்கும் பெய்யும் மழையைப் போல,  எல்லோர்க்கும்  நன்மையைச் செய்வோம். அப்போதுதான் மழை இருக்கும் இடத்தைப் போல நம் வாழ்க்கையும் உயர்ந்த இடத்தில் இருக்கும்!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

0 Response to "தமிழ் அறிவோம்! 162. எல்லார்க்கும் பெய்யும் மழை ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel