தமிழ் அறிவோம்! 161. திருக்குறளின் நாடு ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 161. திருக்குறளின் நாடு ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  161.  திருக்குறளின் நாடு ஆ.தி.பகலன்

 


"திருக்குறளின் நாடு "
 

தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி (1798 - 1832)  மன்னர் வட இந்தியாவின் பல இடங்களுக்கு பயணம் செல்லத் திட்டமிட்டார். அதன்படி 1820 ஆம் ஆண்டு தனது அரண்மனை அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், ஐம்பதுக்கும் அதிகமான ஓவியர்கள் உள்ளிட்ட 300 பேர் கொண்ட குழுவுடன் தஞ்சையில் இருந்து புறப்பட்டார். முதலில் காசிக்கு சென்றார். அதன்பின் வட இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கொல்கத்தா சென்றார்.  அப்போது  கொல்கத்தாவை ஆட்சி செய்த ஆங்கிலேய ஆளுநரான மார்க்கஸ் பிரபு அவர்கள்,  சரபோஜி மன்னரை அரச மரியாதையுடன் வரவேற்று தங்கும் வசதிகளைச் செய்து கொடுத்தார். மன்னர் வியக்கும் வகையில் விருந்தோம்பல் செய்தார். வேறு எந்த மன்னருக்கும் கிடைக்காத மரியாதை எல்லாம் தனக்கு மட்டும் கிடைக்கிறதே! என்ன காரணமாக இருக்கும்? என்ற ஐயம் சரபோஜி மன்னருக்கு ஏற்பட்டது. 

ஒருநாள் மார்க்கஸ் பிரபுவிடம் சென்று " ஐயா! தாங்கள் எனக்கு வியக்கத்தக்க வகையில் விருந்தோம்பல் செய்வதற்கான காரணம் என்ன? என்று கேட்டார் சரபோஜி மன்னர். அதற்கு அந்த ஆங்கிலேய ஆளுநர் " நீங்கள் திருக்குறளின் நாட்டில் இருந்து வந்திருக்கிறீர்கள். அந்த நூலைப் பற்றி உங்கள் வழியே முழுமையாக அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். அதனால்தான் தங்கள் மனம் மகிழும்படியாக மரியாதை செலுத்துகிறேன் " என்று ஒரு மாணவனைப் போல பணிவு காட்டினார். 

.ஆனால், திருக்குறள் என்ற வார்த்தையை அப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறார் சரபோஜி மன்னர். தன்னுடன் வந்த 300 பேருக்கும் திருக்குறள் பற்றித் தெரியாததால் நொந்துபோன அரசர் வெட்கத்தால் தலைகுனிந்தார். "நான் தஞ்சைக்குச் சென்றதும்  திருக்றள் பற்றி விரிவாக எடுத்துரைக்கும்  தகுந்த புலவர் ஒருவரை அனுப்பி வைக்கிறேன் " என்று கூறி ஒருவழியாக சமாளித்துவிட்டு தஞ்சை திரும்பினார். 

தஞ்சை திரும்பியதும் முதல் வேளையாக " சரசுவதி மகால் நூலகம் " சென்றார் . அங்கே திருக்குறள் சுவடியை எடுக்கும்படி காப்பாளரைக் கேட்டபோது " அது இல்லை " என்ற பதில் வந்தது. உடனே, தமிழ்ப் புலவர்களைச் சந்திக்க விரும்பி அவர்களை அழைத்துவரக் கட்டளையிட்டார் . ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் , எப்படி வாழக் கூடாது என்ற வாழ்விலக்கணமே 'திருக்குறள் ' என்று புலவர்கள் எடுத்துக்கூற 1330 குறட்பாக்களையும் அதற்கான பொருளையும் அறிந்து வியந்தார். இத்தனைச் செழுமையான தமிழ் மொழியில் உருவான சிறந்த படைப்புகள் அனைத்தையும்  முழுவதுமாக தெரிந்து கொண்டார் சரபோஜி மன்னர். 

தனது அதிகாரிகளை அழைத்து தமிழ்ச் சுவடிகள், நூல்கள் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கும்படி ஆணையிட்டார். தங்களிடம் உள்ள தமிழ் நூல்கள்,  ஓலைச்சுவடிகளை நூலகத்திற்குத் தருகின்ற பொதுமக்களுக்கு  தகுந்த அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இப்படிக் குவிந்த தமிழ்ச் சுவடிகளை மறுபடியும் புதிய ஓலைகளில் எழுத தமிழ் அறிஞர்களையும், புலவர்களையும் பணிக்கு அமர்த்தினார். நூலகத்தின் ஒரு பகுதியில் அச்சுக் கூடத்தையும் தொடங்கினார் . தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சரசுவதி மகால் நூலகத்தின் வளர்ச்சிக்காகவே ஒதுக்கினார். அரண்மனை நூலகமாக இது சுருங்கிவிடக்கூடாது அன்னைத் தமிழின் சொத்துகளைப் பாதுகாக்கும் பெட்டகமாக இந்நூலகம் இருக்க வேண்டும் என்று விரும்பினார் .. 

தஞ்சை அரண்மனை வளாகத்தில் செயல்பட்டுவரும் இந்நூலகம், ஒரு சில கல்வெட்டு ஆதாரங்களின்படி 1122 ஆண்டு சோழர்கள் காலத்தில் "சரசுவதி பண்டாரகம் " என்ற பெயரில்  தொடங்காப்பட்டதாக அறியப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட இந்நூலகம், தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களாலும், மராட்டிய மன்னர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இறுதியில், இரண்டாம் சரபோஜி மன்னரால் செறிவூட்டப்பட்டது. இவர் சேவையை நினைவுகூறும் வகையில் இந்நூலகத்திற்கு "சரபோஜி சரசுவதி மகால் நூலகம் " எனப் பெயர் சூட்டப்பட்டது. தஞ்சை மராட்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள், 1918 ஆம் ஆண்டு இந்நூலகத்தைத் தமிழக அரசிடம் ஒப்படைத்தனர்.  அன்றுமுதல் பொது நூலகமாக செயல்பட்டு வருகிறது. 

ஆசியாக்கண்டத்திலேயே  பழமையான நூலகமாகப் போற்றப்படும் இந்நூலகத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள நூல்கள் இருக்கும் நூலகமாக விளங்குகிறது. மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் ஓலைச்சுவடிகள் இங்கு உள்ளன. அவற்றில் வெறும் 50 ஓலைச்சுவடிகள் மட்டுமே படியெடுக்கப்பட்டுள்ளன. அவைதான் சங்க இலக்கியமாகவும், காப்பிய இலக்கியமாகவும்,  திருக்குறள் உள்ளிட்ட நீதி இலக்கியமாகவும் நமக்குக் கிடைத்துள்ளன. மீதமுள்ள ஓலைச்சுவடிகளை எல்லாம் படியெடுத்தால் நமக்கு இன்னும் எண்ணற்ற திருக்குறளும், நீதி இலக்கியங்களும் கிடைக்கும்.  அனைத்து ஓலைச்சுவடிகளையும் படியெடுக்கும்போது தமிழ் மொழியின் முழு அறிவுச்செல்வத்தையும் இந்த உலகம் அறியும். அன்று அளவில்லாப் புகழை நம் தமிழ் மொழி அடையும். 

திருக்குறளால்தான்  தஞ்சை சரசுவதி மகால் நூலகம் அழியாப் புகழைப் பெற்றது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறளைக் கற்று நாமும் அழியாப் புகழை அடைவோம். " திருக்குறள் நாடு " எனும் புதியதோர் நாட்டை நாம் உருவாக்குவோம்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

 

0 Response to "தமிழ் அறிவோம்! 161. திருக்குறளின் நாடு ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel