தமிழ் அறிவோம்! 160. விருந்து போற்றுதும் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 160. விருந்து போற்றுதும் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  160.   விருந்து போற்றுதும்  ஆ.தி.பகலன்

 


"விருந்து போற்றுதும் "
 

"விருந்து " என்றாலே அறுசுவை உணவோ , விழாக்களில் அளிக்கப்படும் உணவோ, உறவினர் வீட்டில் அளிக்கப்படும்  உணவோ அல்ல.

"புதிய உறவுகளே உண்மையான விருந்து " ஆகும். 

 விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு,  விருந்தினர் வேறு. 

நம் வீட்டிற்கு வரும் முன்பின் அறியாத புதியவர்களே விருந்தினர் ஆவர்.

" விருந்தே புதுமை " என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.  அன்றைய காலத்தில் வழிப்போக்கர்களே விருந்தினராகப் போற்றப்பட்டனர். கால மாற்றத்தால் நாகரிகம் என்னும் பெயரால்,  வழிப்போக்கர்களுக்கு விருந்தளிப்பது மறைந்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மட்டுமே விருந்தளிக்கும் நிலையைத்தான் இன்று காண முடிகின்றது. 

தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும், இருக்க இடமும் கொடுத்து அவர்களிடம் அன்பு பாராட்டுவதே " விருந்தோம்பல் " எனப்படும். 

" விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

ஒழுக்கமும் வழிபடும் பண்பே " ( காசிக்காண்டம் - இல்லொழுக்கம் - 17) 

1.விருந்தினராக ஒருவர் நம் வீட்டிற்கு வந்தால் அவரை வியந்து உரைத்தல்.

2.நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்.

3.முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்.

4. 'வீட்டிற்குள் வருக என்று வரவேற்றல்.

5. விருந்தினர் எதிரே நிற்றல்.

6. அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல்.

7. அவர் அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல்.

8. அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல்.

9. விருந்தினரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்

ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும். 

" காலின் ஏழடிப் பின் சென்று " ( பொருநராற்றுப்படை - 166) 

பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும்போது , அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். மேலும்,  வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர். 

விதவிதமாக உண்டு மகிழ்வதை விருந்தென்றும்,  நம்மோடு கூடி மகிழும் உறவினர்களையும் , நண்பர்களையும் விருந்தினர் என்றும் எண்ணுவதை அடீயோடு நிறுத்துவோம்.

வாழ வழிதேடி வருபவர்களும்,  வயிற்றுப் பசியோடு வருகின்ற வழிப்போக்கர்களுமே உண்மையான விருந்தனர்கள்.  அவர்களின் பசியை ஆற்றுவிப்பதே உண்மையான விருந்தோம்பல். 

" வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து. ( குறள் - 221 ) 

"வறியவர்களுக்கு ஒரு  பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படும். மற்றவர்க்குக் ( உறவினர், நண்பர்கள்)  கொடுப்பது எல்லாம் அவர்களிடம்   பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது " என்கிறார் திருவள்ளுவர் . 

ஒரு மனிதனும் இன்னொருவன் வீட்டின் படியேறி உதவியோ, உணவோ கேட்கிறான் என்றால் அதற்குக் காரணம் அவன் வறுமையும், வயிற்றுப் பசியும்தான். அப்படிப்பட்ட மனிதர்களை ஒருபோதும் புறம்தள்ளாதீர்கள். நீங்கள் அன்போடு கொடுக்கும் கைப்பிடி உணவுதான் அவர்களுக்கு அறுசுவை விருந்து என்பதை மறவாதீர்கள்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

 


0 Response to "தமிழ் அறிவோம்! 160. விருந்து போற்றுதும் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel