"தமிழ்ப் பல்கலைக்கழகம் "
உலக வரலாற்றில் ஒரு மொழிக்காக, ஒரு மொழியின்
பெயரில் கட்டப்பட்ட முதல்
பல்கலைக்கழகம், தஞ்சாவூரில் அமைந்துள்ள
" தமிழ்ப் பல்கலைக்கழகம்தான் . தஞ்சாவூர் - திருச்சி சாலையில் 972.7 ஏக்கர்
நிலப்பரப்பில் அமைந்துள்ளது இப்பல்கலைக்கழகம்
.தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாடு ஆகியவற்றின் முதன்மையான உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது இப்பல்கலைக்கழகம் தமிழுக்கென்று . தனிப் பல்கலைக்கழகம் வேண்டும் என்று 1922 ஆம் ஆண்டில் வேண்டுகோள் விடுத்தார் "தமிழவேள்" உமாமகேசுவரனார் ' 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார் அப்போதைய தமிழக முதல்வர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். உடனடியாக அதற்கான குழு ஒன்றை, ம.பொ.சிவஞானம், வ.சு.ப.மாணிக்கனார், சாலை இளந்திரையனார், கி.ஆ.பெ. விஸ்வநாதன் ஆகிய அறிஞர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டது. அனைவரது பெருமுயற்சியினால் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் "தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கலைப்புலம், அறிவியல் புலம், மொழிப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் ஐந்து
புலங்களுக்கும் ஐந்து கட்டடங்கள்
எழுப்பப்பட்டுள்ளன. அந்த ஐந்து
கட்டடங்களும் "தமிழ்நாடு " என்ற சொல்லின் எழுத்துகளைப் போன்று வடிவமைக்கப்பட்டு
இருக்கிறது . அதாவது, " த, மி, ழ்,
நா, டு என ஒவ்வொரு எழுத்துகளின் வடிவமைப்பில் ஒவ்வொரு கட்டடமும்
எழுப்பப்பட்டுள்ளன.
'த' வடிவக் கட்டடத்தில் கலைப்புலமும், ' மி' வடிவக் கட்டடத்தில் அறிவியவ் புலமும், 'ழ்' வடிவக் கட்டடத்தில் மொழிப்புலமும், ' நா' வடிவக் கட்டடத்தில் சுவடிப்புலமும், 'டு' வடிவக் கட்டடத்தில் வளர்தமிழ்ப் புலமும் செயல்பட்டு வருகின்றன. வானத்தில் ( வான்வெளி) இருந்து பார்த்தால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள் " தமிழ்நாடு " எனத் தெளிவாகத் தெரியும் வண்ணம் மிக அழகாகக் கட்டப்பட்டுள்ளன. உலகில் வேறு எந்த மொழிக்கும் கிடைக்காத இத்தகைய தனிச்சிறப்பு நம் தமிழுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
1. கலைப்புலம்
பழங்கலை வடிவங்களை அவற்றின் மரபு , சுய அமைப்பு, தூய்மை கெடாது பாதுகாத்தல், புது உத்திகள் கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல் முதலிய விரிவான அடிப்படை நோக்கம் கொண்டது இப்புலம் . இப்புலத்தின்கீழ் சிற்பத்துறை, இசைத்துறை, நாடகத்துறை ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டு வருகின்றன.
2. அறிவியல் புலம்
பழந்தமிழரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மரபுச் செல்வங்களைத் தேடிக் கண்டு அதை தொகுத்தல், ஆய்வு செய்தல், மற்றும் இக்கால நவீன தொழில்நுட்ப நுணுக்கங்களின் துணைகொண்டு பயன் காணல் முதலான நோக்கங்களைக் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் சித்த மருத்துவத்துறை, தொல்லறிவியல் துறை, தொழில் மற்றும் நில அறிவியல் துறை, கட்டடக்கலைத்துறை, கணிப்பொறி அறிவியல் துறை, சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை ஆகிய ஆறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
3. மொழிப்புலம்
இலக்கிய ,இலக்கண ஆராய்ச்சிகளை வளர்ப்பது , தமிழ் இலக்கியப் படைப்புகளை உரிய முறையில் உலகிற்கு அறிமுகப்படுத்துவது ஆகிய அடிப்படை நோக்கங்களைக் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் இலக்கியத்துறை, மொழியியல் துறை, மெய்யியல் துறை, பழங்குடி மக்கள் ஆய்வு மையம், நாட்டுப்புறவியல் துறை, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி ஆகிய ஆறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
4. சுவடிப்புலம்
தமிழ்ப் பணிக்கு அடிப்படையாக அமையும் ஓலைச்சுவடிகள் ,
அரிய கையெழுத்துச் சுவடிகள், கல்வெட்டுச் சான்றுகள் முதலியவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்துப் பாதுகாத்தல்
மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய நோக்கம் கொண்டது இப்புலம்.
இப்புலத்தின்கீழ் ஓலைச்சுவடித்துறை , அரிய கையெழுத்துச் சுவடித்துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை , கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை ஆகிய நான்கு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
5. வளர்தமிழ்ப்புலம்
பலஙிடங்களில் வாழ்ந்து வரும் தமிழர்களின் தேவையை
நிறைவேற்றும் வகையில் விரிவான அடிப்படையில் பலதுறை சார்புடையதாக ஆய்வு அமைய
வழிசெய்தலை நோக்கமாகக் கொண்டது இப்புலம்.
இப்புலத்தின்கீழ் அயல்நாட்டுத் தமிழ்க்கல்லித்துறை, மொழிபெயர்ப்புத்துறை , அகராதியியல் துறை, சமூக அறிவியல் துறை, அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, கல்வியியல் மற்றும் வேளாண்மையியல் துறை ஆகிய ஆறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
இப்படி பலவகையில் தமிழ் வளர அருந்தொண்டாற்றி வருகிறது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்.
அன்று
சங்கம் வைத்து
தமிழ் வளர்த்தது பாண்டியனின் தலைநகரம் மதுரை!
இன்று
தமிழ்ப் பல்கலைக்கழகம் வைத்து தமிழ் வளர்க்கிறது சோழனின்
தலைநகரம் தஞ்சாவூர்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! 159. தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆ.தி.பகலன்"
Post a Comment