தமிழ் அறிவோம்! 158. ஒப்பிலா ஓகக்கலை ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 158. ஒப்பிலா ஓகக்கலை ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!   158.   ஒப்பிலா ஓகக்கலை  ஆ.தி.பகலன்

 


"ஒப்பிலா ஓகக்கலை"
 

ஓகம் என்றால் , ஒன்று மற்றொன்றுடன் இணைதல், கலத்தல், ஒன்றுதல் என்பது பொருளாகும்.

இரண்டாகப் பிரிந்து கிடப்பவற்றை  ஒன்றாக இணைப்பதே " ஓகக்கலை "

இரண்டாகப் பிரிந்து கிடக்கும் நம் உடலையும், உள்ளத்தையும் ஒன்றிணைக்க சித்தர்கள் கையாண்ட வழியே ஓகக்கலை. 

பொறி, புலன்கள் , மனம் முதலிய கரணங்கள் போன்றவற்றால் அமைந்த மெய்க்கூறுகளின்வழி  வெளிமுகமாக உயிர்ப்பையும், ஆற்றலையும் வீணடிக்காமல்  உள்முகமாகத் திருப்பி ஒருக்குவதே " ஓகம் " . அங்குமிங்கும்  அலை பாயும் மனதை அலையாமல்  ஒருமுகமாக நேர்வழிப்படுத்தும் செயலே ஓகம்.

ஓகம் என்ற சொல்லே திரிக்கப்பட்டு  " யோகா " என்றானது. 

இன்று "யோகா " என்றாலே ஏதோ பதஞ்சலி முனிவர்தான் முதன்முதலில்  கண்டறிந்ததாகவும்,  யோகா பற்றிய எல்லாச் செய்திகளும் வடமொழியில் மட்டுமே இருப்பதாகவும் இங்கு பலர் வாயால் வடை சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.  

பருத்தி விற்பவனும்,

பஞ்சு மிட்டாய் விற்பவனும் ஒன்றா?

பருத்தியிலும் பஞ்சு இருக்கிறது. பஞ்சு மிட்டாயிலும் பஞ்சு இருக்கிறது என்றால் அது உண்மை ஆகுமா? 

தமிழர் கலைகளை எல்லாம் வாடகைக்கு எடுத்து வைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள் வடமொழிக்கு வால் பிடிப்பவர்கள். அவர்கள் சொல்லும் கதைகளை எல்லாம் புறம் தள்ளுங்கள். 

நோன்பியர் எனப்படும் தவ முனிவர்கள் கைகளை ஊன்றிக்கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தது பற்றி நற்றிணை (பாடல் எண் -22) குறிப்பிடுகிறது. இதனை அது கையூண் இருக்கை என்று குறிப்பிடுகிறது. தினைப்புனத்தில் விளைந்திருக்கும் தினைக் கதிரைக் கிள்ளிச் சென்ற குரங்கு ஒன்று அதிலுள்ள தினைகளைக் கைளால் ஞெமிடி வாயில் அடக்கிக் கொண்டிருந்தக் காட்சி , நோன்பியர் கையூண் இருக்கை போல் இருந்ததாம். இதனையே  " உயிர்ப்புப் பயிற்சி " என்பர் . 

பதினெண் சித்தர்களில் முதன்மையானவராக வைத்துப் போற்றப் படுபவர் திருமூலர். ஓகக்கலையை உச்சம்  தொட வைத்தவர் திருமூலரே. ஓகக்கலை பற்றி அவர் பாடல்வழிக் காண்போம். 

" இயம நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணயா மம்பிரத்தி யாகாரம்

சயமிகு தாரணை தியானம் சமாதி

அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே " (திருமந்திரம் - 552) 

"தீதகற்றல் (இயமம்), நன்றாற்றல் (நியமம்), இருக்கை (ஆசனம்) , உயிர்வளிநிலை (பிராணாயாமம்) ,தொகைநிலை (பிரத்தியாகாரம்) ,பொறைநிலை (தாரணை),  ஊழ்கம்  (தியானம்) , நொசிப்பு (சமாதி)  ஆகியவை நல்வினையோர்க்குக்  கிட்டும் எண்வகை உறுப்புகளைக் கொண்ட ஓக நெறியாகும்"  என்று ஓகக்கலை பற்றி விளக்குகிறார் திருமூலர். 

ஆதனம் (ஆசனம்)  என்ற சொல்லுக்கு இருக்கை என்பது பொருள். உடலை ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிப்பதே ஓக இருக்கை (யோகாசனம்) ஆகும். 

"கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்

நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய

வல்லான் பகுத்துண்பான் மாசிலன் கள்காமம்

இல்லான் இயமத்து இடையில்நின் றானே" ( திருமந்திரம் - 554) 

கொல்லாமை,  பொய் கூறாமை, களவு செய்யாமை, எண்வகை நற்குணம் கொண்டிருத்தல்,  நல்லவனாக இருத்தல்,  அடக்கம் உடையவனாய் இருத்தல்,  நடுவுநிலையை பின்பற்றுதல் , வல்லவன் ஆதல், பகுத்துண்ணுதல், குற்றமற்றவனாய் இருத்தல், கள் உண்ணாமை , காமம் இல்லாமை போன்ற ஒழுக்க நெறியை உடையவனே தீதகற்றல் ( யமம்) ஓகம் கைவரப் பெற்றவன் ஆவான்.

ஓகக்கலை என்பது உடலும், மனமும் மட்டும்  சார்ந்ததன்று. ஒழுக்கத்தையும் சார்ந்தது என்கிறார் திருமூலர்.   

சித்தர்கள் ஓகக்கலையை இருவகையாகக் குறிப்பிடுகிறார்கள். 

1. உடல்வளர் கலை (அத யோகம்) 

இது உடற்பயிற்சி செய்யும் ஓகமாகும். இப்பயிற்சி மூலம் எளிய மக்கள்  தங்கள் உடற்பிணிகளை நீக்கி உடலை வலிமைப்படுத்திக் கொள்ளலாம். இது  சித்தர்களால் ஆய்வு செய்து வழங்கப்பட்டவை ஆகும்.

2. மனவளக்கலை (இராச யோகம்)

மனம் சார்ந்த பயிற்சி யைத் தருவதே மனவளக்கலை ஆகும். 

தமிழர்களின் ஓகக்கலையானது,  அறிவியலையும், அறவொழுக்கத்தையும் ஒன்றிணைத்துக் கூறுகிறது. தமிழர்களின் தொன்மைக்கும்,  பண்பாட்டுச் சிறப்பிற்கும், அறிவியல் மேன்மைக்கும் நிலைக்கலனாக நிற்பது ஓகக்கலை.  உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் , உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த " ஓகக்கலை " 

ஓகக்கலையைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்த முதல் மனித இனம் தமிழினம்தான். 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவெளிப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் பயன்படுத்திய பசுபதி முத்திரையே ஓர் ஓக முத்திரை ஆகும். 

பழந்தமிழரின் கலையான ஓகக்கலையை எந்நாளும்  பாதுகாப்போம்.  

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

0 Response to "தமிழ் அறிவோம்! 158. ஒப்பிலா ஓகக்கலை ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel