"இருவேறு உலகத்து இயற்கை "
"நல்ல அறிவாளி . அவனுக்கு தெரியாதது ஒன்றுமே இல்லை
. இருந்தும் என்ன பயன் ? கையில் பத்து பைசா கூட இல்லாமல் இருக்கிறான் . பிழைக்கத்
தெரியாதவன்" என்று ஒரு சிலரைப் பார்த்து பொதுமக்கள் புலம்புவது உண்டு .
அது ஏன் தெரியுமா?
அதற்கான விளக்கத்தை வள்ளுவரே தருகிறார் .
" இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதல் வேறு. (குறள் - 374)
இந்த உலகத்தின் இயற்கையானது இருவேறு வகைப்படும். செல்வம்
உடையவராய் இருத்தல் வேறு. அறிவுடையவராய் இருத்தல் வேறு. செல்வம் உடையவர்கள்
அறிவைச் சேர்க்க மாட்டார்கள். அறிவு உடையவர்கள் செல்வத்தைச் சேர்க்க மாட்டார்கள்.
இருவருமே இருவேறு திசையில்தான் எப்போதும் இருப்பார்கள்.
என்னே! ஓர்
அருமையான விளக்கம்.
இந்தக்
குறட்பாவுக்குப் பொருத்தமான பாடல் ஒன்றைப் பார்ப்போம்.
"கவியரசர்" கண்ணதாசன் திரையிசைப் பாடல்கள்
மூலமாக திசையெட்டும் அறியப்பட்டவர். தமிழ்ப்புலமையும், தமிழ்ப்பற்றும் மிக்கவர் .
சிங்கப்பூரில்
நடந்த விழா ஒன்றிற்கு கவியரசர் கண்ணதாசனை அழைத்திருந்தார்கள் . நிகழ்ச்சி தொடங்கி
நீண்ட நேரம் ஆகியும் கண்ணதாசன் வரவில்லை.
மக்கள் பொறுமை இழந்தார்கள். அவையை விட்டு வெளியேற நினைத்தார்கள் . அப்போது
கண்ணதாசன் உள்ளே வந்தார் . மக்களின் மன வேதனையை அறிந்து பேச ஆரம்பித்தார் .
சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்தவ மதம் பிடிக்கும். சிலருக்கு இசுலாமிய மதம் பிடிக்கும். எனக்கு பிடித்த மதம் . "தாமதம் " என்றார். கைதட்டல் விண்ணைப் பிளந்தது. இப்படிப்பட்ட
தமிழ்ப்புலமை பெற்ற கண்ணதாசன் அவர்கள்,
தன் தமிழ்ப்பற்றை எடுத்துக்
காட்டும் பாடலைக் காண்போம்.
"தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே!
வேண்டுகின்ற
போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே!
உன்னைத் தவிர
உலகில் என்னைக் காக்க
பொன்னோ! பொருளோ!
போற்றி வைக்க வில்லையம்மா!
"தோண்டுகின்ற பொழுதெல்லாம் ஊற்றைப்போல் சுரக்கின்ற செந்தமிழே!
தேவைப்படும் பொழூதெல்லாம் விளைகின்ற முத்தே! உன்னை அன்றி இவ்வுலகில் என்னைக் காக்க வேறு பொன்னையோ பொருளையோ சேர்த்து வைக்கவில்லை!
தமிழே! நீயே என்னைக் காத்திடுவாய் அம்மா " என்று
தமிழை வேண்டுகிறார் கண்ணதாசன்.
இனி கையில் காசு இல்லாதவனைப் பார்த்து யாரும்
கவலைப்படாதீர்கள்.
அவர்கள் அறிவோடு இருப்பவர்கள். அன்னைத் தமிழோடு இருப்பவர்கள்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! 157. இருவேறு உலகத்து இயற்கை ஆ.தி.பகலன்"
Post a Comment