" வாழையடி வாழையாக "
"இருக்கின்ற மரங்களில் மணமிக்க மரமாகவும்,
விலைமதிப்பற்ற மரமாகவும் இருந்து என்ன பயன்? நான் உயிரோடு இருக்கும் வரை என்னை யாருமே கண்டு கொள்வது
இல்லை. நான் இறந்த பின்புதான் என் கட்டையை வைத்துக் கதை சொல்வார்கள். காசு பார்ப்பார்கள். நான் உயிரோடு உள்ளவரை என்னை யாரும் நெருங்க
முடியாத வகையில் என்னை பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே வைத்திருக்கிறார்கள். என் தோற்றம் எப்படி இருக்கும் என்று கூட
நாட்டில் பலருக்கு தெரியாது. ஆனால், மிகவும் குறைவான விலைக்கு விற்பனை ஆகக் கூடிய
உன்னை மட்டும் எப்படி எல்லோரும் கொண்டாடுகிறார்கள். எல்லா விழாக்களிலும் உனக்கு மட்டுமே முதல்
மரியாதை தருகிறார்களே அதற்கு என்ன காரணம்? என்று வாழை மரத்தைப் பார்த்துக்
கேட்டதாம் சந்தன மரம்.
" நீ இறந்த பின்புதான் எல்லோர்க்கும் பயன்
தருகிறாய். அதுவும் ஒரு சிலருக்கு
மட்டுமே. நான் அப்படி இல்லை. நான் வாழும் காலம் முழுவதும் பயன்படுகிறேன்.
அதுவும் எல்லா மக்களுக்கும் பயன்படுகிறேன். பூ,காய், கனி, இலை, தண்டு, நார் என்று என் உடல் பாகங்கள் எல்லாமே எல்லோர்க்கும் பயன்படுகிறது. ஒருவர் ஈட்டும் பணத்தை வைத்து அவரின் மதிப்பை
யாரும் தீர்மானிப்பதில்லை. ஒருவர் மற்றவர்களுக்கு பயன்தரும் விதத்தை வைத்துத்தான்
அவரின் மதிப்பைத் தீர்மானிக்கிறார்கள். அதனால்தான் எல்லோரும் என்னை மதிக்கிறார்கள்
" என்றது வாழைமரம்.
வாழையின் பயன்களும் அதிகம். வாழையைப் போற்றும்
பழமொழிகளும் அதிகம். அதில் ஒன்றுதான்
" வாழையடி வாழையாக " என்ற பழமொழி. " வாழையடி வாழையாக "
என்று வாழ்த்துவது கூட நாம் தலைமுறை தலைமுறையாக வாழையைப் போல மற்றவர்களுக்குப்
பயன்தந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
" வாழையடி வாழையாக " நம் குலம் தழைத்து
வாழவேண்டும் என்பதற்காக, வாழைமரம் தன்னைச்
சுற்றி நிறைய வாழைக்கன்றுகளை உருவாக்குவதைப் போல நிறைய குழந்தைகளைப் பெற்றுக்
கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் தலைமுறை செழிக்கும் என்று தவறாக பொருள்
கொள்கின்றனர். அந்தக் காலத்தில் மக்கள்தொகை குறைவாக இருந்தது. போர்களாலும், இயற்கை
பேரிடர்களாலும் உயிரிழப்பு அதிக அளவில் இருந்தது. அதை ஈடு செய்யவே அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக்
கொள்வதில் ஆர்வம் காட்டினர். இன்று அந்தக் கொள்கை பொருந்தாது.
வாழைமரம் ஒரு விதையற்ற தாவரமாகும். அதாவது விதைகள்
மூலமாக தன் இனத்தை உருவாக்கவில்லை.
வாழையின் வேர்த்தண்டு முடிச்சு தரையில் படர்ந்து சென்று அதற்கு மேலே புதிய
வாழைக்கன்றுகளை உருவாக்குகின்றன. விதையற்ற தாவரமான வாழையின் வாழ்க்கை சுழற்சி
" தலைமுறைகளின் மாற்று" என்பதைக் காட்டுகிறது. அதாவது வாழை
விதையில்லாமல் தன் தலைமுறையைப் பக்கவாட்டு வேர்த்தண்டுகளால் உருவாக்கிறது.
அதைப் போல
நாம் திருமணம் செய்து குழந்தைகளைப்
பெற்றுதான் நம் தலைமுறையை உருவாக்க
வேண்டும் என்பதில்லை. நம் அடியொற்றி, அறிவையொற்றி வாழ்பவர்களை நாம்
உருவாக்கினால் அவர்கள் அனைவருமே நம்
தலைமுறைகள்தான். பாரதிதாசனிடம் படித்து, அவர் கவிதைகளைக் கற்று அவர் அடியொற்றி வாழ்ந்தவர்களை ( சுரதா ,
வாணிதாசன், முடியரசன் ) "பாரதிதாசன்
பரம்பரை " என்று சொல்வது இல்லையா? அதுபோல,
நாம் நன்னெறியில் வாழ்ந்து , நம்மைப் போல நல்லோர் பலரை நாம் உருவாக்கினால்
அவர்கள் எல்லோருமே வழித்தோன்றல்களே.
திருமண வீட்டில் ஏன் வாழைமரம் கட்டுகிறார்கள் தெரியுமா?
வாழைப் பூவோடும், வாழைத்தாரோடும் உள்ள வாழைமரத்தை
மட்டுமே கட்டுவார்கள். அதற்கு காரணம் உண்டு. வாழை மரம் ஒருமுறைதான் பூத்து காய்
காய்க்கும். அதுபோல, மனித வாழ்வில் " ஒருமுறைதான் " திருமணம் நடைபெற
வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தவே வாசலில் வாழை மரத்தைக் கட்டுகிறார்கள்.
"வாழைக்கு ஒரு தார் , வாழ்க்கைக்கு ஒரு தாரம்
" என்பார்கள். வாழைத்தாரை
வெட்டிவிட்டால் மீண்டும் மீண்டும் இலை வளரும்.
ஆனால், மீண்டும் தார் வளராது. வாழை ஒருமுறை மட்டுமே குலை தள்ளும்.
"வாழைக்கு ஓரு தார் " என்பது இயற்கை.
இதைப் போலவே திருமணம் செய்து கொண்ட
இணையர் தங்கள் வாழ்நாள் முழுவதும் " ஒருவனுக்கு ஒருத்தியாய் "
வாழவேண்டும் என்பதையே வாழைமரம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
தன்னைப் போலவே
மனித சமுதாயத்தை நன்னெறியில் வாழச் சொல்லும் வாழையின் சிறப்பை உணர்த்தும் செய்தி ஒன்றை
நன்னெறி பாடல்வழிக் காண்போம்.
" எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்குஈந்து என்றுஅவன்
மைந்தர்தம் ஈகை மறுப்பாரோ - பைந்தொடீ!
நின்று பயன்உதவி நில்லா அரம்பையின்கீழ்க்
கன்றும் உதவும் கனி. ( நன்னெறி - 17)
"முன்னே நன்றாக வளர்ந்து நின்று பழமாகிய பயனைக்
கொடுத்து, அதனால் அழிவை அடைந்த வாழை (
அரம்பை) மரத்தின் கீழே முளைத்த கன்றும்,
பழத்தைப் பிறர்க்குக் கொடுத்து உதவும்.
அதுபோல, எங்கள் தந்தை
வறியவர்களுக்கு எல்லாம் கொடுத்துக் கொடுத்து வறியவன் ஆனான் என்று, அவன் பிள்ளைகள்
வறியவர்க்கு ஈவதைக் கைவிடுவாரோ? கைவிடார்.
வாழை மரத்தைப் போல " வாழையடி வாழையாக "
வறியவர்களுக்குக் கொடுத்து வந்தால்தான் இந்த உலகில் வறுமையை ஒழிக்க முடியும். தன்
வாழ்வையே மற்றவர்களுக்குக் கொடுத்து வாழ்வதாலே
" வாழை " என்ற பெயரை அது பெற்றது என்பர்.
ஆசிரியரை
அடியொற்றி மாணவர்களும், பெற்றோரை அடியொற்றி பிள்ளைகளும் , தலைவனை அடியோற்றி
தொண்டர்களும் வாழ்வதே
"வாழையடி வாழையாக" வாழ்கிறார்கள் என்பதற்கு
உண்மையான பொருள் ஆகும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 176. வாழையடி வாழையாக ஆ.தி.பகலன்"
Post a Comment