"ஆனைக்கும் அடி சறுக்கும் "
ஒருவன் என்னதான் யானைபலம் கொண்டு ஏறுமுகத்தில் சென்றாலும் அவனுக்கும் இறங்குமுகம் உண்டு என்பதை உணர்த்துகிறது இப்பழமொழி. எவ்வளவு பெரிய அறிவாளிகளும் சில நேரங்களில் தடுமாற்றத்தைச் சந்திப்பார்கள் .
காவிரிப் பூம்பட்டினத்தில் கடல்வழி வாணிகம் மூலமாக பெரும் பொருள் ஈட்டி வணிகத்தொழில் செய்து வந்த பெருஞ்செல்வந்தர்தான் பட்டினத்தார். நிலையாமையை உணர்ந்து அனைத்து செல்வங்களையும் துறந்து துறவு பூண்டார். ஒரே ஒரு துண்டை மட்டுமே உடையாக அணிந்து துறவு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
அப்போது ஒருமுறை அந்நாட்டை ஆட்சி செய்த சோழமன்னன், பட்டினத்தார் துறவறம் ஏற்ற செய்தி அறிந்து , பட்டினத்தாரைச் சந்திக்க வந்தான். அங்கு ஒரு மரத்தடியில் இருந்த சிறிய பாறை மீது பட்டினத்தார் அமர்ந்திருந்தார்.
பட்டினத்தாரை பணிவோடு வணங்கினான் அரசன். " நான் இந்நாட்டின் அரசன். என்னுடைய சொத்துகளை வைத்து உங்களுடன் ஒருபோதும் போட்டி போட முடியாது. எனக்கே தானம் செய்யக் கூடிய பெரிய செல்வந்தர் நீங்கள். அந்தச் செல்வங்களை எல்லாம் துறந்துவிட்டு நீங்கள் துறவறம் பூண்டது ஏன்? நீங்கள் இப்படிச் செய்யலாமா? செல்வங்களை எல்லாம் துறந்துவிட்டு துறவறம் பூண்டதால் நீங்கள் என்ன பலனைக் கண்டீர்கள்? என்று மன்னன் கேட்டான். "தாங்கள் பழையபடி செல்வந்தராய் இருங்கள். வீட்டிற்குச் செல்லுங்கள் " என்றான்.
இதைக்கேட்ட பட்டினத்தார்,
" அன்று நான் செல்வந்தராய் இருந்த காலத்தில் நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தீர்கள் . நான் உங்களோடு நின்று கொண்டு பேசினேன். நீங்கள் பல்லக்கில் அமர்ந்தபடி என்னுடன் பேசினீர்கள். ஆனால் இன்று, நான் துறவு பூண்டதால் உங்கள் முன் அமர்ந்து கொண்டு பேசுகிறேன். நீங்களோ என்னை வணங்கியபடி நின்று கொண்டு பேசுகிறீர்கள். இதுதான் செல்வந்தராய் இருப்பதற்கும், துறவியாய் இருப்பதற்கும் உள்ள வேறுபாடு. இதுவே நான் பெற்றுக் கொண்ட பெரிய பலன் " என்றார். இதனைக் கேட்ட மன்னன் மறுமொழி பேச இயலமால் தலைகுனிந்தபடி சென்றான்.
தன் பேச்சுத் திறமையால் மன்னனையே தலைகுனிய வைத்தார் பட்டினத்தார் . அந்தப் பட்டினத்தாரையே ஒரு பெண்ணொருத்தி தன் கேள்விக் கணையால் தலைகுனிய வைத்த நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதையும் இங்குக் காண்போம்.
ஒருமுறை பட்டினத்தார் வயல்வெளியில் உள்ள வரப்பில் தலைவைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த வழியே களைபறிக்கும் பெண்கள் கூட்டமாக சென்றனர். வயல்வெளி வரப்பில் தலைவைத்துத் தூங்கிக் கொண்டிருந்த பட்டினத்தாரைப் பார்த்து , அந்தக் கூட்டத்தில் இருந்த பெண்ணொருத்தி " இவரெல்லாம் ஒரு துறவியா? துறவி என்று சொல்லிக் கொள்ள இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேட்டாள். முற்றும் துறந்தவரே உண்மையான துறவி. இவருக்கு தலையணையில் தலைவைத்துப் படுக்க ஆசை இருக்கிறது. அதனால்தான் வரப்பில் தலைவைத்துப் படுத்திருக்கிறார். இவர் முற்றும் துறந்தவராக இருந்திருந்தால் இவர் இப்படிச் செய்வாரா? ஆசைகளை முற்றும் துறக்க முடியாத இவரெல்லாம் ஒரு துறவியா? என்று கேட்டுவிட்டு சென்றாள் அப்பெண்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பட்டினத்தார் பதறியடித்துக் கொண்டு எழுந்தார். அறியாமையால் மாபெரும் பிழையைச் செய்துவிட்டோம். அப்பெண் என் அறிவுக்கண்ணைத் திறந்துவிட்டாள். இனி இதுபோன்ற தவறை ஒருபோதும் செய்யக் கூடாது என்று எண்ணிக் கொண்டு வரப்பில் தலைவைத்துப் படுக்காமல் வெறும் தரையில் படுத்தார்.
களைபறிக்கச் சென்ற பெண்கள் களையைப் பறித்துவிட்டு மீண்டும் அந்த வழியே வந்தார்கள். வெறும்தரையில் படுத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்த அப்பெண் " இவரெல்லாம் ஒரு துறவியா? துறவி என்று சொல்லக் கொள்ள இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேட்டாள். வரப்பில் தலைவைத்துப் படுப்பது துறவிக்கு அழகா? என்று நான் கேட்டதை மனதில் வைத்துக் கொண்டு இப்போது வெறும் தரையில் படுத்துக் கொண்டார் இந்தத் துறவி. போகிறவர்கள், வருபவர்கள் ஆயிரம் சொல்வார்கள். அதையெல்லாம் கேட்பது துறவிக்கு அழகா? தன் பேச்சை மற்றவர்கள் கேட்கும்படி செய்பவர்தான் உண்மையான துறவி. மற்றவர்கள் பேச்சைக் கேட்டு நடப்பவர்கள் எல்லாம் எப்படித் துறவியாக இருக்க முடியும்? என்று கேட்டுவிட்டு சென்றாள் அப்பெண்.
பூமிப்பந்து சுழலும் வேகத்தைவிட வேகமாக சுற்றியது பட்டினத்தாரின் தலை. அப்படியே தலைகுனிந்து நின்றார். கேள்விக் கணைகளால் தன்னையே தலைகுனிய வைத்த அந்தப்பெண் உண்மையில் சிறந்த ஞானி என்று உணர்ந்து கொண்டார் பட்டினத்தார்.
" ஆனைக்கும் அடி சறுக்கும் "
ஆம் ,
பட்டினத்தார்க்கும்
அடி சறுக்கியது.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 177. ஆனைக்கும் அடி சறுக்கும் ஆ.தி.பகலன் "
Post a Comment