
"பல்சான்றீரே! பல்சான்றீரே!
ஓர் ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். ஒரு நொடி கூட ஓய்வெடுக்க மாட்டான். பணம் சேர்க்க வேண்டும் என்பதில் குறியாக, வெறியாக இருந்தான். இரவு தூங்கச் சென்றால் கூட பணத்தைக் கட்டுக் கட்டாக எண்ணுவதைப் போல கனவு கண்டுகொண்டே தூங்குவான் . போதும் போதும் என்று எண்ணும் அளவுக்கு பணம் சம்பாதித்தான். ஒருநாள் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நினைத்தான். அவன் இதுவரை சேர்த்தப் பணத்தை எல்லாம் காலை முதல் மாலை வரை தொடர்ந்து எண்ணி குறிப்பேட்டில் குறித்துக் கொண்டான். மொத்தம் எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்த்தான். பத்து கோடியே ஐம்பது இலட்சத்து எழுபது ஆயிரம் இருந்தது. அவன் வயதோ ஐம்பதைத் தாண்டி இருந்தது. அதனால் இனி பணம் சம்பாதித்து எண்ண செய்யப் போகிறோம். இருக்கின்ற பணத்தைச் செலவு செய்து இருக்கின்ற காலத்தை மகிழ்ச்சியாக வாழ்வோம் என்று எண்ணினான். அப்போது யாரோ அவன் வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தான்.
எதிரில் காலன் (எமன்) நின்றிருந்தான். பதற்றத்தோடு பார்த்தான். உங்களுக்கு யார் வேண்டும் என்று காலனைப் பார்த்து தடுமாற்றத்துடன் கேட்டான் கஞ்சன். " எனக்கு நீ தான் வேண்டும். "இன்றோடு, அதுவும் இந்த நிமிடத்தோடு உன் விதி முடிந்து விட்டது. வா கிளம்பலாம் " என்றான் காலன். " ஐயோ என்று அடித்துக் கொண்டு கதறி அழுதான் கஞ்சன். இவ்வளவு நாளாக உண்ணாமல் உறங்காமல் உழைத்து சேர்த்து வைத்தப் பணத்தை செலவு செய்வதற்குள் என் விதி முடிந்து விட்டதே. சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழலாம் என்று இப்போது தானே எண்ணினேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே " என்று சொல்லி புலம்பினான்.
"பணம் பத்தும் செய்யும் " அது எமனையும் ஏதாவது
செய்யும் என்று எண்ணினான். அதனால் காலனை
உள்ளே அழைத்து உட்கார வைத்தான். " என்னிடம் பத்து கோடி உள்ளது. அதில் பாதியை
உங்களுக்குத் தருகிறேன். என் வாழ்நாளை ஓர் ஆண்டு நீட்டிப்பு செய்யவும். அந்த ஓர்
ஆண்டில் இருக்கின்ற மீதி பணத்தைச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து விடுகிறேன்
" என்று கெஞ்சினான்.
" காலனுக்கே கையூட்டா? " என்று எள்ளி நகையாடினான் காலன். " அதெல்லாம் முடியாது. உடனே கிளம்பு " என்றான் காலன். " எட்டுக்கோடி தருகிறேன். ஒரு மாதமாவது என்னை வாழ விடுங்கள் " என்றான் கஞ்சன். " முடியவே முடியாது " என்றான் காலன்.
" ஓரு வாரம், ஒரு நாள், ஒரு மணி நேரம் " என்று
சொல்லி வாழும் காலத்தைக் குறைத்துக் கேட்டு
எவ்வளவோ கெஞ்சினான். காலன் உடன்படவில்லை. கடைசியாக "ஓரே ஒரு
நிமிடமாவது கொடு " என்று கேட்டான் கஞ்சன்.
" சரி என்றான் " காலன். இந்த ஒரு நிமிடத்தில் என்ன செய்துவிடப் போகிறான் என்பது காலனின் எண்ணம். கஞ்சன் அங்கும் இங்கும் ஓடினான். ஒரு வெள்ளைத் தாளையும் எழுதுகோலையும் கண்டெடுத்தான். அந்த வெள்ளைத்தாளில் எதையோ வேக வேகமாக எழுதினான். அவன் எழுதுகோல் மை சிந்தியது. அதைவிட அதிகமாக அவன் கண்கள் கண்ணீர் சிந்தியது. அதற்குள் அந்த ஒரு நிமிடம் முடிந்தது. அவன் சம்பாதித்த பணத்தைப் பார்த்துக் கொண்டே காலனோடு சென்றான்.
" வாழும் நாளெல்லாம் ஓடி ஓடி உழைத்து
வானம் அளவு பணம் சம்பாதிக்க முடியும்!
அந்தப் பணத்தை வைத்து
ஒருபோதும் வாழ்நாளை சம்பாதிக்க முடியாது!
அவன் அந்த வெள்ளைத்தாளில் எழுதிவிட்டுச் சென்ற கவிதை இதுதான்.
இந்த உலகில் மனித வாழ்க்கை என்பது இப்படித்தான் முடிகிறது. இந்தக் கதைக்குப் பொருத்தமான புறநானூற்றுப் பாடல் ஒன்றைப் பார்ப்போம்.
" பல்சான் றீரே பல்சான் றீரே
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்,
பிணிக்கும் காலை
இரங்குவிர் மாதோ!
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின் ; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும் ,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே! ( புறநானூறு - 195)
நூல்கள் பல கற்று , பல்வேறு நற்பண்புகள் பல பெற்று, வாழ்கின்ற சான்றோர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரைமுடியும், முதுமை எய்தியதால் கன்னங்களில் வரிவரியாய் சுருக்கம் ஏற்பட்டு , பயன் இல்லாத முதுமையை அடைந்துவிட்ட சான்றோர்களே! உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் .
கூர்மையான மழுவைக் கருவியாகக் கொண்டுள்ள , பெரு வலிமையுடைய காலன் வந்து உங்கள் உயிரைக் கைப்பற்றி செல்கையில் " ஐயோ, தவறு செய்து விட்டோமே " என்று வருந்துவீர்கள். அப்போது வருந்தி என்ன பயன்? அதனால் நீங்கள் நல்ல செயல்களைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை . தீய செயல்களைச் செய்வதையாவது தவிர்த்திடுங்கள். அதுதான் எல்லோரும் விரும்புவது. அதுமட்டுமல்லாமல் , அதுதான் உங்களை நல்ல நெறியில் அழைத்துச் செல்லும் வழியும் ஆகும்.
வாய்ப்பு கிடைக்கும் போதே
வாழ்ந்துவிடுங்கள் . உங்களுக்காகவும், உலகிற்காகவும்!
" நீங்கள் வாழ்கின்ற வாழ்நாள்களே
உங்கள் வாழ்க்கையின்
விலைமதிப்பற்ற பரிசு! "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் வகுப்பு,
சதுரங்கப்பட்டினம்.
(அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 175. " பல்சான்றீரே! பல்சான்றீரே! ஆ.தி.பகலன்"
Post a Comment