தமிழ் அறிவோம்! 174. வழிகாட்டி ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 174. வழிகாட்டி ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!   174.  வழிகாட்டி  ஆ.தி.பகலன்

 


" வழிகாட்டி "
 

நம்மை நல்வழியில் வழி நடத்திச் செல்பவர் எவரோ,  அவரே நம் வழிகாட்டி.  அந்த வழிகாட்டி என்பவர் ஆசிரியராகவோ , பெற்றோராகவோ, நண்பராகவோ, தங்களுக்குப் பிடித்த அறிஞர் பெருமக்களாகவோ இருக்கலாம். 

வழிநடத்துபவர் சரியாக இருந்தால்தான் நம் வாழ்க்கை சரியாக இருக்கும். இல்லையேல், வாழ்க்கையில் எதுவும் இல்லாமல் போய்விடும். 

அந்தக் காலத்தில் இந்தச் சமூகத்தை வழிநடத்தும் உரிமையை ஆசிரியர்களுக்கே வழங்கி இருந்தார்கள். அவர்கள் பிறந்த குலத்தையோ, குடியையோ கூட அவர்கள் பார்க்க மாட்டார்கள். ஆசிரியர் என்பவர் அனைத்தும் அறிந்தவர். அவர் வாக்கே நம்மை வழிநடத்தும் மறைநூல் என்று எண்ணினார்கள். 

"தோணி இயக்குவான் தொல்லை வருணத்து

காணின் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்

அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற

மகன்துணையா நல்ல கொளல். ( நாலடியார் - 136) 

"ஓடம் இயக்குபவன் எக்குடியில் பிறந்திருந்தாலும்  அவனை மக்கள் தாழ்ந்தவன் எனக் கருதி  ஒருபோதும் புறம்தள்ள மாட்டார்கள். அவன் துணைகொண்டு  ஆற்றைக் கடந்து செல்வார்கள். அதுபோல,  நூல்களைக் கற்றவர்கள் எக்குடியில் பிறந்திருந்தாலும் அவர்களின் துணையுடன் பல நல்ல நூல் கருத்துகளைத் தெரிந்து  கொள்ள வேண்டும். மாறாக  அவர்களையோ , அவர்களின்  குடியையோ ஆராய்ந்து, அவர்களைப் பற்றி புறம்சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.  கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் கடவுளைப் போன்றவர்கள். கடவுளிடம் வரம் கேட்க வேண்டுமே தவிர வரலாறு கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. 

கல்விக்கு முன் உயர்வு தாழ்வு  பார்க்கக் கூடாது. நாம் எப்படியாவது உயர  வேண்டும் என்றுதான் பார்க்க வேண்டும். அதனால்தான் , அந்தக் கால மக்கள் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் எவ்வளவு  அடித்தாலும் அவர்கள் மீது எள்ளளவும் சினம் கொள்ளாது ஆசிரியர்கள் அடியொற்றியே வாழ்ந்தார்கள். 

 குருகுலக் கல்வி முறையில்  மாணவர்கள்  அங்கேயே தங்கிப் படிப்பது வழக்கம். குருகுலத்தில் மாணவர்கள் அனைவர்க்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது. அப்போது உணவில் நெய் ஊற்றப்பட்டது. அப்போது மாணவன் ஒருவன் எழுந்து ஆசிரியரிடம் சென்று " குருவே! இன்று மதிய உணவில் நெய் ஊற்றுவதற்கு பதிலாக வேப்ப எண்ணெயை ஊற்றி விட்டார்கள். உணவு ஒரே கசப்பாக இருக்கிறது" என்றான்.

" அந்த உணவைக் கொண்டு வா,  உனக்கு வேறு உணவு தருகிறேன் " என்றார் ஆசிரியர்.  உடனே அந்த மாணவன் அந்த உணவைக் கொண்டுவந்து கொடுத்து விட்டான். ஆசிரியர் அவனுக்கு வேறு உணவைக் கொடுத்துவிட்டு " நீ உணவு உண்டபின் என்னை வந்து பார் " என்றார்.  

அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் சென்று  உணவு உண்டான். அதன்பின் அவன் ஆசிரியரைச் சந்திக்கச் சென்றான்.  "இத்தனை மாணவர்களில் நாம் மட்டுமே  உணவில் வேப்ப எண்ணெய் கலந்து இருப்பதைக் கண்டறிந்து சொன்னோம். அதற்காக  ஆசிரியர் நம்மைப் பாராட்டி பரிசு கொடுக்கவே அழைத்திருக்கிறார் " என்று பெருமிதத்தோடு ஆசிரியர் முன் நின்றான். 

அவனைப் பார்த்த ஆசிரியர் " நீ இங்கு கற்க வேண்டியதை எல்லாம் கற்றுக் கொண்டாய். இனி கற்பதற்கு ஒன்றும் இல்லை. அதனால் நீ வீட்டிற்குச் செல்லலாம். இனி உனக்கு  இங்கு  இடமில்லை " என்றார். பதறிய மாணவன் " ஐயா,  நான் என்ன குற்றம் செய்தேன் " என்றான்.

 " அதெல்லாம் ஒன்றுமில்லை . நீ போகலாம் " என்றார் ஆசிரியர் . நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என் பிழையைப் பொறுக்க வேண்டுகிறேன். எந்தக் காரணமும் சொல்லாமல் நீங்கள் என்னை வெளியேற்றினால் என் பெற்றோரிடம் நான் என்ன சொல்வேன். காரணம்  சொல்லாமல் என்னை வெளியேற்றி விட்டார்கள் என்று சொன்னால் " நீ வெளியே சொல்ல முடியாத அளவிற்கு தவறு செய்துள்ளாய். அதனால்தான் உன்னை வெளியே அனுப்பிவிட்டார்கள்" என்று சொல்வார்கள். அதன்பின் என்னை வீட்டிலும் சேர்க்க மாட்டார்கள். ஊரிலும் சேர்க்க மாட்டார்கள்.  அதனால், தயவு செய்து காரணத்தைச் சொல்லுங்கள் " என்று வேண்டினான். 

"இந்தக் குருகுலத்தில் நெய் என்று சொல்லி அவ்வப்போது வேப்ப எண்ணெயைத்தான் ஊற்றிக் கொண்டு இருக்கிறேன். யாருமே அதை இதுவரை கண்டறியவில்லை. காரணம், எல்லோருடைய கவனமும் படிப்பில் இருக்கிறது. உணவில் இல்லை. இதுநாள் வரை நீயும் அப்படித்தான் இருந்தாய். ஆனால்,  இன்று உன் கவனம் படிப்பில் இருந்து திரும்பி உணவு பக்கம் சென்றுவிட்டது. அதனால்தான் அனைவரும் அமைதியாய் உணவு உண்ண நீ மட்டும்  உணவு கசக்கிறது என்றாய்.  உணவில் கவனம் செலுத்துபவனால் ஒருபோதும் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. நீ கல்வி கற்கின்ற தகுதியை முழுவதும் இழந்துவிட்டாய் " என்று சொல்லி அவனை வீட்டுக்கு அனுப்பினார் ஆசிரியர். 

ஆசிரியர் சொன்னது முற்றிலும் உண்மை. அந்தக் காலத்தில் அரை வயிறு கஞ்சியைக் குடித்துவிட்டு ஐந்தாறு ஊர்களுக்கு அடுத்திருக்கும் பள்ளிக்கூடத்திற்கு நடந்தே சென்று பாடம் படித்தவர்கள்தான் இன்று அரசாங்கத்தில் பெரிய பெரிய பதவியில் இருக்கிறார்கள். 

கல்வியையும், கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களையும் மதித்தவர்கள் இன்று மதிப்பு மிக்க இடத்தில் இருக்கிறார்கள். இந்த உலகத்திற்குக் கல்வியும், அதைக் கற்றுக் கொடுப்பவர்களும்தான் உண்மையான வழிகாட்டி. 

இன்று " தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் " என்பது போல வழி தவறிப் போனவர்களை எல்லாம் தங்கள் வழிகாட்டிகள் என்று சொல்லிக் கொண்டு பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்றைய மாணவர்கள். பெற்றோர்களே!

பெரியோர்களே!

குழந்தைகளை வழிநடத்தும் வாய்ப்பை எப்போதும் ஆசிரியர்களிடம் கொடுங்கள்.  எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக் கொண்டு குழந்தைகளின் வாழ்க்கையைக் குதறி வைக்காதீர்கள்.

பாவம் குழந்தைகள். 

" வழிகாட்டிகளே

வழிதவறிப் போனதால்

இன்று

குற்றவாளிக் கூண்டில்

குழந்தைகள்!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

0 Response to "தமிழ் அறிவோம்! 174. வழிகாட்டி ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel