"பசிப்பிணி மருத்துவன் "
ஒருநாள் சோழன்
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், தன் அமைச்சர் ஒருவருடன் குதிரையேறி
காவிரி கரை வழியாக பயணம் செய்கிறான். சிறுகுடி என்னும் சிற்றூரை இருவரும்
நெருங்குகையில் பலர் எதிர்படுகின்றனர். கையில் உணவும், பொருளும் ஏந்தி மகிழ்வோடு
தங்கள் துன்பம் துறந்து வருகின்றனர். அரசருக்கு ஒன்றும் புரியவில்லை.
வறியவர்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் வள்ளல் இங்கு யார் இருக்கிறார்?
என்று அமைச்சரைக் கேட்கிறான் அரசன். பசித்த வயிற்றுக்கு இல்லை என்று கூறாது,
அன்னமிட்டுப் போற்றும் வள்ளல் ஒருவர் இங்கு இருக்கிறார். அவர் பெயர்
"சிறுகுடி கிழான் பண்ணன் " என்றார் அமைச்சர் .
அரசனுக்கு உடனே இப்பண்ணனைக் கண்டாக வேண்டும் என்னும்
ஆவல் எழுகிறது. உடற்பிணியைப் போக்குபவன் மட்டும் மருத்துவன் அல்ல. பசி என்னும்
கொடிய பிணியை விரட்டுபவனும் மருத்துவனே. ஆதலால் அப்பசிப்பிணி மருத்துவருக்குப்
பெரும் பரிசு வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தான். பொன் பொருளைக் கொடுப்பதா? நாடு
நகரங்களைக் கொடுப்பதா? ஆளும் அதிகாரத்தைக் கொடுப்பதா? என்று யோசித்தான். இவற்றை எல்லாம் விட உயர்வான
ஒன்றைக் கொடுக்க நினைத்தான். அதனால் தன் வாழ்நாளையும் சேர்த்து எடுத்துக் கொண்டு
பண்ணன் நெடுநாள் வாழ வேண்டுமென வாழ்த்தினான் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
தான் நாட்டின் பேரரசன் என்றும், பண்ணன் எளியவன் என்றும், எண்ணாமல் தன் வாழ்நாளையே
வாரிக் கொடுத்த வள்ளன்மையை வரலாறு இன்றுவரை பார்த்தது இல்லை.
" யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் காண்க, இவன் கடும்பினது இடும்பை ;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவம் தானும் கேட்கும் ;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் ; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ?
சேய்த்தோ? கூறுமின், எமக்கே." ( புறநானூறு - 173)
" யான் வாழும் நாளையும் சேர்த்து பண்ணன்
வாழ்வானாக, பாணர்களே! இந்தப் பாணனின்
சுற்றத்தாரின் துன்பத்தைப் பாருங்கள். புதிது புதிதாகப் பழங்கள் பழுத்திருக்கும்
மரங்களில் பறவைகள் உண்ணுவதால் உண்டாகும் ஒலி கேட்கிறோம். காலம் தவறாது மழை
பெய்யும் இடத்தில் இருக்கும் எறும்புகள் தம் முட்டைகளைத் தூக்கிக் கொண்டு மேட்டு
நிலத்திற்கு வரிசையாகச் செல்வதைப் போல கையில் சோற்றுடன் கூட்டம் கூட்டமாகப் பெரிய
சுற்றத்துடன் செல்லும் சிறுவர்களைக் காண்கிறோம்.
அதைக்கண்ட பிறகு மீண்டும் மீண்டும் " பசி "
என்னும் பிணியைத் தீர்க்கும் மருத்துவனின் (பண்ணனின்) இல்லம் அருகில் உள்ளதோ?
தொலைவில் உள்ளதோ? எங்களுக்குக் கூறுங்கள் " எனக் கேட்கிறோம் என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனால் "சிறுகுடி கிழான் பண்ணன் " பாராட்டப்
பெற்றுள்ளதை அறியலாம்.
இம்மண்ணில் அன்னதானம் செய்வோர்க்கு இயற்கையில் ஆயுள்
தானம் பெறுவர் என்பதையே பண்ணனது வாழ்க்கை வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
ஆயுள்தானம் என்பது நாம் இம்மண்ணில் வாழும் நாளை மட்டும் குறிக்கவில்லை. மற்றவர்கள்
மனதில் நாம் வாழும் நாளையும் சேர்த்தே குறிக்கிறது. உடற்பிணியைப் போக்கும்
மருத்துவர்க்கு என்றாவது ஒருநாள் மரணம் உண்டு. ஆனால், பசிப்பிணியைப் போக்குபவர்கள்
சிறுகுடி கிழான் பண்ணனைப் போல மரணமில்லாப் பெருவாழ்வைப் பெற்று இம்மண்ணில்
வரலாறாய் வாழ்வார்கள். அதனால் , அன்னதானம்
செய்வோம். ஆயுள் தானம் பெறுவோம்.
"மருத்துவர் ஆக வேண்டும், மருத்துவர் ஆக வேண்டும் " என்று சொல்லி சொல்லியே
நாட்டில் பலர் மனநோயாளி ஆகிக் கொண்டு இருக்கிறார்கள். " மருத்துவர் ஆக
வேண்டும் " என்ற ஆசை எல்லோர் மனதிலும் ஆகாயம் போல பரந்து காணப்படுகிறது. இந்த
உலகில் எல்லோருமே மருத்துவர் ஆகலாம். மருத்துவம் படித்துத்தான் மருத்துவர்
ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட மருத்துவர்
ஆகலாம். ஆம், " பசிப்பிணி மருத்துவர் " ஆகலாம்.
நீங்கள் படித்து
பட்டம் வாங்கி மருத்துவர் ஆவதை விட பத்து பேருக்கு சோறு போட்டு " பசிப்பிணி
மருத்துவர் " ஆகலாம். ஆண்டுகள் பல
படித்து மருத்துவர் ஆவது கடினம். பசித்தோர்க்கு எல்லாம் அன்னம் பல படைத்து
மருத்துவர் ஆவது எளிது. உடற்பிணியைப் போக்குபவர்கள் மட்டும் இங்கு மருத்துவர்
இல்லை. பசிப்பிணியைப் போக்குபவர்களும் இங்கு மருத்துவர்தான் . உடற்பிணியைப் போக்க
மருந்துகள் பல உண்டு. ஆனால், பசிப்பிணிக்கு உணவுதான் ஒரே மருந்து. பசித்தோர்க்கு
உணவு என்னும் மருந்தைக் கொடுத்து அவர்களின் பசிப்பிணியைப் போக்குபவர்கள் எல்லோருமே
இங்கு மருத்துவர்தான் .
ஆம்.
" பசிப்பிணி மருத்துவர் "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 173. பசிப்பிணி மருத்துவன் ஆ.தி.பகலன்"
Post a Comment