"காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே
"
ஓர் ஊரிலே மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார்.
செல்வங்களை மேலும் மேலும் சேர்ப்பதிலே தன் நேரம் முழுவதையும் செலவிட்டார். கடுகளவு
பொருளைக் கூட தன் கைகளால் யாருக்கும்
கொடுத்திடாத மகா கஞ்சன் அவன்.
மற்றவர்களிடம் தன் செல்வ செழிப்பைக் காட்டிக் கொள்வதில் பெரு விருப்பம் கொண்டவன்.
ஒருநாள் தன் ஊருக்கு பட்டினத்தார் என்ற பெரிய துறவி
வந்திருக்கிறார் என்ற செய்தி அறிந்தான்.
அவரிடம் சென்று தன் செல்வ வளத்தைச் செருக்குடன் காட்ட நினைத்தான். பட்டினத்தாரை
தன் வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தான்.
அவன் அழைப்பை ஏற்றும், அவன் செருக்கை அறிந்தும் அவன் இல்லம் சென்றார்
பட்டினத்தார். தன் இல்லம் வந்த பட்டினத்தாரிடம் தன்னிடம் உள்ள செல்வச் செழிப்பைக்
காட்ட நினைத்தான். " ஐயா! ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரன் நான்தான். நினைத்ததை
சாதிக்கும் பலம் என்னிடம் உள்ளது . உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம்
கேளுங்கள் " என்றான்.
அவனைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் " இந்த
உலகைவிட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக முடியாது என்று நீங்களே ஒத்துக்
கொள்கிறீர்கள் . ஆனால், நினைத்ததை எல்லாம்
சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே! ஒருவன் செய்த நன்மை தீமை
மட்டுமே இறந்த பின்பு அவன் கூட வரும்.
அவன் ஈட்டிய பொன்னோ, பொருளோ அல்ல.
" காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே
"
ஊசி செய்யும்
ஒரே வேலை துணி தைப்பது. அந்த ஊசியின் காது ( நூல் கோர்க்கும் ஓட்டை) உடைந்து போனால், அந்த ஊசியால் ஒரு பயனும் இல்லை. அப்படி ஒரு
பயனும் இல்லாத ஊசி கூட நாம் இறந்தபின் நம் கூடவே இறுதிவரை ( கடைவழி) வராது. காதற்ற
ஊசியே கடைசிவரை உன்னோடு வராத போது
காலமெல்லாம் நீ சேர்த்து வைத்த செல்வம் மட்டும் எப்படி உன்னோடு வரும் .
கொஞ்சம் யோசித்துப்பார் . இந்தப் பொன்னாசை, பொருளாசை எதற்கு? செல்வத்தால் யாரும் செருக்கடையத் தேவையில்லை.
அதை இல்லாதவர்க்குக் கொடுத்து இன்புறுங்கள்.
அதுதான் உண்மையான மகிழ்ச்சியைச் தரும் " என்றார் பட்டினத்தார்.
தன் செல்வ செருக்கை நினைத்து வேதனைப்பட்ட செல்வந்தன் ,
தன் வாழ்க்கைப் பயணத்தைப் பட்டினத்தார் காட்டிய பாதையில் திருப்பினான். இருக்கின்ற
செல்லங்களை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுக்க முடிவு செய்தான். பொருளைச் சேர்ப்பதல்ல உண்மையான செல்வம். தேடிய
பொருளால் மற்றவர்களின் தேவைகளைத் தீர்த்து புகழ் பெறுவதே உண்மையான செல்வம் என்பதை
செல்வந்தன் உணர்ந்தான். அவன் செருக்கு அழிந்தது. அதனால், மக்களிடையே அவன் செல்வாக்கு அதிகரித்தது.
" அளவற்ற செல்வங்களைக் கொண்டுவந்து
தன் இல்லத்தை நிரப்புபவன் செல்வந்தன் அல்லன்!
ஏழை எளியோர்க்கு
அளவின்றி அள்ளிக் கொடுத்து மகிழ்ச்சியால் அவர்களின்
உள்ளத்தை நிரப்புபவனே
உண்மையான செல்வந்தன்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை.
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 172. காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே ஆ.தி.பகலன்"
Post a Comment