தமிழ் அறிவோம்! 171. வாழ்வு தந்த வள்ளுவம் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 171. வாழ்வு தந்த வள்ளுவம் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  171.   வாழ்வு தந்த வள்ளுவம்   ஆ.தி.பகலன்

 


"வாழ்வு தந்த வள்ளுவம் "
 

இரண்டாம் குலோத்துங்கச் (அநபாயன்) சோழன் தன் அரசவையில் வீற்றிருக்கிறான். தன் அரசவையில் உள்ள புலவர்களைப் பார்த்து " புலவர் பெருமக்களே!  என் உள்ளத்தில் நெடுநாள்களாக உறுத்திக் கொண்டிருக்கும் மூன்று வினாக்களைக் கேட்கிறேன். 

1. மலையின் பெரியது எது?

2. கடலின் பெரியது எது?

3. ஞாலத்தின் பெரியது எது?

இந்த மூன்று வினாக்களுக்கு விடையளியுங்கள் " என்றார். 

 விடை தெரியாமல் நின்ற  அமைச்சர்களும், புலவர்களும் " நாளை விடையளிக்கிறோம் " என்று கூறினர் . 

அமைச்சர் வெள்ளியங்கிரி தன் இல்லம் சென்று தன்னிடம் உள்ள ஓலைச்சுவடிகள் எல்லாவற்றையும் எடுத்து வைத்து இரவு முழுவதும் தேடினார். அந்த மூன்று வினாக்களுக்கான  விடை மட்டும் கிடைக்கவே இல்லை. பொழுது விடிந்தது. தேடுதல் வேட்டை தொடர்ந்தது. வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவர் மகன் வந்தான். " அப்பா, அரசவைக்குச் செல்லவில்லையா?  இரவு முழுவதும் தூங்காமல் எதையோ தேடிக்கொண்டு இருக்கிறீர்களே உங்களுக்கு என்னதான் வேண்டும்?  விடியற்காலையிலேயே நீராடி இறைவழிபாடு முடித்து அரண்மனை செல்வீர்களே! இன்று ஏன்  இன்னும் செல்லவில்லை?  என்று கேட்டான். " அரசர் கேட்ட மூன்று வினாக்களைச் சொன்னார். இவற்றிற்கு விடை வேண்டும் " என்றார் .

"இதையெல்லாம் ஒரு கேள்வி என்று கேட்டிருக்கிறாரே உங்கள் அரசர். அதற்கான விடையை இதோ நான் சொல்கிறேன் " என்று சொல்லிவிட்டு மூன்று திருக்குறளை ஓலைச்சுவடியில் எழுதிக் கொடுத்தான்.  " இதை உங்கள் அரசரிடம் கொடுங்கள் " என்றான் அவர் மகன். 

அமைச்சர் வெள்ளியங்கிரி அரசவைக்குச் சென்று அரசரிடம் அந்த ஓலைச்சுவடியைக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த அரசர் " அருமையான விளக்கம். என் வினாவுக்கான விடை கிடைத்துவிட்டது " என்று மகிழ்ந்தார். " இந்த  விடையைக் கண்டறிந்தது யார்?  எனக் கேட்டார் அரசர். " என் மகன் அருண்மொழித்தேவர்" என்றார் அமைச்சர் வெள்ளியங்கிரி. " அருண்மொழித்தேவரை உடனே அரசவைக்கு அழைத்து வாருங்கள் " என்று ஆணையிட்டார் அரசர். 

அரசவைக்கு வந்த அருண்மொழித்தேவரை அவையோர் முன்பாக மூன்று வினாக்களையும் அதற்கான விடைகளையும் கூறச்சொன்னார் அரசர். 

1. மலையின் பெரியது எது?

 "நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது ."

 தன் நிலையில் இருந்து மாறுபடாமல் அடங்கி வாழ்பவனுடைய உயர்வு,  மலையின் உயர்வை விட மிகவும்  பெரியதாகும். 

2. கடலின் பெரியது எது? 

"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது." 

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்பை அளந்து பார்த்தால், அதன் நன்மை கடலையும் விட அளவில் மிகப் பெரியதாகும். 

3. ஞாலத்தின் பெரியது எது? 

" காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது. 

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும் , அதன் தன்மையை அறிந்தால் அது உலகைவிட மிகப் பெரியதாகும். 

இவ்வாறு அருண்மொழித்தேவர் கொடுத்த விளக்கத்தைக் கேட்டு அரசரும், அவையோரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

இத்தகைய அறிவுடைவன் தனக்கு அமைச்சராக இருக்கும் தகுதி உடையன் என்று எண்ணினார் அரசர்.

அருண்மொழித்தேவர்  இன்று முதல் நமது சோழ பெருநாட்டு முதல் அமைச்சராக இருப்பார். நான் அவருக்கு " உத்தம சோழப் பல்லவன் " என்ற பட்டத்தை மனமுவந்து அளிக்கிறேன் " என்று கூறி அவர் கழுத்தில் மலர்மாலை அணிவித்தான் இரண்டாம் குலோத்துங்கச் சோழன். 

திருக்குறளால் அருண்மொழித்தேவர்  சோழநாட்டுக்கு அமைச்சரான செய்தியைக் "திருக்கை வழக்கம் " என்ற நூலில் பாடியுள்ளார் கம்பர். 

" மண்ணில் கடலில் மலையில் பெரியதென

எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக்கை " (திருக்கை வழக்கம் - 44) 

வேளாண் பெருமக்களின் கொடை குணத்தைப் போற்றும் நூலே " ,திருக்கை வழக்கம் " என்னும் நூவாகும். அருண்மொழித்தேவர்  வேளாண் குடியில் பிறந்தவர். அதனால்தான் கம்பர் அருண்மொழித்தேவரின் பெருமையை இந்நூலில் பாடியுள்ளார் . 

கம்பரே புகழ்ந்து பாடிய அருண்மொழித்தேவர்  யாரென்று தெரியுமா? 

பெரிய புராணத்தை இயற்றினாரே  "சேக்கிழார் " அவரின் இயற்பெயர்தான் அருண்மொழித்தேவர்.  "சே" என்பதற்குக் காளை என்றும் " சேக்கிழார் " என்றால் காளைக்கு உரியவர் என்றும் பொருளாகும். காளையை வைத்து உழவுத்தொழில் செய்யும் வேளாண் குடியையே " சேக்கிழார் " என்பர். "சேக்கிழார் " என்னும் வேளாண் குடியில் பிறந்தவர்தான் அருண்மொழித்தேவர்.  இயற்பெயரான அருண்மொழித்தேவர்  என்ற பெயர் மறைந்து "சேக்கிழார் " என்ற அவர் பிறந்த குடிப்பெயராலேயே இன்று அறியப்படுகிறார். 

திருக்குறளை முழுமையாக படித்ததாலே சோழநாட்டின் முதல் அமைச்சரானார் சேக்கிழார். 

சேக்கிழார் மட்டுமல்ல.  வள்ளுவம் (திருக்குறள்)  படித்த அனைவருமே வாழ்வு பெறுவர். 

"வையத்தை வாழவைக்க வந்த நூல்!

வையத்தார்க்கு வாழ்வுதரும் நூல்

திருக்குறள் மட்டுமே!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! 171. வாழ்வு தந்த வள்ளுவம் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel