தமிழ் அறிவோம்! 170. ஐந்துதலை நாகம் ஒன்று அஞ்சாமல் கடித்ததுவே ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 170. ஐந்துதலை நாகம் ஒன்று அஞ்சாமல் கடித்ததுவே ஆ.தி.பகலன்

 தமிழ் அறிவோம்!   170.  ஐந்துதலை நாகம் ஒன்று அஞ்சாமல் கடித்ததுவே   ஆ.தி.பகலன்



"ஐந்துதலை நாகம் ஒன்று அஞ்சாமல் கடித்ததுவே "
 

 தமிழ்ப்புலவர் ஒருவர்  சித்த மருத்துவரிடம் சென்றார். " ஐயா என் நோயை எப்படியாவது குணமாக்குங்கள் " என்று வேண்டினார். 

"தங்கள் உடம்பில்  என்ன நோய் உள்ளது? என்பதை விளக்கமாக கூறுங்கள் " என்றார் மருத்துவர்.

"ஒருகால் எழுந்தவுடன் இருகால் முடிப்பதற்கு  முக்காலைக் கொண்டுநான் நாற்காலுக்கு ஏகுகையில் ஐந்துதலை நாகம் ஒன்று அஞ்சாமல் கடித்ததுவே " என்றார் தமிழ்ப்புலவர். 

இதைக் கேட்டதும் சித்த மருத்துவர் சித்தம் கலங்கிப் போனார்.  " என்னே!  ஐந்து தலை நாகம் கடித்துவிட்டதா? ஒரு தலை நாகம் கடித்தாலே உயிர் பிழைப்பது அரிது.  ஐந்துதலை நாகம் கடித்துவிட்டது என்று எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் நிதானமாக வந்து இருக்கிறாயே? என்று குழப்பத்துடன் கேட்டார்.  இவரைப் பாம்பு தீண்டவில்லை. இவர் சொன்ன பாடலில் ஏதோ புதிர் இருக்கிறது . அது என்னவாக இருக்கும் என்று ஆழமாக யோசித்தார் மருத்துவர். நீண்ட யோசனைக்குப்பின் அப்புலவரின் நோயைக் கண்டறிந்தார். அந்த நோய்க்கு மருந்துகள் எதுவும் தேவையில்லை என்பதையும் கண்டறிந்தார். எந்த மருந்தும் இல்லாமல்  அப்புலவரே அந்த நோயைக் குணமாக்கிக் கொள்ளும் வழியையும் தெரிந்து கொண்டார். 

புலவரிடம் உள்ள நோய்க்கான மருந்தை புலவரைப் போலவே பாடலாகப் பாடினார் மருத்துவர். 

" அதற்குப் பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கித் தேய் " இதுவே உங்கள் நோய்க்கான மருந்து என்று புலவரிடம் கூறினார் மருத்துவர். 

மருத்துவர் சொன்ன பாடலை ஆராய்ந்து  நோய்க்கான மருந்தை தெரிந்து கொண்டார் புலவர்.  மருத்துவர் சொன்னபடியே செய்தார். புலவரின் நோய் அப்போதே குணமானது. தன் நோயை எளிமையான முறையில் குணப்படுத்திய மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு விடைபெற்றார் புலவர். 

புலவர் சொன்ன நோய் எது?

அதற்கு மருத்துவர் சொன்ன மருந்து எது?

விளக்கமாகப் பார்ப்போம். 

ஒருகால் (சூரியன்)  எழுந்தவுடன் ( உதித்தவுடன்)  இருகால் (காலைக்கடன்)  முடிப்பதற்கு முக்காலைக் (ஒரு மனிதனுக்கு மூன்றாவது காலாக இருப்பது  ஊன்றுகோல்)  கொண்டுநான் நாற்காலுக்கு  (தரிசு நிலம்) ஏகுகையில் (போகும் போது)  ஐந்துதலை  நாகம் (அனைத்துப் பக்கமும் முள்ளையுடைய நெருஞ்சிமுள்)  ஒன்று அஞ்சாமல் கடித்ததுவே ( நடக்கும் போது காலில் குத்தியது) . 

காலையில் சூரியன் உதித்தவுடன் காலைக்கடனை முடிப்பதற்காக ஊன்றுகோலைக் கையில்  பிடித்துக் கொண்டு தரிசு நிலத்திற்குச் சென்றார் புலவர். அந்தக் காலத்தில் காலணி அணியும் வழக்கம் இல்லாததால் புலவர் நடக்கும் போது  காலில் நெருஞ்சிமுள் குத்தியது.  அதனால் ஏற்பட்ட வலியால் புலவர் துயருற்றார்.  அதற்கு மருந்து வேண்டியே மருத்துவரைச் சந்தித்தார் புலவர்.

 பத்துரதன் என்றது (பத்து - தசம்) தசரதன்.

 தசரதனின் புத்திரன் என்றது இராமன் .  (புத்திரன் - மகன்)

இராமனின் மித்திரன் என்றது சுக்கிரீவன்.

(மித்திரன் - நண்பன்)

சுக்கிரீவனின் சத்துரு என்றது வாலி.

(சத்துரு - எதிரி)

வாலியின் பத்தினி என்றது தாரை.

(பத்தினி - மனைவி)

தாரையின் கால் என்றது துணைக்கால்.

" தாரை " என்ற சொல்லில் உள்ள துணைக்காலை வாங்கி ( நீக்கி) னால்  "தரை " என்று வரும். 

தசரதனின் மகனான இராமனின் நண்பன் சுக்கிரீவன்.  அந்த சுக்கிரீவனின் எதிரி வாலி. வாலியின் மனைவி பெயர் தாரை.  அந்தத் தாரை என்ற சொல்லில் உள்ள துணைக்காலை நீக்கினால் தரை என்றாகும். தரையில் தேய். வலி போய்விடும் என்பதே புலவரின் நோய்க்குச் சொல்லப்பட்ட மருந்து. 

நெருஞ்சிமுள் குத்தியது . வலி பொறுக்க முடியவில்லை . என்ன செய்வது என்ற கேள்விக்குக் காலைத் தரையிலே தேய் என்பதே விடையாகும். புலவரும், மருத்துவரும் பாடிய பாடலுக்குப் பொருள் இதுவே ஆகும். 

அந்தக் காலத்தில் தமிழ் அறிந்த அனைவருமே தமிழ் அறிஞராய் இருந்திருக்கிறார்கள்.  அதனால்தான் புலவருக்கு நிகராய் மருத்துவரும் விடுகதைக்கு விடையளிப்பது போல புலமையோடு விடை அளித்திருக்கிறார்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை.

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .


0 Response to " தமிழ் அறிவோம்! 170. ஐந்துதலை நாகம் ஒன்று அஞ்சாமல் கடித்ததுவே ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel