தமிழ் அறிவோம்! 169. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 169. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  169.  அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் ஆ.தி.பகலன்

 


"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் "
 

கல்லூரி ஒன்றில் தமிழ்ப்பேராசிரியர் ஒருவர்,  " கம்பராமாயணம் "  நடத்திக் கொண்டிருந்தார்.  மிதிலை நகரில் இராமனும், சீதையும் முதன்முதலில் சந்திக்கும் காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார். 

" எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி,

கண்ணொடு கண்இணை கவ்வி ஒன்றை ஒன்று

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் "

( கம்பராமாயணம் - பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் - 35) 

இராமன் மிதிலை நகர் வீதியில் நடந்து வருகிறான். மாடத்தில் சீதை தன் தோழிகளோடு பந்து ( மகளிர் பூக்களைக் கொண்டு ஆடும் பந்து)  விளையாடிக் கொண்டிருக்கிறாள். கை தவறி பந்து வீதியில் செல்லும்  இராமன் மேல் விழுந்து விடுகிறது.  மாடத்தில் இருந்து சீதை கீழே எட்டிப் பார்க்கிறாள். பந்து எங்கிருந்து வந்தது என்று இராமன் மேலே பார்க்கிறான் . அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த ஒரு கணத்தையே இப்பாடலில் காட்சிப் படுத்துகிறார் கம்பர். 

"எண்ணுவதற்கே அரிய நலன்களைக் கொண்டவள் சீதை . அவள் மாடத்திலே நின்றிருக்கிறாள் . அண்ணலும் ( இராமன்) அவளைப் பார்த்தான்.  அவளும் ( சீதை) இராமனைப் பார்த்தாள். அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன. இருவரும் நிலை தடுமாறினர். இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன " என்று கவித்துவமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் கம்பர்.  

" அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் " என்ற அடியை ஆயிரம் முறை படித்தாலும் அதன் சுவையும் , நயமும் குன்றாது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கம்பனைப் போன்ற கவி உருவாக முடியாது.

" கம்பன் கவியே கவி " என்று கம்பரைப் புகழ்ந்து பேசினார் பேராசிரியர். 

அந்த வகுப்பில் இருந்த ஒரு குறும்புக்கார மாணவன் எழுந்து " ஐயா, காலந்தோறும் கம்பனைப் போன்ற கவிஞர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த உலகம்தான் அவர்களைக் கொண்டாடுவதில்லை.  கம்பர் சொன்ன கவிதையை வைத்து தற்காலத்திற்குத் தகுந்தாற்போல நான் ஒரு கவிதை சொல்கிறேன். கேளுங்கள். 

" அண்ணலும் நோக்கினான்

அவளும் நோக்கினாள்!

அதை

அவள் அண்ணனும் நோக்கினான்! 

கடற்கரையில் தலைவனும், தலைவியும் தனிமையில் இருக்கிறார்கள். கண்களாலே காதல் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  புது காவியம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த நல்ல வேளையில் அந்தப் பெண்ணின் அண்ணன் அந்த இடத்திற்கு தற்செயலாக வந்துவிடுகிறான்.  இவர்கள் கண்களால் காதல் வளர்த்துக் கொண்டிருந்த கண்கொள்ளாக் காட்சியை அவள் அண்ணன் பார்த்து விடுகிறான். 

 அதன்பின் என்ன நடந்திருக்கும்? 

அதுவரை நடந்த  அகப்பொருள் காட்சி,  புறப்பொருள் ( சண்டை)  காட்சியாக மாறி இருக்கும். ஆம்,  அவர்கள் இருவரையும்,  அவளின் அண்ணன் விரட்டி விரட்டி வேட்டையாடி இருப்பான். 

என் கவிதையும், காட்சியமைப்பும் கம்பனை மிஞ்சும் அளவுக்கு உள்ளதா ஐயா? என்று கேட்டான்  அந்த மாணவன். 

இப்படிப்பட்ட எத்தனையோ அறிவாளிகளை நாம் நாள்தோறும் பார்த்துக்  கொண்டிருக்கிறோம். அவர்களின் திறமைகளுக்கு  அங்கீகாரம் அளிக்காமல், கண்டும் காணாமல் கடந்து விடுகிறோம். 

" இந்த உலகத்தில்

கம்பனை மிஞ்சும் கவிஞர்கள்  உண்டு!

வள்ளுவனைக் காட்டிலும் வல்லவர்கள் உண்டு.

ஆனால், 

அவர்களை எல்லாம் வளர்த்து விடுகின்ற நல்லவர்கள்தான்

இங்கு யாரும் இல்லை!

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! 169. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel