தமிழ் அறிவோம்! 168. காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்தது ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 168. காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்தது ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  168.  காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்தது  ஆ.தி.பகலன்

 


"காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்தது "
 

முதல் குலோத்துங்கச் சோழன் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தான். அப்போது தென்னவர், வில்லவர் உள்ளிட்ட மன்னர்கள் எல்லாம் திறை (தோற்ற மன்னர்கள் , தன்னை வென்ற மன்னர்க்குக் கொடுக்கும் நிதி) செலுத்தி பணிந்தனர்.  ஆனால்,  வட கலிங்க மன்னன் அனந்தவர்மன் மட்டும் திறை செலுத்தாமல் இருந்தான். இதனை அறிந்த குலோத்துங்கன் சினம் கொண்டான். கலிங்க நாட்டின் மீது போர் தொடுக்க நினைத்தான். குலோத்தங்கனின்  ஆணையின்படி   படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் கலிங்க நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கலிங்க நாட்டை அழித்தான்.  காஞ்சியில் தங்கயிருந்தபடியே கலிங்கப் போரில் வெற்றி வாகை சூடினான் முதலாம் குலோத்துங்கச் சோழன். இந்த வீர வரலாற்றைக் கூறும் நூலே செயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணி. 

கலிங்கத்துப்பரணியில் உள்ள ஒரு பாடல் இரட்டுறமொழிதல் அணியில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.  ஒரு சொல்லோ,  ஒரு சொற்றொடரோ இருபொருள் பட வருவது "இரட்டுறமொழிதல்  அணி " எனப்படும். 

" காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த

கலவி மடவீர்! கழற் சென்னி

காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த 

களப்போர் பாடக் கடை திறமின்!  (கலிங்கத்துப்பரணி - 63) 

இடையிலே அணிந்துள்ள காஞ்சி என்னும் அணி ஒரு சிறிதும் குலையாமல் அப்படியே இருக்கும் படியாகவும், உடுத்திய உடை மட்டும் நிலைமாறிக்  கிடக்கும்படியாகவும்,  உங்கள் கணவரைக் கூடிக் களிக்கும் பெண்களே!

வீரக்கழல் அணிந்த முதலாம் குலோத்துங்கச் சோழன் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தான். ஆயினும், அவன் ஆணையால்  கலிங்க நாடு அழிந்து போயிற்று. இவ்வாறு கலிங்க நாடு  அழிந்து போகும் அளவுக்குக் கலிங்கப் போர்க்களத்தில் நடந்த போரைச் சிறப்பித்து யானும் பாடப் போகின்றேன். அதனைக் கேட்டு மகிழ , நீங்களும் கதவைத் திறவுங்கள்!  என்பதே பாடலின் பொருள். 

இளம்பெண்கள் தங்கள்  கணவனோடு கலவியில் ஈடுபடும்போது காஞ்சி எனும் அணிகலன் (மகளிர் இடையில் அணியும் ஒட்டியாணம்) சிறதும் குலையாமல் அப்படியே இருக்கும். ஆனால், கலிங்கம் மட்டும் குலைந்து இருக்கும். அதாவது கலிங்கம் என்று சொல்லக் கூடிய உடை மட்டும் அவிழ்ந்திருக்கும் என்பது ஒரு பொருளாகும். 

வீரக்கழல் அணிந்த குலோத்துங்கச் சோழன் காஞ்சியிலே தங்கியிருக்க , அவன் ஆணையால்  கலிங்கம் (கலிங்க  நாடு) குலைந்தது (அழிந்தது) என்பது மற்றொரு பொருளாகும். இதைத்தான் "காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த " என்ற அடி உணர்த்துகிறது. இவ்வாறு ஒரு சொற்றொடர் இருபொருள் பட வருவதால் இது " இரட்டுறதல் மொழி அணி " ஆயிற்று. 

இப்பாடல் கலிங்கத்துப்பரணியில் " கடை திறப்பு " என்னும் பகுதியில் அமைந்துள்ளது.

கலிங்கத்தின் மேல் படையெடுத்துச் சென்ற வீரர்கள் திரும்பி வருவதற்குக் கால தாமதம் ஆனதால் அதனைக் கண்டு மகளிர் ஊடல் கொண்டு கதவை அடைத்ததாகவும் , அப்பெண்கள் மகிழுமாறும், ஊடல் நீங்கிக் கதவைத் திறக்குமாறும் வேண்டி ,  தாம் வெற்றி பெற்ற கலிங்கப்போர் பற்றிக் கூறுவது போலவும் அமைந்ததே " கடை திறப்பு " என்னும் பகுதியாகும். அப்பகுதியில் இடம்பெற்ற மற்றொரு சுவையான பாடல் ஒன்றைக் காண்போம்.

 " வருவார் கொழுநர் எனத் திறந்தும்

வாரார் கொழுநர் என அடைத்தும்

திருகும் குடுமி விடியளவும்

தேயும் கபாடம் திறமினோ" ( கலிங்கத்துப்பரணி - 69) 

வீரர்கள் கலிங்கப் போருக்கு புறப்பட்டுப் போகிறார்கள். திரும்பி வருவோம் எனக் குறித்தக் காலமும் வந்தது. கணவன் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த மனைவியர் இரவெல்லாம் அவர் வந்து விட்டாரா , வந்து விட்டாரா என வாயில் கதவைத் திறந்து திறந்து  பார்ப்பார்கள். அவர் வரவில்லை  என அறிந்து வாயில் கதவைச் சாத்துவார்கள். மீண்டும் வந்து விட மாட்டாரா என்று திறப்பார்கள். வரவில்லை என்று அறிந்து கதவை அடைப்பார்கள். இவ்வாறாக கதவைத் திறந்தும் அடைத்தும்,  திறந்தும் அடைத்தும்  வாயில் கதவில் உள்ள சுழலும்  குடுமி ( கதவைத் திறக்கவும் மூடவும் உதவும் அச்சு)    தேய்ந்தது. ஆனால்,  இன்று உண்மையிலேயே வந்து விட்டோம். ஊடல் நீங்கி கபாடம் ( கதவு)  திறவுங்கள் என்று வீரர்கள் தங்கள் மனைவியரை  வேண்டி நின்றனர் என்பதை உணர்த்துகிறது இப்பாடல்.  

வேல்படை வென்ற  வீரன் கூட தன் வேல்விழியாளை வெல்வது கடினம்தான் . .

 " ஊடுதல் காமத்திற்கு இன்பம் "

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

 


0 Response to "தமிழ் அறிவோம்! 168. காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்தது ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel